உடலும், உள்ளமும் களைத்துச் சோர்ந்து படுத்திருந்தாள் துளசி. 'ஆஞ்சியோகிராம்' வெற்றிகரமாக முடிந்து, இரண்டு நாட்கள் ஐ.சி.யூ.வில் இருந்து விட்டு, அன்று காலையில்தான் பாட்டியை அவர்களுக்கு ஒதுக்கி இருந்த 'ஸ்பெஷல் ரூமிற்க்கு' ஷிப்ட் செய்து இருந்தார்கள்.. பாட்டி மெல்ல தேறிக் கொண்டு வந்தார்.
அப்பொழுது தான் கார்டியாலஜிஸ்ட் டாக்டர்.சுதாகரன் பாட்டியின் உடல் நலத்தை செக் செய்து விட்டு சென்றிருந்தார்.. அவரது உடல் நிலை நன்கு தேறி வருவதாகவும், பி.பி.யும், சுகரும் மாத்திரையின் உதவியுடன் இன்னும் கொஞ்சம் குறைத்து விட்டு ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்து பை பாஸ் சர்ஜரி செய்யலாம், என்று சொல்லி விட்டு சென்றிருந்தார். அவர் சென்ற சிறிது நேரம் கழித்து டாக்டர் பாலாஜி பாட்டியை பார்க்க வந்தார்.
"என்ன பாட்டிம்மா, எப்படி இருக்கிறீர்கள்? ஒரு ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து விட்டது.. மற்றொன்றும் சீக்கரம் முடிந்து விடும்.. பின்னர் என்ன, ஜம்மென்று உங்கள் செல்ல பேத்தியின் கல்யாணத்தை முடித்து விடலாம்" என்றார் மெதுவாக.
டக்கென்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்ட பாட்டி, "என்னவோ தம்பி! உன்னைப் பார்த்தால் என் மகனைப் பார்ப்பது போலவே இருக்கிறது.. ஏனோ எனக்கு கொஞ்சம் பயமாகவே இருக்கிறது.. நான் இந்த ஆபரேஷனில் பிழைப்பேனோ என்னவோ! இந்த பெண் துளசிக்கு, ஒரு வழி செய்யாமல் போய் விடுவேனோ என்று இருக்கிறது.. அவளை ஒருத்தன் கையில் பிடித்து கொடுத்தால் தானே என் கடமை முடியும்.. நீங்கள் கூறியபடி, திருமணம் நடத்த நான் இருப்பேனா? என் மனது ரொம்பவும் கலங்குகிறது" என்றார் துக்கத்துடன்.
"பாட்டி, நீங்கள் கவலையே பட வேண்டாம்.. அதைப் பற்றி பேசத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். உங்கள் பேத்தி துளசி, ரொம்பவும் அதிர்ஷ்டசாலி.. இல்லையென்றால் ஹாஸ்பிடலில் இப்படி ஒரு வரன் தகையுமா?" என்ற டாக்டர். பாலாஜியை, ஒன்றும் புரியாமல் பார்த்த பாட்டிக்கு,
"பாட்டி, துளசிக்கு ஒரு சூப்பர் மாப்பிள்ளை வரப் போகிறது.. பையனுக்கு வயது இருபத்தேழு.. ரொம்ப வசதியான குடும்பம்.. பரம்பரை பிசினஸ்யுடன் சொந்த கம்ப்யூட்டர் கம்பெனியும் இருக்கிறது.. இரட்டையர்களில் ஒருவன்.. பெயர் ராம் கரண். இரண்டு நாட்களுக்கு முன் நமது மருத்துவ மனைக்கு வந்தவர், நமது மருத்துவமனை கோயிலில் நின்று வேண்டிக் கொண்டிருந்த துளசியை பார்த்து மயங்கி பிடித்து போய்விட, அங்கிருந்த என்னிடம் விஜாரித்தார். அவர் மூலமாகத் தான் இந்த ஆபரேஷனுக்கு பணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று அறிந்தவர், வியந்து விட்டார்.. துளசியை பிடித்து போய் விட்டதால், மண முடிக்க விரும்பி, என்னிடம் உங்களைப் பற்றிய முழு விவரமும் அறிந்து கொண்டார்.. அவர் செய்த பண உதவிக்காக ,இந்த திருமணம் இருக்கக் கூடாது என்றும், துளசியை ரொம்பவும் பிடித்து போய் விட்டதாலேயே மணமுடிக்க விரும்புவதாகவும் கூறினார். அவருடன் கூடப் பிறந்த ராம் சரணும் மிகவும் நல்லவன்.. பெற்றோர்களும் அன்பானவர்கள்.. பரம்பரை பணக்காரர்கள்.. பராம்பரியத்தை போற்றுபவர்கள்.. மொத்தத்திலே அந்த குடும்பத்திற்க்கு நான் கியாரண்டி.. கண்ணை மூடிக் கொண்டு நீங்கள் துளசியை கட்டி வைக்கலாம்" என்று கூறி முடித்தார்.
அமைதியாக டாக்டர் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தாள் துளசி.. ' அப்பாடி, டாக்டர் ஒரு வழியாக குண்டை தூக்கி போட்டு விட்டார்.. இனி பாட்டியை எப்படியும் சம்மதிக்க வைத்து விடுவார்.' என்று நினைத்தவள் மேலும் அங்கு நடப்பவைகளை பார்கலானாள். பாட்டிக்குத் தலை கால் புரியவில்லை.. சற்று சந்தோஷப் பட்டவர், பிறகு கொஞ்சம் சிந்தனை வயப்பட்டார்.
'என்ன பாட்டி, ஒண்ணும் பேச மாட்டீங்கறீங்க? என்ன யோசிக்கிறீர்கள்?"
"டாக்டர், ஒன்றுமில்லை.. இந்த விஷயத்தை கேட்க எனக்கு சந்தோஷமாகவே இருக்கிறது!.. என் பேத்திக்கு தானாகவே வரன் அமைவது எனக்கு மகிழ்ச்சியானது தான்.. ஆனால் ஏதோ ஒன்று இடிக்கிறதே!.. இவ்வளவு சிறப்புகள் நிறைஞ்சவங்க ஏன் எங்களை மாதிரி ஏழையை தேர்ந்தெடுக்கணும்..சரி பையனுக்கு துளசியை ரொம்ப பிடித்து விட்டாலும், அவனை பெற்றவர்கள் எப்படி சம்மதம் சொல்லுவார்கள்?..அவர்களோ, பரம்பரை பணக்காரர்கள் ..பாரம்பரியம் மிக்கவர்கள்.. என்ன தான் நாங்களும் நல்ல பராம்பரியத்தை கொண்டவர்கள் ஆனாலும், ஏழை துளசியை எப்படி ஏற்பார்கள்" என்று தன் சந்தேகத்தை கேட்டார் அந்த மூதாட்டி.
பாட்டியின் புத்திசாலித்தனத்தை மனதுக்குள் மெச்சிய டாக்டர். பாலாஜி, கவலைப் பட வேண்டாம் பாட்டி.. பிள்ளைகளின் பேச்சை தட்ட மாட்டார்கள் அவர்கள் பெற்றோர்கள்.. ரொம்பவும் யோசிக்காதீர்கள்.. எல்லாம் நல்லதே நடக்கும்.. மற்றும், அவர் தந்தை என் பால்ய நண்பன் தான்.. எனக்கு அவர்களைப் பற்றி தெரியும். உங்களைப் பார்ப்பதற்காகவே இன்று அவர்கள் இருவரும் வந்திருக்கிறார்கள்.. வெளியே வெயிட் செய்து கொண்டிருக்கிறார்கள்.. அவர்களை உள்ளே அழைக்கட்டுமா? என்று கேட்டார்.
"நான் அவர்களை பார்க்க வேண்டுமே.. உடனே உள்ளே வரச் சொல்லுங்கள்." என்றார் பாட்டி.
வெளியே சென்ற டாக்டர். பாலாஜியுடன் உள்ளே வந்த அந்த இரட்டையர்களை கண் சிமிட்டாமல் அச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி.. இரண்டு முறையே அவர்களை பார்த்திருந்த துளசியும் அவர்களில் யார் கரண், யார் சரண் என்று கண்டு பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.
சற்று முன்னால் வந்த கரண், "பாட்டி நான் தான் ராம் கரண்.. இவன் என் உடன் பிறப்பு ராம் சரண்".
"எப்படி இருக்கிறீர்கள் பாட்டி? வலி ஏதும் இருக்கிறதா?" என்று மெல்ல பாட்டியின் கையைப் பற்றி கேட்டான்.
"தம்பி.. நீங்கள்தான் என் துளசியின் மாப்பிள்ளையா?" என்று கேட்டவர், 'இவ்வளவு அழகா என் மாப்பிள்ளை!! என்ன கம்பீரமாக இருக்கிறார்!! அசல் ராஜகுமாரன் தான்!!.. துளசி மிகவும் அதிர்ஷ்டசாலி'.. என்று எண்ணியவர், ஏனோ அந்த குடுகுடுப்பைக்காரன் வாக்கு பலித்து விட்டது என்றே அப்பொழுது அவருக்கு தோன்றியது.
கரணோ, " பாட்டிம்மா, நீங்கள் நினைப்பது சரியே.. நான் தான் துளசியை மணக்க கேட்டவன்.. இரண்டு நட்களுக்கு முன் துளசியை கோயிலில் பார்த்தவுடனேயே பிடித்து விட்டது.. டாக்டரிடம் அவளைப் பற்றி விஜாரித்து அறிந்து கொண்டேன்.. உங்கள் குடும்ப சூழ் நிலையும் தெரிந்தது.. ஹார்ட் சர்ஜரி பற்றியும் அறிந்து கொண்டேன்.. எங்கள் டிரஸ்ட் மூலம் உங்களுக்கு பண உதவி கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே.. பண உதவி செய்ததனால் , உங்களை நான் 'கம்பெல்' செய்ய விரும்பவில்லை.. துளசியை மிகவும் பிடித்து போய், எங்கள் குடும்பத்திற்கு துளசி ஏற்றவள், பொருத்தமானவள் என்றே உங்கள் சம்மதத்தை கேட்க வந்துள்ளேன்.. துளசியை என் கண் போல் பார்த்துக் கொள்வேன்.. எங்கள் பெற்றோருக்கும் இதில் விருப்பமே.. அவர்கள், எங்கள் சொந்த ஊருக்கு இப்பொழுது சென்றிருக்கிறார்கள்.. ஊரில் இருந்து வந்தவுடன், உங்களை முறைப்படி வந்து பெண் கேட்பார்கள்.. முதலில் உங்கள் சம்மதம் வேண்டும்" என்று அடக்கத்துடன் கேட்டான் .
முதல் பார்வையிலேயே கரணைப் பிடித்து போய் விட, மேலும் அவன் பேச்சைக் கேட்டவர், 'எவ்வளவு பெரிய பணக்காரன்.. இவ்வளவு தன்மையாக, அடக்கத்துடன் பேசுகிறானே' என்று வயந்து,
"மாப்பிள்ளை", தன் அழைப்பிலேயே தன் மனதை வெளிபடுத்தியவர், "எனக்கு பூரண சம்மதம்.. துளசிக்கும் உங்களை பிடித்து இருப்பது போலவே தோன்றுகிறது.. என்னம்மா துளசி?" என்று கேட்ட பாட்டியை பார்த்து மெல்ல தலையாட்டினாள் துளசி.