தயக்கத்துடன் அவன் முகம் பார்த்தபடியே' 'இன்னைக்கு உங்களுக்கு பர்த்டே. கிஃப்ட் வாங்க அப்பாகிட்டே பணம் வாங்கி வெச்சுக்கலை. அதனாலே ஆத்திலே இருந்ததை வெச்சு ஸ்வீட் பண்ணிண்டு வந்தேன். கீழே எல்லார் முன்னாடியும் கொடுக்க என்னமோ மாதிரி இருந்தது... அதான் தனியா... நீங்க சாப்பிடுவேளா?' அவள் அதை அவன் முன்னே நீட்ட, ஸ்வீட்டை விடுத்து அவளையே அள்ளிக்கொள்ள வேண்டும் போலே இருந்தது அவனுக்கு.
சந்தோஷ மழையில் நனைந்தவனாக ஒரு ஸ்வீட்டை எடுத்து அவளுக்கு பாதி ஊட்டி விட்டு இன்னொரு பாதியை அவன் வாயில் போட்டுக்கொண்டான்.
'தேங்க்ஸ்டா கோதைப்பொண்ணு..' என்றான் அவள் கன்னம் கிள்ளி.' ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு'
அவள் தோள்களை பிடித்து அவளை கட்டிலில் அமர்ந்திவிட்டு தானும் அவள் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தான் கோகுல். அடுத்த ஒரு மணி நேரத்தில் 'அவனுடைய சிறு வயது விளையாட்டுகளில் ஆரம்பித்து அவனது ஏ.டி.ம் கார்ட் பின் வரை அத்தனையும் அத்தனையும் அவளிடம் கொட்டி கொட்டி தீர்த்திருந்தான்'
விழி விரிய அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கோதை. அவளது இமைக்காத பார்வை அவனை கொஞ்சம் தன்னிலை படுத்த சின்ன புன்னகையுடன்.....
'ரொம்ப மொக்கை போட்டுட்டேனோ...' என்றான் அவள் முகம் பார்த்தபடியே.
'ம்? ம்ஹூம்..' அவள் இடம் வலமாக தலை அசைக்க சிரிப்புடன் அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டான் கோகுல்
'நேக்கே ஏன்னு தெரியலைடா. ஆனா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான் பிறந்ததிலிருந்தே நான் எது கேட்டாலும், ஒண்ணு கேட்டா அது நாலா கிடைக்கும். ஸோ.. எதுக்காகவும் நான் இதுவரைக்கும் நான் ஏங்கினது இல்லை. எது மேலேயும் பெருசா ஆசையும் இல்லை.
ஆனா நீ... நீ எனக்கு பொக்கிஷம்டா கோதைப்பொண்ணு... அது ஏன் அப்படின்னு கேட்டா தெரியலை. பட் உன்னோடவே இருக்கணும் போலே இருக்கு. உன் கூட பேசிண்டே இருக்கணும் போலே இருக்கு. எத்தனை வருஷம் ஆனாலும் சரி, நமக்கு குழந்தை பிறந்தாலும் சரிடா, உன்னை இதே மாதிரி என் பொக்கிஷமா வெச்சுப்பேன்....' கண்களில் காதல் பொங்க பொங்க சொன்னவனின் முகத்தையே பார்த்திருந்தாள் கோதை.
மாலையில் பார்ட்டி. அவனுக்கு தானே பிறந்தநாள்??? ஆனால் அவளுக்கும் சேர்த்து அலங்காரம் நடந்தது. விருந்தினர் கூட்டம் சற்று அதிகம். வந்திருந்த ஒருவர் விடாமல் அனைவரிடமும் அவளை அறிமுகம் செய்து வைத்தான் கோகுல்
'இது கோதை. என்னோட வொய்ஃப்!!!!'
இன்னும் நிச்சியம் கூட ஆகவில்லையே அதற்குள்ளாகவே மனைவி என்கிறானே??? அவளுக்கே கொஞ்சம் வியப்புதான். சொல்லபோனால் குடும்பத்தில் இருந்த அனைவருமே அவளிடம் ஒட்டிகொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதனிடையே.....
'அவள் எப்படி வருவாள்? அவளுக்கு தான் இந்த வீடு தெரியாதே? ஒரு வேளை போன் செய்து யாரையாவது கேட்டுக்கொண்டு வருவாளோ ???' மனம் இப்படி எல்லாம் யோசிக்க... ஏனோ அக்காவின் ஞாபகம் வந்து வந்து போக அவ்வப்போது அவளை எதிர்பார்த்து கோதையின் கண்கள் வாசலுக்கு சென்று, சென்று ஏமாற்றத்துடன் திரும்பாமல் இல்லை
கோதையையும் - கோகுலையும் பார்த்து 'ஜோடி பொருத்தம் பிரமாதம்' என்று சொல்லாதவர்கள் இல்லை. அவர்கள் இருவரையும் சேர்த்து புகைப்படங்கள் கூட எடுத்தாகி விட்டிருந்தது. பார்ட்டி முடிந்திருக்க தேவகிக்கே மனம் கேட்கவில்லை.
'ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்கோடா ஆரத்தி எடுத்திடறேன். நியாயமா கல்யாணத்துக்கு அப்புறம் தான் ஆரத்தி எடுக்கணும். ஆனா இன்னைக்கு உங்க ரெண்டு பேர் மேலையும் தான் எல்லார் கண்ணும். சொல்லப்போனா என் கண்ணே பட்டிருக்கும்' இருவரையும் நிற்க வைத்து ஆரத்தி சுற்றி இருந்தார் அவர்.
சில நிமிடங்கள் கழித்து மெல்ல அவனருகில் வந்தாள் கோதை 'அக்கா இன்னும் வரவே இல்லை' என்றாள் மெல்ல.
'அதானே???' என்றபடி கை திருப்பி நேரம் பார்க்க நேரம் இரவு ஒன்பதை தொட்டிருந்தது. இந்தா போன் பண்ணிப்பாரு கைப்பேசியை அவளிடம் நீட்டினான்.
'ஸ்விட்ச்ட் ஆஃப்...' என்றபடியே அவள் அவனை குழப்பத்துடன் பார்க்க அப்போதுதான் நினைவு வந்தவனாக தலையில் கை வைத்துக்கொண்டான் கோகுல்.
'கார்த்தாலயே உங்க அப்பா போன் பண்ணார்டா. வந்ததும் உன்னை அவர்கிட்டே பேச சொன்னார். நான் மறந்தே போயிட்டேன். முதலிலே அவர்கிட்டே பேசு.
'இல்லை இப்போ வேண்டாம். இன்னும் அக்கா வரலையான்னு டென்ஷன் ஆவார். நேக்கு ஆத்துக்கு போகணுமே ப்ளீஸ் ...' என்றாள் கோதை.
'இரு இரு. இதுக்கு எதுக்கு ப்ளீஸ்? நானும் உன் கூட வரேன் இரு. .தனியா போக வேண்டாம்...' அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவளுடன் புறப்பட்டான் கோகுல்.
வீடு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும். இன்னும் அக்கா வந்திருக்கவில்லை. அவள் கைப்பேசியை தொடர்பு கொள்ள செய்த முயற்சி தோல்வியுற கேட்டான் கோகுல்.