'போதும்... மகனை பார்த்தாகி விட்டது. அவன் என் கையால் சாப்பிட்டும் விட்டான். இதற்கு மேல் எந்த குழப்பமும் வேண்டாம். என்னை பார்க்காமல் அவன் கிளம்பி விடுவதே நல்லது.'
சாப்பிட்டு முடித்திருந்தனர் அனைவரும். தனது இருக்கையை விட்டு எழுந்தாள் தீக்ஷா. கையை கழுவிக்கொண்டு வந்த அந்த சில் வண்டின் மனம் இன்னமும் அந்த புகைப்படத்தின் மீதே. அது எதோ ஒரு பெரிய பொக்கிஷம் போலவே தோன்றிக்கொண்டிருந்தது அதற்கு.
அதை தன்னிடமிருந்து யாரவது பறித்துக்கொண்டு விடுவார்கள் என்ற ஒரு பயம் அதன் அடி மனதில். அதை எப்படியாவது எங்காவது பத்திரப்படுத்தி விட வேண்டுமென்ற தவிப்புடனே அலைந்துக்கொண்டிருந்தன அந்த சின்ன கண்கள். அப்போது அதன் கண்ணில் பட்டது அந்த கைப்பை!!! அது அருந்ததியின் கைப்பை!!!!
'ஒளித்து வைத்து விடலாம்.!!!!! அந்த கைப்பையினுள்ளே ஒளித்து வைத்துவிடலாம் இதை!!!! . அப்போதுதான் இது யார் கண்ணிலும் படாது. யாரும் இதை என்னிடமிருந்து பறித்துக்கொள்ள மாட்டார்கள்'
யாருமே கவனிக்காத ஒரு நிமிடத்தில் அருந்ததியின் கைப்பையை திறந்து அந்த புகைப்படத்தை அதனுள்ளே போட்டு விட்டிருந்தாள் தீக்ஷா. வேலையை முடித்துவிட்ட நொடியில் அப்படி ஒரு நிம்மதியான பாவம் அவளிடம்.
'அப்பாடா இனி அது பத்திரமாக இருக்கும்' தனக்குதானே சிரித்துக்கொண்டது ஏதும் அறியா பிஞ்சு.
'எங்கே ஜானகி அம்மா. இன்னுமா வேலையா இருக்காங்க வரசொல்லுங்க அவங்களை.' சாப்பிட்டு முடித்து விட்டு சோபாவில் அமர்ந்த படியே சொன்னான் சஞ்சா.
அவன் அழைத்த செய்தி அவரை அடைந்து, சில நிமிடங்கள் கரைந்த பின்னரும் வெளியே வரவில்லை ஜானகி.
'என்னாச்சு இவங்களுக்கு??? ஜானகிம்மா...' அழைத்தான் சஞ்சா.
அவன் குரல் அவர் செவி தொட்ட போதும் அசைவின்றி நின்றார் அவர். 'வேண்டாம் இறைவா. இது வேண்டாம்...'
யோசனையுடனே சஞ்சா ரிஷியை திரும்பி பார்க்க, சற்றே சத்தமாக ஒலித்தது ரிஷியின் குரல்.........
'ஜா.....ன.....கி....ம்......மா...'
உடல் மொத்தமும் குலுங்கி அடங்கியது ஜானகிக்கு. 'என்னை என் மகன் அழைக்கிறான். என்ன செய்வேன் இப்போது???'
'ஜானகிம்மா.... கொஞ்சம் வெளியே வாங்க. நான் உங்களை பார்க்கணும்...' மறுபடியும் அழைத்தான் மகன்.
'இனி இயலாது...' புரிந்து போனது அம்மாவுக்கு. 'இறைவா ... சக்தி கொடு. என் மகனின் முன்னால் நான் சென்று நிற்கும் போது என் கண்ணில் கண்ணீரை மட்டும் கொடுத்துவிடாதே....' கூடத்தை நோக்கி நடந்தன அவர் பாதங்கள்....
மழைச்சாரல் தொடரும்......
{kunena_discuss:886}