05. காதல் பின்னது உலகு - மனோஹரி
அதிபன் அவளைப் பின்பற்றி வீட்டை விட்டு வெளியில் வந்தான். இந்த ஜுவலோட தப்பிச்சு ஓடப் போறாளா? இல்லை எங்கயாவது ஒளிச்சு வச்சுட்டு காணாம போய்ட்டுன்னு ட்ராமா போடப் போறாளா?
ஆனால் வெள்ளைகோழியோ நிதானமாக இவனது காரை நோக்கித் தான் சென்றாள். முன் சென்றவள் காருக்குள் ஏறி கதவை மூடிக் கொண்டாள். காரை லாக் பண்ணாமல் சென்றதே அப்போது தான் ஞாபகம் வருகிறது இவனுக்கு. காரை நோக்கி போன இவன் அவள் ஏறிய சீட் வரிசையில் இருந்து பார்த்தால் சட்டென பார்வையில் பட முடியாதவாறு காரின் பக்கவாட்டில் நின்று அவள் என்ன செய்கிறாள் என கவனித்தான்.
அவளோ ஒரு வினோதமான வேலையை செய்து கொண்டிருந்தாள். வரும் போது அவள் அமர்ந்திருந்த சீட்…..அடுத்து அருகிலிருந்த சீட்ஸ் என தன் உள்ளங்கையை அதில் வைத்து வைத்து எடுத்து என ஏதோ…. அவளது வாய் வேறு எதையோ சத்தமில்லாமல் முனுமுனுத்துக் கொண்டிருந்தது.
அதிபனுக்கு சட்டென ஞாபகம் வருவது மந்திரம் ஓதுவது தான். ஒரு கோழிய பார்த்து கூட விட்ச்க்ராஃப்ட் என்றாளே….பில்லி சூன்யம் மாதிரி எதுவும் செய்றாளோ? பில்லிசூன்யத்தைப் பற்றியெல்லாம் இவனுக்கு கவலையில்லை….ஆனால் அவள் செயல் நிச்சயம் ஒரு க்யூரியாசிட்டியை கிளறி விடுகிறது இவனுள்.
‘உண்மையில் இந்த வெள்ளைக்கோழிக்கு என்னதான் வேணும்?’
அடுத்து இவன் நின்றிருந்த புறத்துக்கு அடுத்த புறமாக காரைவிட்டு இறங்கியவள் இப்போது காரின் மீதும் கையை வைத்து அதே ஓதல்……
அடுத்து மெல்ல காரைவிட்டு நடக்கத் தொடங்கினாள். இவன் பார்வை படுமிடத்திலிருந்த ஒரு மரத்தினடியில் சற்று நேரம் நின்றவள், பின் அடுத்தும் தன் நடையை தொடர்ந்து அந்த தெரு முனையில் திரும்ப. இப்பொழுது அதிபன் அவளை மீண்டுமாக பின் தொடர்ந்தான். அவள் அருகிலிருந்த சர்ச்சுக்குள் சென்றாள்.
சர்ச்சைப் பார்த்துதான் வந்தாளா? இல்லை இவன் பார்க்கிறதைப் பார்த்ததும் உள்ள நுழஞ்சுகிட்டாளா?அதென்ன விட்ச்க்ராஃப்டும் செய்துட்டு அடுத்து சர்ச்சுக்கும் போறது? என்னதான் செய்றா இவ?
இவனும் உள்ளே நுழைந்தான். வெறும் நீள ஹால் மட்டுமே இருந்த அந்த சர்ச்சின் இடப்புற சுவரில் நாட்டுக்காக ஜெபிக்கிறவங்களுக்கு வசதியாக இந்தியா மேப் மாநிலங்களின் பெயர்களோடு பெயிண்ட் செய்யப் பட்டிருக்க, அங்கு போய் அதன் மீதும் கை வைத்து வெள்ளக்கோழி அதே ஓதல்….
அப்பொழுதுதான் அவனுக்கு புரிகிறது…ஓ கோழி சூன்யம் வைக்கலை….. வாய்க்குள்ளயே ஜெபம் பண்ணுது…… ஆனாலும் காரையெல்லாம் தொட்டு தொட்டு….. ரொம்ப ஸ்பிரிசுவல் கோழி போல…. ஆனா அன்னைக்கு பிக்பாக்கெட் அடிச்சுதே அது என்னவாம்? கடவுள் அதை ஒத்துப்பாரோமோ? எல்லாம் டிராமா…..முதல்ல இவ கழுத்தைப் பிடிச்சு அதைப் பத்தி கேட்கனும்….
இவன் அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்க, அதற்குள் அவள் அங்கு தனிநபர் ஜெபத்திற்கென வைக்கப்பட்டிருந்த அந்த மரதடுப்புக்குள் சென்றிருந்தாள். அதிலிருந்து அவள் வெளி வர வெகு நேரமாகியது…. இவன் அவளை பாலோ பண்றதை கவனிச்சுட்டா போல…..அதான் இவ்ளவு நேரமா உள்ள ஒழிஞ்சுகிட்டா போல……….
‘என்ன ஆனாலும் உன்னைவிட்டுட்டு நான் போறதா இல்லை கோழி…..’ மனதிற்குள் சங்கல்பம் செய்து கொண்டான் அவன்.
இவன் காத்திருந்து இன்னும் கடுகடுப்பாய் ஆகிய பின் தான் அவள் வெளியே வந்தாள். அவள் வெளிப்படவும் மகா எரிச்சலுடன் தான் அதிபன் அவளை நோக்கி எட்டு வைத்தான்.…. ஆனாலும் அவள் முகத்தைப் பார்க்கவும் புரிகிறது அவனுக்கு அவள் அழுதிருக்கிறாள் என. அவள் சிவந்து வீங்கிய கண்கள் சாட்சி. அவ்வளவுதான் அதுவரை அவள் மீதிருந்த அத்தனை கோபம் எரிச்சல் எல்லாம் எங்கோ போய்விட்டது அவனுக்கு…
‘முன்னபின்ன தெரியாத நாட்டில இப்படி தனியா வந்து அழுதுகிட்டு இருக்கனும்னா……?’
அவளும் இவன் வருவதை பார்த்துவிட்டாள்தானே… நேரே இவனிடம் வந்தவள் வரும்போதே கழுத்திலிருந்த செயினை கழற்றிக் கொண்டேதான் வந்தாள். இவன் அருகில் வரவும் அதை இவனிடமாக நீட்டினாள்.
“ப்ச்…..போட்டுக்கோ….ப்ரேயர் முடிச்சுட்டியா ? கிளம்பு….. அம்மா தேடுவாங்க….” எப்படியாவது அவளை இவன் அம்மாவிடம் கொண்டு சேர்த்துவிட்டால் அம்மா பார்த்துக் கொள்வார் என்று தோன்றுகிறது இப்போது இவனுக்கு.
திரும்பி வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தான் அதிபன். அழுதிருந்த அவள் கண்களைப் பக்கத்தில் பார்க்க இன்னுமாய் கஷ்டமாய் இருக்கிறது அவனுக்கு….. உள்ளே அவன் மனதிற்குள்ளோ வேறு இரு அழுது வீங்கிய விழிகள்…..
“இல்ல சார்… நான் கிளம்புறேன்…. இங்க இருந்து ஸ்ட்ரெய்ட் பஸ் பிடிச்சு போய்ப்பேன்…. இந்த டைம்ல அப்டி கொண்டல்புரத்துக்கு பஸ் உண்டுன்னு சொல்லிருந்தாங்க…..இவ்ளவு நேரம் வெயிட் பண்ணி நைட்ல வந்து ஊர்ல இறங்க வேண்டாம்னு தான் சீக்ரம் வந்து அப்படி மாட்டிகிட்டேன்…”