“ஓ…” என்றவனுக்குள் சில கேள்விகள் தோன்ற, மெதுவாக கூட நடந்தான்…
“ஹ்ம்ம்ம்… நீங்க ஏன் தனியா நடந்து வர்றீங்க?... உங்க ஃப்ரெண்ட்ஸ்-ம் அப்பா அம்மா கூட போயிடுவாங்களா?...” என சிறுபிள்ளையாய் அவள் கேட்க,
“இல்ல… அவங்க யாரோட வீடும் இந்த பக்கம் இல்லை…” என்றான் அவனும் சிரித்துக்கொண்டே…
“ஓ… அப்போ உங்க வீடு எங்க இருக்கு?...” என கேட்டவள் அவன் பதில் சொல்லாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, “சொல்ல இஷ்டம் இல்லன்னா வேண்டாம்…” என கூற, அவனுக்கு அவளின் வருத்தம் பிடித்தமாயில்லை…
“இங்க பக்கத்துல தான் இருக்கு… சரஸ்வதி நகர் தாண்டினதும் வந்துடும்…” என சொல்ல
“ஓ… அது எங்க இருக்கு?...” என அவள் தெரியாமல் கேட்க, அவனுக்குள் சிரிப்பு மத்தாப்பூ…
“சரி… உன் வீடு எங்க இருக்கு?...”
“இன்னும் கொஞ்ச தூரம் போனதும் வந்துடும்… லஷ்மி நகர்….” என அவள் பதில் சொல்ல
“டெய்லி இப்படி தான் நடந்து போவீயா?...”
“ஆமா… நீங்க?...”
“நானும் தான்….”
“ஹ்ம்ம்… இத்தனை நாள் உங்களை நான் பார்த்ததே இல்லையே…”
“நான் ஸ்கூலில் கொஞ்ச நேரம் படிச்சிட்டு வருவேன்… அதான்…”
“எல்லாரும் ஸ்கூல் விட்டதும் விளையாட தான் செய்வாங்க… நீங்க மாத்தி சொல்லுறீங்க?...”
“எனக்கு விளையாட்டை விட படிக்க பிடிக்கும்… அதனால தான்…” என அவன் இலகுவாக சொல்ல
“ஓ… அப்போ நீங்க நல்லா படிப்பீங்களா?...”
“ஹ்ம்ம்… உன் அளவுக்கு இல்ல… ஆனா கொஞ்சம் நல்லா படிப்பேன்…” என அவன் புன்னகையுடன் சொன்னதும்,
“அதென்ன என் அளவு?... நான் எப்ப சொன்னேன் நான் நல்லா படிப்பேன்னு?...”
“நீ தான சொன்ன… அவனோட நீ நிறைய மார்க் எடுத்துட்டேன்னு தான் உன்னை தள்ளிவிட்டு வம்பு பண்ணுறான்னு…”
“ஹ்ம்ம்… ஆமால்ல…” என அவள் சிரிக்க,
“ஆமா தான்…” என்றவனுக்கு, அவள் ஒரு சுற்றுப் பாதையில் நுழைவது தெரிய,
“இங்க எங்க போற?... இது சுத்து… உன் வீட்டுக்கு இப்படி போனா சீக்கிரம் போயிடலாம்…” என அவன் சொன்னதும்,
“தெரியும்….” என்றாள் அவள் பட்டென்று…
“என்ன….?...” என அவன் கேள்வியாய் நிறுத்த, “நான் வரேன்…” என்றபடி சிரித்துக்கொண்டே வேகமாக அந்த சுற்றுப்பாதையினுள் சென்றாள் அவள்…
“என்னடி இன்னைக்கு சீக்கிரமே ஹோம் வொர்க் முடிச்சிட்ட போல?...” என கோகிலவாணி அவளருகில் அமர்ந்து கொண்டு கேட்க
“ஆமா பாட்டி… முடிச்சிட்டேன்…” என்றாள் அவளும் சிரிப்புடன்…
“சிரிக்கும்போது அழகா இருக்குறடீ….” என்றபடி பேத்திக்கு திருஷ்டி கழித்தார் கோகிலவாணி…
அவர் அப்படி சொன்னதும், அவளுக்கு அவனின் நினைவு வந்தது…
குழி விழும் கன்னத்துடன் அவன் சிரித்த நேரங்கள் நினைவுக்கு வர, அவளின் புன்னகை விரிந்தது…
“பாட்டியிடம் அவனைப் பற்றி சொல்லலாமா?...” என யோசித்தவள் உடனேயே அந்த முடிவை மாற்றிக்கொண்டாள்…
“எதற்கு தேவை இல்லாமல் சொல்லி… இவர் திட்டுவது பத்தாது இவர் மகனும் நம்மள திட்டணும்…” என யோசித்தவள், அவனைப் பற்றி மறந்தும் கூட வீட்டில் சொல்லவில்லை…
“பாட்டி நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீயே?...” என அவள் பீடிகை போட
“என்னடீ நதி… சொல்லு… என்ன விஷயம்?...”
“அம்மா எப்படி இருப்பாங்க பாட்டி?... அவங்க போட்டா உங்கிட்ட இருக்கா?...” எனக் கேட்டுக்கொண்டிருக்கும்போது
“அவளைத்தான் நீ கொன்னுட்டீயே சனியனே… அப்புறம் எதுக்கு அவளை கேட்குற?...” என முகத்தில் வெறுப்போடு வந்தார் சேஷாத்திரி…
அவரின் கோபமான முகத்தை பார்த்தவள், கோகிலவாணியின் பின் ஒளிய, “ஏண்டா சேஷூ, நோக்கு அறிவே கிடையாதா?... சின்னப்பிள்ளையைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லுற?... உன்னை இப்படி அறிவுகெட்ட தனமா பேசுறதுக்கா உன்னை நானும் உன் தோப்பனாரும் வளர்த்து ஆளாக்கி படிக்க வைச்சோம்…” என அவர் ஆதங்கத்துடன் பேச,
“எது இதுவா சின்னப்பிள்ளை?... இது பிசாசு… என் சித்ராவை கொன்ன பேய்…. நம்ம குடும்பத்துக்கு வந்த பீடை… இது எந்த நேரத்துல வந்துச்சோ என் சித்ரா, என் தோப்பனார், எல்லாரையும் கொன்னுட்டு… சனியன்… சனியன்… இன்னும் இதால யார் யார் உயிர் போக போகுதோ தெரியலை….” என அவர் தலையில் அடித்துக்கொள்ள
கோகிலவாணியின் பின் இருந்த அவளின் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது…