சுசீ..கடைசி வரை எங்களுக்கு உதவிய அந்த முக்கியமானவர் யார்?என்பதை நீ சொல்லவே இல்லையே சுசீ..
அவரைப் பார்த்து நன்றி சொல்லாமல் செல்வது மனதிற்கு மிகவும் துன்பமாக உள்ளது சுசீ என்றல் மதி.
சாகப்போகும் அந்த கடைசி நேரத்திலும் மதியின் வார்த்தை வேதனைச் சிரிப்பைத் தந்தது சுசீக்கு. பெற்ற தாய் தந்தையையும் உடன் பிறந்த சகோதரனையும் பார்க்க வேண்டுமென இளவரசி ஒருமுறை கூட சொல்லாதது சுசீக்கு வேதனையைத்தந்தது.என்ன பெண் இவர் என்று கோபம் கூட வந்தது.
ஆனால் கோபத்தை வெளிப்படுத்தும் நேரமா அது?அவள் பார்வை தன்னிச்சையாய் மகாராணி ஒளிந்து நிற்கும் இடம் நோக்கிச் சென்றது.அவளின் வலது கரம் அவ்விடம் நோக்கி நீண்டது.
குதிரையின் பின்புரமாய் இருந்த அவ்விடத்திலிருந்து வெளிவந்த அவ்வுருவத்தை மெல்லக் கழுத்தைத் திருப்பி ஒரே நேரத்தில் பார்த்தனர் மதியும் ஹஸ்தனும்.
அடுத்தகணம் அதிர்ந்து போனாள் மதி.மதி மட்டுமா?ஹஸ்தனும்தான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...
படிக்க தவறாதீர்கள்...
தாயே...நீங்களா?..அவ்விடமே அதிரும் வண்ணம் மதி கத்த சட்டென அவள் வாயைப் பொத்திய ஹஸ்தன் குதிரையைப் பிணைத்திருந்த கயிற்றைப் பிடித்திழுக்க அவனின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அவனின் குதிரை காற்றைக் கிழித்துக்கொண்டு நாலு கால் பாய்ச்சலில் பறந்தது.
முடிந்தது.இளவரசி மதிக்கும் பாண்டிய நாட்டிற்குமான பந்தம் இத்தோடு முடிந்தது.இனி அவளின் காலகள் இப்பாண்டிய நாட்டின் மண் மீது பதியப்போவதில்லை.இனி அவளுக்குத் தாய் இல்லை தந்தை இல்லை தம்பியுமில்லை..எல்லா பந்தமும் இந்த இரவோடு முடிந்தது.
தூரத்தில் புள்ளியாய் குதிரை மறையும் வரைப் பார்த்துக்கொண்டே இருந்தனர் ராணி ருக்மாவும் சுசீயும் காளியும்...தப்பு தப்பு இவர்கள் மட்டுமா அங்கே நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தனர்?
அதோ அங்கே இருட்டில் ஓர் கருப்புக்குதிரை நிற்கின்றதே அதில் இரு உருவம் அமர்ந்திருப்பதுபோல் தோன்றுகிறதே?..அவர்கள் யார்?
ஆம்..அந்த உருவங்கள்..அவர்கள்..மன்னர் அதிவீரனும் சுந்தர பாண்டியனுமல்லவா?
தான் ஒரு ஆண் இன்னாட்டின் மன்னன் என்பதையும் மறந்து அழுது கொண்டிருந்தார் அதிவீர பாண்டிய மன்னர்.அவர் ஆண் என்றாலும் ஒரு நாட்டின் மன்னர் என்றாலும் அவர் ஒரு தந்தை அல்லவா?பெற்ற மகள் இப்படி பெற்றவர்களை மறந்து தம்பியை மறந்து நாட்டை மறந்து விரும்பிய ஒருவனோடு சொல்லாமல் கொள்ளாமல் தான் செய்யும் இக்காரியம் எத்தகைய விளைவுகளை தன்னை பெற்றவர்களுக்கும் நாட்டிற்கும் தரப்போகிறது என்று சிறிது சிந்திக்காமல் பாசம் மறந்து செல்கிறாளே என்ற தவிப்பில் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட பார்த்துக்கொண்டிருந்தார்.மகளே..மகளே..மதி..மதீ..எங்களை விட்டு எங்கே செல்கிறாய்?உன் தந்தையை விட்டுப் பிரிய உன் மனம் எப்படித் துணிந்தது..?என் உயிருக்கும் உயிரான என் மகளே..நீ பிறந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேது?நீ எப்படியெல்லாம் வாழப் பிறந்தவள்..இன்னாடு உன்னால் எப்பேர்க்கொத்த பெரும் புகழை அடையப்போகிறது என்றெல்லாம் உன் ஜாதகம் பார்த்து ஜோதிடர்கள் சொன்னார்களே?.இப்போது அவை அனைத்தும் பொய்யாகிப் போய்விட்டனவே?என்னை ஏமாற்றவா ஜோதிடர்கள் அன்று அப்படிச் சொன்னார்கள்?வேண்டாம் மகளே வேண்டாம் வந்து விடு மகளே மீண்டும் திரும்ப வந்துவிடு..இந்தத் தந்தையைப் பிரியாதே மகளே..
கதற ஆரம்பித்தார் அந்த பாசம் மிக்க தந்தை...
அக்கா..அக்கா..போகதீர்கள் அக்கா..எனைப் பிரிந்து போகாதீர்கள் அக்கா..கட்டுபடுத்தமுடியாத சோகத்தோடு அழுதுகொண்டிருந்த சுந்தர பாண்டியன் தந்தையை அமைதிபடுத்த முடியாமல் தானும் அழுது கொண்டிருந்தான்.
அவர்கள் அமர்ந்திருந்த குதிரைக்கும் சோகம் தாங்க முடியவில்லையொ என்னவோ அது சட்டெனத் திரும்பி நடக்க ஆரம்பித்தது.
மதீ..மகளே மதீ..வெடித்துக் கிளம்பியது மகாராணியின் தொண்டையிலிருந்து அழுகையும் .அத்தோடு கூடவே ரத்தமும் கொப்பளித்து வெளியே வந்தது.நிலை தடுமாறிக் கீழே விழுந்தார் மகாராணி ருக்மா..
மகாராணீ..அவரை நோக்கி ஒடி வந்தாள் சுசீ..நாலு எட்டு வைப்பதற்குள் அவள் வாயிலிருந்து ரத்தக் குழம்பு வெளியே வர அப்படியே மல்லந்து சாய்ந்தவளின் கண்கள் மூடிக்கொண்டன.பின்னர் சுசீயிடம் எந்த சலனமும் இல்லை.
அருகே நின்றுகொண்டிருந்த காளி சுசீ கீழே விழவும் என்னவோ ஏதோவென்று அவளை நோக்கி ஓடினான்.
கணப்பொழுதில் அவனுக்குப் புரிந்து போயிற்று.சு..சீசீசீ..அந்த பிராந்தியமே அதிரும் வண்ணம் கத்தியபடி சுசீயின் முகத்தொடு முகம் வைத்து அழுதபோது அவன் முகத்தில் ஒட்டிய சுசீயின் ரத்தம் அவள் நெற்றியில் ரத்தப் பொட்டாய் ஒட்டியது.
நிலை தடுமாறி கீழே விழுந்த ராணி ருக்மாவின் தொண்டையிலிருந்து மெல்லிய முனகல்..சுந்தரா..கண்ணே சுந்தரா...அதுதான் அவரின் கடைசி வார்த்தையாகிப் போக கண்கள் வெறித்து வானம் நோக்க அடங்கிப் போனார் மகாராணி ருக்மா..