'ஏன்??? ஏன் இப்படி டல்லா வந்து உட்கார்ந்திட்டே??? கெஞ்சலின் மொத்த வடிவமாக இருந்தது குரல். உயிர் தொட்டதோ அவன் குரல்??? அவள் விழியோரத்தில் கொஞ்சம் ஈரம் படர...
''ப்ளீஸ் அபர்ணா... நீ இப்படி டல் ஆனா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. என் சைடுலேர்ந்து கொஞ்சம் யோசிச்சு பாரு...'
அவளது முக பாவத்தில் எந்த மாற்றமும் வரவில்லை. கண்களில் இன்னும் கொஞ்சம் நீர் சேர தளர்ந்து போனான் அவன்.
ஆற்றமாட்டாமல், தன்னையும் அறியாமல் சட்டென கேட்டே விட்டான் அவன் 'சரி விடு... சேர்த்து வெச்சிடலாமா இந்த அபர்ணாவை அருண்கூட??? அப்போ சிரிப்பியா???'
ஏன் அவள் கண்ணீரில் நான் இப்படி தோற்று போகிறேன்!!!!! அவனுக்கே புரியவில்லை.
அவனது வார்த்தைகளில் முகம் மலர நிமிர்ந்தாள் அபர்ணா. தோல்வியின் அடையாளமாக ஒரு பெருமூச்சு அவனிடம்.
'அருண் --- அபர்ணா... ரெண்டுமே 'ஏ...'. பேர் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு.' அவன் சொல்ல அழகான புன்னகை அவளிடம்.
'சீக்கிரமா முடிச்சிடலாமா கல்யாணத்தை???' அவன் இதமாக கேட்க வெட்க கோடுகளுடன் மலர்ந்தது அவள் முகம். சில நொடிகள் ஏதோ யோசனையில் அப்படியே மௌனமாகிப்போனான் பரத். பின்னர் மெல்லகேட்டான் அவன்.
'அவரை ரொம்ப பிடிக்குமா அபர்ணா உனக்கு???' கேட்டவனின் தொனியில் நிறையவே ஏக்கம்.
'ம்??? ம்...' அவள் மெல்ல தலை அசைக்க
'என்னை கண்டாதான் எரிச்சலா இருக்கு இல்ல???' கரைந்து போயிருந்த குரலில் கேட்டான் பரத்.
'அய்யோ!!! அப்படி எல்லாம் இல்லை...' அவசரமாக அவளிடமிருந்து வந்தது பதில் மொழி. சுரீர் சுரீரென எரிந்துக்கொண்டிருந்த காயத்திற்கு மெலிதாக விசிறி விட்டதை போன்றதொரு ஆறுதல் அவனுக்கு.
'நீங்க... நீங்க ரொம்ப நல்லா பாடறீங்க... அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....' சொன்னாள் குளிர் சிரிப்புடன்.
'நான் விலகிக்கொள்கிறேன் என்று சொன்னவுடன் இத்தனை ஆனந்தமாடி பெண்ணே உனக்கு???' அவன் மனம் உள்ளுக்குள் அங்கலாய்த்த போதும் அவளது சிரிப்பை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.
'யப்பா... யப்பா... இப்போதான்... சிரிப்பு வருது என் கண்...' வெளியே வரத்துடித்த கடைசி வார்த்தையை அப்படியே விழுங்கிக்கொண்டான். 'சரி இந்த சிரிப்போட அப்படியே அந்த ஜாமூனை சாப்பிடலாம் தானே???'
'ம்???'
'ஜாமூன் சாப்பிடலாமேன்னு....' கேட்டேன்
சரியென தலை அசைத்து விட்டு அவள் ஒரு விள்ளல் ஜாமூனை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட நொடியில் அங்கே வந்து அமர்ந்தான் விஷ்வா.
'அப்பாடா... ஒரு வழியா மேடம் சிரிச்சிட்டாங்க போல...' என்றபடி. எங்கிருந்தோ எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தான் போலும்.
'டைம் ஆச்சு கிளம்பலாமா???' கேட்டான் விஷ்வா.
'ஆங்.. கிளம்பலாம் விஷ்வா...' இது அபர்ணா..
'நோ... நோ... நோ.....நீங்க இன்னும் எதுவுமே சாப்பிடலை மேடம்... சாப்பிட்டாதான் போகலாம்...' என்றான் பரத் புன்னகை மாறாமல்..
'சரி... சாப்பிடறேன்...' என்று அவள் சாப்பிட ஆரம்பிக்க அவளையே பார்த்திருந்தான் பரத்.
சில நிமிடங்கள் கழித்து மூவருமே விஷ்வாவின் காரில் பயணித்துக்கொண்டிருந்தார். பின்னால் அபர்ணா அமர்ந்திருக்க முன்னால் இவர்கள் இருவரும்!!!!
கொஞ்சம் சந்தோஷமும் நிம்மதியும் கலந்த தொனியில் வாய் மூடாமல் ஏதேதோ பேசிக்கொண்டே வந்துக்கொண்டிருந்தாள் அபர்ணா. விஷ்வா அவளுக்கு பதில் சொல்லிய படியே வர, சாலையையே வெறித்துக்கொண்டே வந்துக்கொண்டிருந்தான் பரத்.
தான் ஆசைப்பட்ட பொம்மை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் குதூகலிக்கும் குழந்தையாகவே அவனுக்கு தோன்றினாள் அபர்ணா.
'அவ்வளவுதானா??? முடிந்து போனதா என் காதல்???' உள்ளுக்குள் அலை அடித்துக்கொண்டிருந்த போதிலும் அவளது சந்தோஷத்தை எந்த வகையிலும் முறித்துப்போட தோன்றவில்லை அவனுக்கு.
சில மணி நேரங்களுக்கு முன்....
'நானொருவன் மட்டிலும்... பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ.....' டி.வி. யில் பரத்தின் குரல் ஒலித்துக்கொண்டிருக்க... இமைக்காமல் அதையே பார்த்திருந்தான் அருண். ஓரிரு முறை அபர்ணாவின் முகமும் டி.வியில் வந்து போக தடதடத்து போனது அவனது இதயம். ஏதோ ஒரு உறுத்தல், ஏதோ ஒரு புரிதல்.
நண்பர்களுடன் அந்த மொபைல் ஷோரூமில் நின்றிருந்தான் அவன்.
அந்த நிலையில் அவள் மீது சந்தேகம், இவன் மீது ஆத்திரம், பொறாமை போன்றதெல்லாம் தோன்றவில்லை அவனுக்கு.. தன்னுடைய சொத்தை வேறொருவன் அள்ளிக்கொண்டு போய்விடாமல் பூட்டி வைத்துக்கொள்ளும் படபடப்பு மட்டுமே இருந்தது அவனிடத்தில்