“நடுராத்திரின்னும் பாராம தன் மனைவியை இப்படி தனியா வெளியே அனுப்பினவரா தன் தவறை உணருவாருன்னு நீங்க கேட்டீங்கன்னா, கண்டிப்பா என்னால பதில் சொல்ல முடியாது… ஆனா அவர் செஞ்சது பெரிய தப்பு… அதுக்கு அவர் தண்டனை அனுபவிச்சே ஆகணும்… அக்காவ அவர் வெளியே அனுப்பினதுக்கு, கொஞ்ச நாள் அவர் விலகியே இருக்கட்டும்… அப்போதான் பொண்டாட்டி அருமை புரிய வரும்… தானா வந்து தன் தவறை உணர்ந்து அவரே கூப்பிடட்டும்… அக்காவோட எண்ணமும் அதுவாதான் இருக்கும் எனக்கு தெரிஞ்சு… அதுவரை என்ன சமாதான தூது, மத்தவங்க விட்டாலும் அக்கா போகமாட்டாங்க… அவங்க இரண்டு பேரும் கொஞ்ச நாள் தள்ளியே இருக்கட்டும்… அக்காக்கும் நடந்த சம்பவத்துல இருந்து வெளிவர கொஞ்ச நாள் தேவைப்படும்… நீங்க, அப்பா, அம்மா, நான், அப்படின்னு எல்லாரும் அவங்களுக்கு ஆறுதலா இருந்தாலும் அவங்க நினைச்சா மட்டும் தான் அதுல இருந்து வெளிவர முடியும்… அவங்களும் வருவாங்க… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு நிறையவே… இப்போ அழதான் தோணும்… அழ தான் செய்வாங்க… மனசு வலிக்கும்போது அழறதை தவிர, வேற எதுவும் செய்ய முடியாது… தைரியம், தன்னம்பிக்கைன்னு ஆயிரம் கதை சொன்னாலும் மனசும் குழந்தை மாதிரி தான்…”
அவள் மெதுவாக ஒவ்வொன்றாக தன் மனதிலிருப்பதையும் வெளிப்படுத்த, அவனுக்கு எதுவும் பேச தோன்றவில்லை…
“இப்போ போய் எல்லாத்தையும் பேசி சண்டை போட்டு முடிச்சிட்டு வந்துட்டீங்க… நல்லது தான்… மனசுக்குள்ளேயே இத்தனை நாள் ரணத்தை பொத்தி பொத்தி வைச்சது இனி வலியை கொடுக்காமலாவது இருக்கும்… அக்காவோட பிரிவு ஒரு பக்கம் அவரை வருத்தும்னா, நீங்க பேசிட்டு வந்ததும் அவரை வருத்தும், அவர் அக்காவ இப்பவும் விரும்பினா…”
அர்னவ் செய்துவிட்டு வந்த காரியத்தால் முதலில் அவன் மேல் கோபம் கொண்டவள், கடைசியில் அவன் செய்த வேலையும் ஒருவிதத்தில், நல்லதை நடத்திக்கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் அவள் சொல்ல, அவன் முகத்தில் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்தது…
தன்னிடம் கோபித்துக்கொண்டவள், இப்போது தன் மன பாரம் இறங்கியதை எண்ணி நிம்மதி அடைவதையும் அவன் அறிந்த வேளை, அவனுக்குள் அவள் நுழைவதை உணர்ந்தான்…
அவனின் அமைதி அவளை வாட்ட,
“எதாவது சாப்பிட்டீங்களா?...” என கேட்டாள்..
“இல்ல…..”
“இப்போதான் அங்க இருந்து கிளம்பினீங்களா?...”
“ஒருமணி நேரம் இருக்கும்….”
“ம்ம்.. வீட்டுக்கு வர லேட் ஆனாலும் பரவாயில்லை… வந்ததும் கொஞ்சமாச்சும் சாப்பிடுங்க… அட்லீஸ்ட் பிஸ்கெட், பால் மட்டுமாவது… ப்ளீஸ்…..”
அவளது கெஞ்சல் கலந்த அக்கறை அவனை என்னவோ செய்ய, அவன் ஊமையானான்…
“நான் வற்புறுத்துறேன்னு நினைக்காதீங்க… அக்காவுக்காகத்தான் சொல்லுறேன்… நீங்க சாப்பிடாம இருக்குறீங்கன்னு தெரிஞ்சா இன்னமும் அவங்க மனசு காயப்படும்… ஏற்கனவே இருக்குற காயம் போதாதா?... இதுல நாமளும் காயம் கொடுக்கணுமா?...”
அவள் அழுத்தம் கொடுத்து தன்மையாக கேட்க, அவன் மனதினுள் ஆழமாக சென்றாள் அவள்…
எதுவுமே பேசாமல் சற்று நேரம் இருவருமே அமைதியாக இருக்க, அவன் அந்த மௌனத்தை கலைத்தான்…
“நீ சாப்பிட்டீயா?...”
அவ்வளவுதான்… சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது அவளுக்கு… இதுதான் இவ்வளவுதான் அவனிடமிருந்து அவளுக்கும் வேண்டும்…
சிறு அக்கறை ஒன்று போதும் அவளுக்கு அவனிடமிருந்து… எந்த சூழ்நிலையையும் அவள் எதிர்கொள்ள…
அவள் சாப்பிட்டிருக்க மாட்டாள் என தெரிந்து தான் அவன் கேட்டான்… அது தெரியாத அளவுக்கு அவளும் முட்டாள் இல்லையே…
சாப்பிடவில்லை என்று சொன்னால், திட்டுவானோ என யோசித்தே அமைதியாக இருந்தவளை அவன் வாய்திறக்க வைத்தான்…
“சொல்லு சாப்பிட்டீயா இல்லையா?...”
“இல்ல…”
“ஏன் சாப்பிடலை?....”
“பசிக்கலை…”
“ஊருக்குத்தான் அட்வைஸா?... உனக்கு அதெல்லாம் கிடையாதா?...”
“இல்ல வந்து….”
“வந்து போயின்னு கதை எல்லாம் வேண்டாம்… போய் ஒழுங்கா சாப்பிடு… சாப்பிட்டேன்னு எனக்கு கொஞ்ச நேரத்துல சொல்லணும்… நான் போனை வைக்குறேன்…”
“சரி… சொல்லுறேன்… ஆனா நீங்க வீட்டுக்கு வந்ததும் எனக்கு இன்ஃபார்ம் செய்யணும்…. சரியா?...”
“நான் வர லேட் ஆகும்… மிட்நைட் தாண்டிடும்…”
“பரவாயில்லை… கால் பண்ண வேண்டாம்… மெசேஜ் செஞ்சா போதும்…”
“நீ தூங்கு… நான் காலையில சொல்லுறேன்…”
“இல்ல… நான் தூங்கிடுவேன் நிஜமா… பட் நீங்க மெசேஜ் செஞ்சு வச்சிட்டா நான் காலையில எழுந்ததும் பார்ப்பேன்ல… எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்… அதான்…”
அவள் சற்றே இழுத்து இழுத்து சொல்ல, அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது...
அவனுக்கு நன்றாகவே தெரியும்… அவனிடமிருந்து தகவல் வராமல் அவள் தூங்கமாட்டாள் என்று…
அதை அறிந்து தான் அவன் அவளை தூங்க சொல்லி வற்புறுத்தினான்.… இப்போது அவளும் அதை சமாளிக்க முனைவதை தெரிந்து கொண்டவன்,
‘’ட்ரை பண்ணுறேன்…” என கூறிவிட்டு,
“எனக்கு தூக்கம் வருது… டயர்டா இருக்கு… தூங்குறேன்…” என்றான்…
“சரி சரி… தூங்குங்க… பார்த்து பத்திரம்… வீட்டுக்கு வந்ததும் ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க… அப்புறம் மெசேஜ் பண்ணுங்க… நான் மார்னிங்க் பார்த்துக்குறேன்…”
“ஓகே… குட்நைட்……” என அவன் பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க,
“ம்ம்… குட்நைட் கார்த்தி… பார்த்து வாங்க…” என்றபடி போனை வைத்தாள் அவளும்…
தொடரும்
{kunena_discuss:995}