தனது அறையில் ஜன்னல் கம்பிகளில் முகத்தினைப் புதைத்து அதன் வழி கீழே இருக்கும் செடிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள் சரயூ…
“சரயூ….”
குரல் கேட்டும் திரும்பி பார்க்கவில்லை அவள்…
“நீ என்னை மன்னிக்கலைன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது சரயூ… நான் உன்னை வற்புறுத்தலை… ஆனா திட்டுற பேருலயாவது எங்கிட்ட பேசு சரயூ… ப்ளீஸ்….”
“………………….”
“உன் கோபம், வருத்தம், ஆதங்கம், ஆத்திரம், இதுல எதையாவது, வார்த்தையில எங்கிட்ட வெளிப்படுத்திடு சரயூ… ப்ளீஸ்…..”
அவனின் இறைஞ்சுதல் அவள் செவியில் கேட்டும் அவள் மரக்கட்டையாய் இருந்தாள்….
“சரயூ….”
அவள் பெயரை சொல்லியபடி அவளின் முன் வந்து நின்றவனைப் பார்க்க மறுத்தாள் அவள்…
மேலும் அவளிடம் பேச முயற்சித்தவனை, கையமர்த்தி தடுத்தவள்,
“ஒரு பையனை பெத்து கொடுத்துட்டு நான் உங்ககிட்ட பேசுறேன்… அதுவரை நானும் பேசலை… நீங்களும் பேசவேண்டாம்… ப்ளீஸ்….”
கையெடுத்து கும்பிட்டவண்ணம் அவள் குனிந்து கொள்ள, அவளையேப் பார்த்தபடி நின்றான் திலீப் பேச வார்த்தை வராமல்…
“சரயூ… நான்…..”
“ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க…”
“கேளு சரயூ….”
“ஒரு பேச்சுக்குத்தான் சொல்லுறேன்… ஒருவேளை நாளைக்கு நம்ம பூஜாவுக்கோ, பிரேமிக்கோ என் நிலைமை வந்தா என்ன செய்வீங்க?...”
முகம் செத்துப்போனது திலீப்பிற்கு…
என்ன பதில் சொல்லிட முடியும் அவனால்?... அவளின் கேள்வி அவனின் சர்வத்தையும் ஆட்டுவித்தது….
அவனிடமிருந்து பதில் வராது போகவே, சில நிமிடத்திற்குப் பிறகு, அவள் அந்த அறையை விட்டு வெளியேற, திலீப் அவளை பின் தொடரவில்லை…
கட்டிலில் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான் திலீப்…
இதுநாள் வரையில் அவளிடம் இப்படி ஒரு ஒதுக்கம், வெறுப்பு, வெளிப்பட்டு அவன் பார்த்ததே இல்லை… அதற்கும் மேலே அவள் கேட்ட கேள்வி…. அவன் நெஞ்சை குத்தி கிழித்தது….
அவனைக் கைப்பிடித்த நாள் முதல், அவன் சொன்ன சொல்லுக்குள் நின்றாள்… அவனுக்கேற்ப வளைந்தும் கொடுத்தாள்… அவன் கொடுத்த காதலையும், கணவன் என்ற உரிமையில் அவன் அளித்த கசப்பினையும் மனமார ஏற்றாள்….
கொடுமையே செய்த போதிலும் தன் காதலை ஒருநாளும் அவனிடமிருந்து தூர விலக்கியதில்லை அவள்…
கல்யாணம் முடிந்த புதிதிலும் சரி, இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னரும் சரி, அவனையும் குழந்தையாகவே பாவித்து, அவன் திருந்திடுவான் என்றேனும் ஒருநாள் என்ற நம்பிக்கையை பலமாக தனக்குள் விதைத்து வைத்திருந்தாள்…
காதல் என்ற பெயரில் அவன் அளிக்கும் சித்திரவதையின் மூலம் தன் நம்பிக்கை விதை தளிர்விடாமல் இருந்த போதிலும், என்றேனும் ஒருநாள் அது துளிர்க்கும் என்றே அவளும் நம்பினாள்….
நாட்கள் ஆக, ஆக விதைகளும் கருகிவிடுமோ என்ற எண்ணமும் அவளுக்குள் எழாமல் இல்லை…
இருந்தும் மனதில் கணவனின் மேல் வைத்திருக்கும் காதலை கெட்டியாகப் பிடித்திருந்தாள் பற்றுகோலாக… அது தன்னை கீழே விழ விடாமல் தூக்கி நிறுத்தும் என்ற பிடிப்புடன்….
அது அத்தனையையும் அவன் அந்த ஒரே நாளில் இருந்த தடம் தெரியாது அழித்தான் தன் செய்கையினால்…
அந்த நடுநிசியில் மனைவி என்றும் பாராது, அடித்து துரத்தாத குறையாக அவன் வெளியே அனுப்புகையில் மனம் தான் நோகாமல் இருக்குமா?.. இல்லை நம்பிக்கை தான் உடனிருக்குமா?....
இருந்தும் தன்னைத் தேடி வருவான் என்றே அந்த இரவு வேளையிலும் காத்திருந்தது பாவப்பட்ட அந்த பெண்ணின் மனது… தன் காதல் சாகாது என்று நம்பினாளே…. அதை துவம்சம் செய்து அழிக்கும்போது தெரியவில்லையா?... ஒரு உயிரை கொல்லுகிறோம் என்று…. உயிரோடு மனதை கொல்லுவதற்கும், உயிர் கொண்ட சிசுவை கலைப்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது?...
கருக்கலைப்பு கொடிய பாவமென்றால், நம்பிக்கையை கலைப்பதை என்னவென்று கூறமுடியும்?...
பாவம் பாவம்தானே… வலி வலிதானே… பிரித்து சொல்லிட முடியுமா இரண்டையும்?..….