'அது வந்து டாக்டர்... நான் பார்க்க முடியாத சூழ்நிலைன்னு வெச்சுக்கோங்களேன்... ப்ளீஸ்..' அவன் குரல் கெஞ்சல் எனும் புள்ளியை தொட்டிருந்தது.
'பச்... வி...ஷ்...வா... சரி..... நான் நாளைக்கு மத்தியானத்துக்கு மேலே வரேன்.. பட் ஒரு கண்டிஷன் உனக்கு வேண்டியவங்கன்னு வேறே சொல்றே... அப்புறம் நீ வந்து எக்ஸ்ரே வை பார்க்கிறேன், மெடிசின் சேன்ஜ் பண்றேன் அது இதுன்னு என்னோட ட்ரீட்மென்ட்லே மூக்கை நுழைக்க கூடாது. ஒகே வா.???
ஓ.. நெவெர் டாக்டர்.. கண்டிப்பா மாட்டேன்..' என்றான் அவசரமாக.
'ஒகே.... நாளைக்கு வரேன்..' அழைப்பை துண்டித்தாள் புவனா. அங்கிருந்த நர்ஸ்களிடம் அவளுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளின் விவரங்களை சொல்லிவிட்டு, அரை மனதுடன் கிளம்பினான் வீட்டுக்கு.
அவன் வீட்டை அடைய வீட்டினுள் நிசப்தம் பரவிக்கிடந்தது. அறுபதாம் கல்யாண வேலைகள் துவங்கிய போது இருந்த கலகலப்பு எல்லாம் காணாமல் போயிருந்தது போல் இருந்தது அவனுக்கு. ஒரு ஆழமான சுவாசத்துடன் உள்ளே வந்தான் அவன்.
காலையில் இருந்து அம்மாவை அழைக்கவில்லை அவன். அப்பா அழைத்த போதும் அவருக்கு சரியாக பதில் எதுவும் சொல்லவில்லை அவன். அம்மா உறங்கி விட்டிருந்தார். உடலும் மனமும் அவருக்கு எப்படி தளர்ந்து போயிருக்கும் என அவனுக்கு தெரியாதா என்ன???
அரை குறை உறக்கத்தில் சோபாவில் சாய்ந்திருந்தார் அப்பா. அவன் காலடி சத்தத்தில் சட்டென கண்விழித்தவர் அவனை பார்த்ததும் திடுக்கென எழுந்து நின்றார்.
'விஷ்வா... அம்மாவுக்கு என்னடா... என்னென்னமோ போட்டிருக்கு ரிப்போர்ட்லே. பயமா இருக்கு விஷ்வா. ஒரு சின்ன தலைவலி தானேடா. அதுக்கு போய்... என்னடா...???'
'ம்... சரி.. சரி... பதறாதீங்க... உட்காருங்க முதல்லே..' என்றபடி அவர் அருகில் அமர்ந்தான் அவன்.
'எப்படிடா பதறாம இருக்க முடியும்... சொல்லு விஷ்வா... நிஜம்தானாடா இதெல்லாம்... கட்டி இருக்காடா தலையிலே...'
ஆம் என்று தலை அசைக்கும் போது உயிர் வரை வலித்தது விஷ்வாவுக்கு.
'சர்ஜரி பண்ணனுமா விஷ்வா. பண்ணா எல்லாம் சரியாயிடுமாடா???' பதில் சொல்லாமல் எதையோ யோசித்தபடியே அமர்ந்திருந்தான் விஷ்வா.
'டேய்.. உன்னைதான்டா. இன்னைக்கு பூரா அம்மா அழுதிட்டே இருந்தாடா .'
'ம்??? என்னப்பா.???' கொஞ்சம் திடுக்கென நிமிர்ந்தான் அவன். 'அம்மா அழுதாங்களா???
அவன் அந்த கேள்வியை கேட்ட போது அவன் குரலில் பதிந்திருந்த பாவம் எப்படி பட்டது என புரிந்துக்கொள்ள முடியவில்லை அப்பாவால்.
'என்னடா கேள்வி கேட்கிறே அழாம வேறே என்னடா செய்வா??? என்னடா பண்றது இப்போ??? ஏதாவது வழி சொல்லு விஷ்வா'
ஒரு பெருமூச்சை எடுத்துக்கொண்டான் விஷ்வா 'நம்மாலே முடிஞ்ச முயற்சியை கண்டிப்பா செய்வோம்பா..' அதை சொல்லும்போதே அவன் குரல் கொஞ்சம் நடுக்கம் கொண்டது.
'விஷ்வா... பயமா இருக்குடா..'
'சரியாகும்பா.. எல்லாம் சரியாகும்... நம்புவோம்.... அப்படியே நம்புவோம்... நீங்க ஏதாவது சாப்பிட்டீங்களா???'
'பசி இல்லைடா.. அம்மாவும் சரியா சாப்பிடாமலே தூங்கிட்டா...'
'அப்படியா???' என்றான் விஷ்வா கொஞ்சம் இறங்கிய குரலில்.
அதன் பிறகு ஏதேதோ சொல்லி, கட்டாய படுத்தி அப்பாவை சாப்பிட வைத்துக்கொண்டிருந்தவனின் மனதிற்குள் ஏதேதோ போராட்டங்கள். பல நூறு சுனாமிகள்.
மறுநாள் மதியம்......
டாக்டர் புவனா மருத்துவமனைக்கு வந்த நான்காவது நிமிடம் இந்துவின் ரிபோர்ட்டுகளுடன் அவள் முன்னால் நின்றிருந்தான் விஷ்வா. மூக்கு கண்ணாடியின் உள்ளிருந்து துறுதுறுவென அவனை குடைந்தன புவனாவின் கண்கள்.
'பேஷன்ட் யாருயா???. இப்படி ஓடி வரே .' ரிப்போர்ட்களை வாங்கிக்கொண்ட படியே கேட்டாள் புவனா.
'டாக்டர் அவங்க ... இந்துஜா...' என்றான் மெதுவாக
'அவங்க இந்துஜா சரி.. அவங்க உனக்கு யாரு..'
'சும்மா..ஃப்ரெண்ட்..' அவன் அவசரமாக சொன்ன விதத்தில் புவனாவின் இதழோரம் சின்ன புன்னகை.
சட்டென ''அடடா...' என்றாள் ரிபோர்ட்களை ஆராய்ந்தபடியே. எதற்கு இந்த அடடா என்பதை போல விஷ்வா அவளை பார்க்க ...
'ஓகே விஷ்வா.. ஐ.. வில் டேக் கேர்.. யூ கேரி ஆன்...' என்றாள் பட்டென. ஏனோ அங்கிருந்து நகரவும் மனம் கேட்க வில்லை விஷ்வாவுக்கு.
'டாக்டர் அவங்களுக்கு பேச வராது நீங்க கொஞ்சம்..' ஆற்ற மாட்டாமல் சொன்னான் அவன்.
'நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன்..' அவன் முகம் பார்த்த புவனாவிடமிருந்து பளிச் பதில்.
'ஷூர் டாக்டர் ... தேங்க்ஸ்..' நகர்ந்தான் அவன். இதழ்களில் புன்னகை ஓட அவன் சென்ற திசையை பார்த்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருந்தாள் புவனா..