“தந்தை யாகத்தில் அமர்ந்திருக்கிறாரே… அதுவும் இப்போது தான் யாகத்தினை துவங்கியிருக்கிறார்கள் போலும்… இப்போது என்ன செய்வது அக்கா?...”
“ஆம் அதிதி… யாகத்தினை இடையில் தடுப்பது பெரும் சங்கடத்தை விளைவிக்கும்… அது அபசகுணமும் கூட… அதற்கு நாமே காரணமாகக் கூடாது… ஆதலால் நேரத்தை விரயமாக்காமல் நாம் சதியை தேடி செல்லலாம்…”
“அது சரிதான் அக்கா… எனினும், சதிக்கு யாரும் உதவக்கூடாது என்று தந்தை ஆணை பிறப்பித்திருக்கிறாரே அக்கா… அதை மீறி நாம் சதி செய்யும் பிராயசித்தத்திற்கு உதவினால்?....”
“தந்தையின் ஆணையை மீறுவதில் எனக்கு துளியும் விருப்பமில்லை அதிதி… எனினும் இத்தருணத்தில் சதியின் பாதுகாப்பே முக்கியம்… வேறெதுவும் எனக்கு முக்கியமாய் தென்படவில்லை இப்போது… நாம் பயப்படுவது போல் சதிக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டால் என்ன செய்வது?.. அதனால் நாம் இப்பொழுதே சதியைத் தேடி செல்வோம்… வா….” என்றவள் தங்கையின் கைகளைப் பிடித்தபடி, சதியைத் தேடி வனத்திற்கு சென்றாள்…
அங்கே, சதியோ தறிகெட்டு அடித்த காற்றில் சிக்கி தடுமாறி போய்க்கொண்டிருந்தாள்… அந்நேரம் அவளின் கண்களுக்கு ஓர் பர்வதம் தென்பட, அவள் அதிலிருந்து கவனத்தை விடுத்து சற்றே அகன்றாள்.. அப்போது வில்வ இலை ஒன்று காற்றில் பறந்து அவள் மீது மோத,
அன்று தசிசி முனிவர், அவளிடத்தில் அந்த இலையை வைத்து மகாதேவனை அழைக்க சொன்னது நினைவு வந்த்து அவளுக்கு…. கூட்வே பிரஜாபதி தன் மகள் மீது கொண்டிருந்த நம்பிக்கையான வார்த்தைகளும் நினைவு வர, அந்த இலையை தூக்கி எறிந்து விட்டு தன் பயணத்தை அவள் தொடர மீண்டும் அவளின் கண்களில் தென்பட்டது கயிலாயபுரத்தின் ஓங்கி உயர்ந்த பர்வதம்…
“சதி… நீ எங்கிருக்கிறாய் சதி…..” என அதிதியும், கியாத்தியும் அறைகூவல் விடுத்துக்கொண்டே அந்த பயங்கர காற்றில் சிக்கியபடி தங்களது சகோதரியினை தேட,
சதியோ தன் தோள் மீதிருந்த பையினை தூக்கி எறிந்தாள்…
கோபத்துடன் அழுகையுமாய், அந்த பர்வதத்தினை முறைத்துப்பார்த்தவள்,
“என்னை எதற்காக இப்படி வேதனைக்குள்ளாக்குகிறீர்?.. நீங்கள் யார்?... என்னை இப்படி சோதித்துப் பார்த்து தாம் விளையாடுவதற்கு?... துணிவிருந்தால் என் முன்னே வாருங்கள்… என்று உங்களை நான் பார்த்தேனோ அன்றே என் உறக்கமும் என்னை விட்டு போய்விட்டது… இப்படி ஒரு அவல நிலை வரும் என்று நான் கனவிலும் நினைத்திடவில்லை… ஆம், என் தந்தையின் நம்பிக்கையையும், அன்பையும் நான் தொலைத்துவிட்டேன்… என் குடும்பமும், நானும் அமைதி இழந்து தவிக்கிறோம்… இன்னும் என்ன மீதம் இருக்கிறது?... எங்களை சோதிப்பதற்கு?.. அனைத்திற்கும் மேல், என் மனதில் நுழைந்த தாங்கள் ஏன் அகல மறுக்கிறீர்கள்?... நான் எத்திசையை பார்த்தாலும் அதில் நான் காண்பது தம்மைத்தான்… கனவிலும் நனவிலும் என்னை வாட்டி வதைப்பது ஏன்?... எதற்காக இப்படி என்னை வேதனை கொள்ள செய்கிறீர்கள்?... என் கேள்விகளுக்கெல்லாம் விடையளியுங்கள்… எதற்காக இந்த மௌனம்?... இதுவரை தாங்கள் எனக்கு கொடுத்த அத்தனை இன்னல்களையும் இனியும் என்னால் சகித்துக்கொண்டிருக்க முடியாது… என் தந்தைக்கு விரோதமாக தாம் செய்யும் சதி வலையில் என்னை சிக்க வைத்த தாம் இனியும் என்னை சிக்க வைக்க நான் அனுமதித்திடேன்… தாம் அறிந்திடமாட்டீர் என் பிடிவாதத்தினைப் பற்றி… நான் எடுத்த தீர்மானத்தினை யாராலும் மாற்ற இயலாது… அது சாத்தியமும் அன்று…..” என வேகம் கொண்டு பேசியவள், அப்படியே நிலத்தில் சரிந்து விழுந்தாள்…
அவளைத் தேடி வந்த, சகோதரிகள் அவளின் நிலை கண்டு, பதறி அவளருகில் வந்து அவளை தன் மடி தாங்கி எழுப்ப, அவள் மெல்ல விழி திறந்தாள்… அழுதுகொண்டே அவளை எழுப்பி, அரண்மனை அழைத்து வந்து அவளது அறையில் படுக்க வைத்துவிட்டு, அவளருகிலேயே அமர்ந்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்தனர் இருவரும்….
“அக்கா… சதியின் தேகம் காய்ச்சலால் நடுங்குகிறது…”
அதிதி, கியாத்தியிடம் கூற,
“தந்தை அளித்த தண்டனை போதாதா?... நீ மேலும் அதனை கடுமையாக்க முயற்சிக்காதே சதி... நான் தந்தையிடம் சென்று இதுகுறித்து பேசுகிறேன்…” என்றாள் கியாத்தி சதியிடத்தில்…
மேலும் அங்கிருந்து செல்ல முயன்ற கியாத்தியினை, தடுத்தாள் சதி…
“தாங்கள் தந்தையிடம் எதையும் கேட்கவோ கூறவோ கூடாது… இது என் மேல் ஆணை…” என கூற, கியாத்தியோ மறுத்தாள்…
இறுதியில், “சரி தந்தையிடம் நான் எதுவும் கூற மாட்டேன்…” என கியாத்தி கூற,
“நீயும் இது போல் என்றும் நடந்து கொள்ளமாட்டேன் என எங்களுக்கு உறுதி கொடு…” என்றாள் அதிதி…
“நிச்சயமாய் இன்று போல் என்றும் நடந்து கொள்ளமாட்டேன்…” என்ற சதி, தன் பணிகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று கூறி இருவரையும் பேசி சரி செய்து, அனுப்பிவிட்டு தன் அறைக்கதவை தாழிட்டுக்கொண்டாள்….
தாழிட்டவள், நேற்று காலையில் கண்ட கனவில், தான் மயங்கி சரிய காரணமாக இருந்த மகாதேவனே தன் மயக்கத்தினையும் தெளியவைத்தது நினைவுக்கு வந்து போக,
“என் சொப்பனம் வெறும் சொப்பனமே… அதற்கு அர்த்தங்களும் ஏதும் இல்லை… தங்களால் என்னை என்றுமே இனி மனதளவிலும் நெருங்க முடியாது….” என உறுதியோடு கூறியவள், தாமரை மலர்கள் மீது ஸ்ரீ விஷ்ணுவின் நாமத்தை எழுத ஆரம்பித்தாள்...
பொழுது புலர்ந்ததும் அவளது அறைக்கதவு இன்னும் திறந்து கொள்ளாமல் இருப்பதை பார்த்த அதிதி, கதவினை இரண்டு மூன்று முறை தட்டினாள்… யாதொரு சத்தமும் இல்லாது போகவே, மௌனமாக அழுது கொண்டே அங்கிருந்து அகன்றாள்…
இரவு பகல் பாராது, அன்றிலிருந்து எழுதிக்கொண்டே இருந்தாள் சதி…. மறுநாள் விடியலும் வந்துவிட, அதிதி, வந்து பார்த்துவிட்டு, அவள் அறைக்கு வெளியே இருந்த கனிகளைக் கண்டு மனம் வெம்பினாள்…