எனக்கு பிடித்தவை - 15 - எங்கே என் காதலி எங்கே எங்கே
ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு விதம்... ஒரு கதையை படிக்கும் போது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள் தோன்றும்... இவை எல்லாம் ஒரே போல இருப்பது இல்லை... இந்த தொடரில் நான் சொல்ல போவது எல்லாம் என்னுடைய ரசனைகள், என்னுடைய எண்ணங்கள்... உங்களின் கருத்துக்கள் இதில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்... அதையும் தெரிந்துக் கொள்ள விழைகிறேன்... உங்களுடைய கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
இந்த முறை நான் பகிர்ந்துக்கொள்ள போகும் கதை என் தோழி பிந்து வினோத் எழுதி இருக்கும் 'எங்கே என் காதலி எங்கே எங்கே' எனும் கதை.
சமீப காலத்தில் பிந்து எழுதிய கதைகளில் எனக்கு பிடித்த ஒரு கதை இது.
கதை:
கார்த்திக் R&AWல் வேலை செய்பவன். கல்யாணம் வேண்டாம் என்று இருப்பவனை கல்யாணம் செய்துக் கொள்ள அவனின் குடும்பத்தினர் வற்புறுத்துகிறார்கள். வேலையில் இருந்து விருப்ப ஒய்வு பெரும் முடிவில் இருக்கும் கார்த்திக் sarcastic ஆக சில கன்டிஷன்களை சொல்லி அதற்கு ஏற்றதுப் போல பெண் கிடைத்தால் திருமணம் செய்துக் கொள்கிறேன் என்கிறான். அதிர்ஷ்டவசமாக அவனின் பெற்றோர் அவன் விரும்பிய மாதிரியே அத்விதா எனும் பெண்ணை கண்டுப்பிடிக்கிறார்கள். ஆச்சர்யப் படும் கார்த்திக் உடனே திருமணத்திற்கு சம்மதிக்கிறான். அவனின் கடைசி மிஷனை முடித்த உடன் திருமணம் என்று பச்சைக் கொடி காட்டுகிறான்.
போட்டோவில் மட்டும் பார்த்திருந்தாலும் அத்விதா கார்த்திக்கின் நினைவில் இருந்துக் கொண்டே இருக்கிறாள். அதுவும் ரொம்பவும் இக்கட்டான நிலையில் அவளின் நினைவு அவனை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறது. அத்விதா தனக்காகவே பிறந்தவள் என்ற சந்தோஷத்துடன் வீடு திரும்புபவனுக்கு கல்யாணம் நின்றுப் போனதாக தெரிய வருவது அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அதுவும் அத்விதா தான் திருமணத்தை நிறுத்தினாள் என்று தெரிய வரவும் அதிர்ந்தே போகிறான்.
ஏமாற்றம் மனதை அரிக்க அத்விதா திருமணத்தை மறுக்க காரணம் என்ன என்று கண்டுப்பிடிக்க முயற்சி செய்கிறான். அத்விதா அவளின் பெற்றோரிடமும் அதிக தகவல் கொடுக்காமல் போய் இருப்பதை தெரிந்ததும் அவனின் ஆர்வம் அதிகமாகிறது.
அத்விதா எங்கே இருக்கிறாள் என்பதை கண்டுப்பிடிக்க முயற்சி செய்கிறான்.
அவனுடைய முயற்சி பலன் அளித்ததா, அத்விதா கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக் காணாமல் போனதன் காரணம் என்ன, கார்த்திக் அவளின் மனதை மாற்றினானா என்பது மீதிக் கதை.
இந்தக் கதையில் எனக்குப் பிடித்தது
1.வித்தியாசமான, சுவாரசியமான கதை அமைப்பு.
2.கதையின் முக்கிய கருவான அத்விதாவின் மனப் போராட்டம். அதை கார்த்திக் எதிர் கொள்ளும் விதம்.
3.வேகமாக நகரும் கதை நடை.
4.ஸ்பை ஹீரோ என்பதால் ஹீரோயிசத்திற்கு அதிக வாய்ப்புகள் இருந்தாலும் அதை தனியே கொடுத்து, மைய கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் பாங்கு.
5.கார்த்திக்! அத்விதாவின் கேரக்டர் மனதில் நின்றாலும், கார்த்திக் அதை விட எளிதாக பளிச்சென்று நம்முடன் ஒட்டிக் கொள்கிறார்.
அத்விதாவை நேரில் பார்க்கும் முன்பே காதல் வசப்படுவது தொடங்கி அதிவிதாவை தேடி ஜெர்மனி போவது, மனதை மாற்றுவது என ஒவ்வொரு அவதாரிலும் கலக்குகிறார்.
வித்தியாசமும், விறுவிறுப்பும் துரு துருப்புமான மனதைக் கவரும் நல்ல ஒரு அழகான காதல் கதை இந்த எங்கே என் காதலி எங்கே எங்கே.
வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் படியுங்கள். படித்தவர்கள் உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
நன்றி!
நந்தினி
இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
{kunena_discuss:1141}