படித்ததில் பிடித்தது - இருள் ருசி உணரலாமா? - `Taste of Darkness’ உணவக அனுபவம் - வசுமதி
மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஏதோ ஓர் இரவில், நிலவொளிகூட நுழைய முடியாத உங்கள் வீட்டின் இருட்டறையில், விளக்கு வெளிச்சத்தைக்கூட அனுமதிக்காமல் அன்றைய இரவு உணவை உங்களால் உண்ண முடியுமா? முடியும் என்றால், `வழக்கமாக நீங்கள் உட்கொள்ளும் கலோரியைவிட சற்றுக் குறைவாக, (ஏறத்தாழ 9% வரை) குறைவான கலோரியைத்தான் உங்களால் உட்கொள்ள முடியும்’ என்கிறது அறிவியல்.
நாகரிகம் வளரத் தொடங்கியதும் உணவின் மீதான விருப்பங்களும், அதன் தேவைகளும் பன்மடங்காக வளர்ந்துவிட்டன. விருந்தினர் வருகை, விசேஷ நாட்கள், திருவிழாக்கள்... என வருடத்தின் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே ஆடம்பர உணவை உட்கொண்டுவந்தது நம் சமுதாயம். அதிலும் இன்று, உணவை போகப்பொருளாகப் பார்க்கிற அளவுக்கு சுவையூட்டிகளின் வர்த்தக வளர்ச்சி, உணவை வைத்து மனஅழுத்தத்தைப் பன்மடங்காகப் பெருக்கியுள்ளது.
ஒருபக்கம் ரேஷன் கடையில் விநியோகப் பொருட்கள் குறைவது, `அம்மா உணவக’த்தையும் `ஆந்திரா மீல்ஸை’யும் நாடுவது என மக்கள் திண்டாடினாலும், இன்னொரு பக்கம் பசிக்காக உண்ணவேண்டிய உணவு, உற்சாகத்துக்காக உண்ணும் அளவுக்கு அது என்டெர்டெய்ன்மென்ட் ஆகவும் மாறுகிறது. உணவில் அதன் ஆடம்பரம் (Luxury) என்பது மிக முக்கியமான அம்சமாகிவிட்டது. ஏன் இருக்கக் கூடாது என்று கேட்கலாம். ஆனால், அதில் உடல்நலன் பல நேரங்களில் இரண்டாம் பட்சமாகவும் பார்க்கப்படுகிறது என்பதுதான் உண்மை.
``ரொம்ப போர் அடிக்குது, சாப்பிட எதாவது கொடு!’’ - விடுமுறை மற்றும் மாலை வேளைகளில் ஒவ்வொரு மனதிலும் எளிதாகக் கேட்கும் குரல் இது. உளவியல்ரீதியாக இது மிகக் குறிப்பாக பெண்களிடமும் குழந்தைகளிடமும் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது மற்றோர் ஆய்வு. `அவர்களின் மனஅழுத்தமும் சூழலும்தான் காரணம்’ என்கிறது.
அரிசி, சப்பாத்தி, பிரெட், நூடுல்ஸ், பாஸ்தா, பீட்சா, பர்கர்... என `Main course' எனச் சொல்லப்படும் முதல்நிலை உணவுக்கே இன்று மிகப் பெரிய லிஸ்ட் முன்வைக்கப்படுகிறது. இன்னமும், மூன்று வகை பன்னீர்... அதில் முப்பது வகை ரெசிபிகள், ஐந்து வகை பருப்புகள்... அதில் ஐம்பது வகைச் சமையல், வறுவல், பொரியல், டெஸர்ட், ஜாம், சாஸ்... என வண்ண வண்ணமான உணவுகளின் அணிவகுப்பு எப்போதும் நம் மூளையின் செபலிக்கை (Cephalic) தூண்டியபடியே இருப்பதை நாம் இன்பமாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
இதுதான் உணவு குறித்த நம் தேவைகளை உடல் அளவில் தீர்மானித்து வருகிறது. பேஸ்ட்ரீஸ், ஐஸ்க்ரீமைப் பார்க்கும்போது வாயில் எச்சில் ஊறுவதும் இப்படித்தான். உணவில் பல வண்ணங்கள், வாசனைகள் என பழகிப்போன மூளைக்கு இட்லி, தோசை போன்ற வழக்கமான ஆரோக்கிய உணவு கொஞ்சம் அலர்ஜியைத் தருவதாகவும் இது நம்மை மாற்றியுள்ளது . இதனால்தான் மேற்கத்திய நாடுகள், `சரிவிகத உணவு’ எனச் சொல்லும் நம் இட்லி, தோசையைக்கூட தந்தூரி வெரைட்டிகளாக உள்நுழைக்கவேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது எனலாம்.
இப்படி உணவின் வண்ணங்களையும் வடிவங்களையும் மட்டுமல்ல; தினம் உட்கொள்ளும் உணவின் அளவையும் கணக்கிட்டபடிதான் நாம் டைனிங் டேபிளிலேயே அமர்வோம். காலை உணவுக்கு, `ஒரு சாப்பாத்தி, ஒரு கப் தயிர்...’ என்றாலும், `இதுதான் என் உணவு, இதுதான் என் தட்டு, இதைத்தான் நான் உண்ணப் போகிறேன்’... எனக் கணக்கிட்டுப் பழகிவந்த நமக்கு, சூரி போட்ட பரோட்டா கணக்காக `போட்ட கோட்டையெல்லாம் அழி, மறுபடியும் புதுசா ஆரம்பிப்போம்’ என உணவின் மீது புது ஈர்ப்பை உருவாக்கும் ஒரு வழிமுறையைக் கண்டேன். அதாவது, சென்னை, இராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூவின், முதல் தளத்தில் சமீபத்தில் நான் பிரமித்து வியந்த `டேஸ்ட் ஆஃப் டார்க்னெஸ்’ (Taste of Darkness) எனும் உணவகம் பற்றி இங்கு சொல்லியாக வேண்டும்.
உணவகம் என்றாலே பல வண்ண விளக்குகள், கண்ணைக் கவரும் பல நிற உணவு வகைகள் எனப் பழகிப்போன நிலையில், இங்கே இருட்டில் உணவு உண்ண வேண்டும் என்பது முற்றிலும் புது முயற்சியாகத் தெரிந்தது. `இப்படி ஒரு முயற்சிக்கு வரவேற்பு இருக்குமா?’ என யோசிக்க வேண்டாம்! அயல் நாடுகளிலும், ஹைதராபாத், மும்பை போன்ற பெரு நகரங்களிலும் பெரிதும் விரும்பப்படும் உணவக முறைகளில் இதுவும் ஒன்று. எளிமையும் ஆச்சர்யமும் இன்னும் மிக அதிகமாக புலன் விழிப்புஉணர்வை உருவாக்கும் ஒரு முயற்சியாக சென்னையிலும் அதன் கிளை விரிந்திருப்பது சென்னையின் புதுமைக்கு இன்னொரு வரவேற்பாகத் தெரிகிறது.
விடுமுறை அல்லது அவுட்டிங் என்றால் நாணயத்தின் இரண்டு பக்கம்போல பெற்றோர்களும் குழந்தைகளும் ஆளுக்கொரு பக்கமாக நிற்கும் அவஸ்தையில்தான் இன்றைய பல குடும்பங்கள், அதுவும் சென்னை போன்ற பெருநகரவாசிகள் இருக்கிறார்கள். ஏனென்றால், `எது செய்தாலும் அது வாழ்க்கைக்கான உணர்வுப்பூர்வமானதாக இருக்க வேண்டும்’ - இது பெற்றோர்களின் சாய்ஸ். `புதுமையாகவும் த்ரில்லாகவும் இருந்தால் போதும்’ - இது பிள்ளைகளின் வாய்ஸ்!
த்ரில்லும் வேண்டும், அதே சமயம் பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் கைகூட வேண்டும். சாப்பிடும்போது தட்டைப் பார்த்து சாப்பிடப் பழக்கப்படாத இந்த யங் ஜெனரேஷனுக்கு கண்ணைக் கட்டிச் சோறு போடுவதும், சென்னையின் எல்லைக்குள் இந்த உணவகம் இருப்பதும் ஒரு குடும்பக் குதூகல உணர்வுக்கு நிச்சயம் ஒரு `ஹாய்...’ சொல்லும் எனலாம். இருட்டுதான் இவங்க தீம்!