(Reading time: 16 - 32 minutes)

இது வரை சத்தமோ, வாசனையோ முதலில் அதைக் கண்களால் ஊர்ஜிதம் செய்தே பழகிய எளிமையான மூளையின் செயல்பாட்டுக்கு இந்த வழிமுறைகள் பெரும் சவாலாகவே இருக்கும். பலருக்கும் புதிதாக முட்டிபோட்டு, தவ்வி நடக்கும் குட்டிக் குழந்தைபோல சுவற்றைக் கட்டிக்கொண்டே நகர்ந்து சென்ற பால்யம்கூட கண்முன் வரும். வேறு வழி இல்லை! இன்று நீங்கள் குழந்தைதான். காரணம், நீங்கள் இதுவரை பார்க்காத, பழகாத புது உலகம் இது.

Irul Rusi

த்ரில் குறையக் கூடாது என்பதால், கூட்டம் கூட்டமாக அனுமதிப்பதில்லை என நினைக்கிறேன். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் என்றால், அவர்களுடன் இரண்டு பேர் கொண்ட நண்பர் குழு அல்லது தம்பதிகளை அனுமதிக்கிறார்கள். இது இருக்கைகளைப் பொறுத்து சில நேரங்களில் மாறவும் செய்யலாம்.

இதில் வெளியே சொல்லப்பட்ட ஒரு ரூல், படிக்கும் போது ஈசியாக இருந்திருக்கும். உணவகம் அனுமதிக்கும் இருக்கைகளில்தான் அமரவேண்டும், இருக்கைகள் நம் தேர்வு அல்ல என்பதுதான் அது. ஆனால், உள்ளே இருட்டு உங்களை அச்சுறுத்தும்போது, இருபது வருடங்களுக்கு முன்னர் உங்கள் கைபிடித்த கணவனோ, மனைவியோ இன்றுதான் பயத்தால் மீண்டும் உங்கள் கைகளைப் பிடித்திருப்பார்கள். ஆனால் இருக்கையில் இந்த ஆறுதல்கள் எல்லாம் கிடைக்காது. தனித் தனி சீட்; வேண்டுமென்றால், குரல்வழி உறுதி செய்துகொள்ளலாம் அல்லது கை நீட்டும் தொலைவா எனத் தொட்டுத் தெரிந்துள்ளலாம். ஆனால் பயப்படும்போது, மூளை அவ்வளவாகப் பேசுவதையும் பிறரைத் தேடும் நிலையையும் அனுமதிப்பதில்லை, சுய விழிப்புஉணர்வில் திளைத்திருக்கும் என்பதையும் அங்கு நிலவும் நிசப்தம் சொல்லிவிடும்.

`ஊசி விழுந்தால்கூட சத்தம் கேட்கணும்’ என டீச்சர் சொன்னதை உங்கள் குழந்தையும், ஏன்... நீங்களும்கூட அங்கு உணர்ந்துகொள்வீர்கள். அமைதி எப்போதாவது பயமுறுத்துமா? அனுபவித்ததால், `ஆம்’ என்கிறது மனம்.

எப்படியோ இருட்டைப் பழக்கி, இருக்கைக்குள் அமர்த்திவிட்டாலும், உங்கள் பயம் உங்களுக்கு முன் அவர்களால் யூகிப்பட்டது என்பதால் உங்களை ஆசுவாசப்படுத்தி சானிடைசர், தண்ணீர், சாப்பாடு, டிஷ்யூஸ் என வரிசையாக தன் குரல்வழி தன்னுடைய இருப்பை அவ்வப்போது ஊர்ஜிதம் செய்வார். ``அம்மா வாசல்லதான் காத்திருப்பேன்’’ எனச் சொல்ல, ப்ரிகேஜிக்குள் பயந்து நுழையும் குழந்தையின் மனநிலையைத்தான் அவர்களின் இருப்பும் உணர்த்தும். இல்லையென்றால், இருட்டு நம்மை பலவீனப்படுத்தி, திணறடிக்கவும் செய்யும்.

``சானிடைசர்...’’ என்று குரல் எழுப்பி, நம் கையில் அதை ஊற்றுவார்கள்! அது எத்தனை திண்ணமான திரவம், லெமன் கிராஸா அல்லது லாவண்டரா எனத் தொடுதலும் மோப்பமும் போட்டி போட்டுக்கொண்டு நம்மைச் சிந்திக்கச் செய்யும் . இதில் கண்முன்னே தட்டு வைக்கப்பட்டிருக்கும் என்பதைத் தடவி பார்க்கலாம் அல்லது அவர்கள் உணவைத் தரும்போது தேடிக்கொண்டிருக்கலாம் .

``உணவு...’’ என்று சொல்லி, கேரியர் ஒன்றில் உணவைத் தருகிறார்கள், `என்னடா கொடுமை இது? கிண்ணத்தில் கொடுத்தாலாவது கையைவிட்டுக் குழப்பி (இருட்டுதானே என்ற ஒரு வசதி) சாப்பிட்டுக்கொள்ளலாம்; கேரியர் என்றால் பிரித்துவைக்க வேண்டும், ஒதுக்க இடம் பார்க்க வேண்டும், தேடித்தேடி உண்ண வேண்டும் என வெளிச்சத்தில் செய்யும் நொடிப்பொழுது வேலைகளை, இன்று மூளை நோட்டு போட்டு கணக்கெழுதிப் பார்க்கும்.

கேரியர் கனம் பார்த்ததும், `அட இது போதுமா?’ எனக் கேள்வி எழும். அதை அப்படியே கண்டுகொள்ளாமல் விடுங்கள். எனக்கு மட்டுமல்ல... பலருடன் பேசியவரை 99 சதவிகிதம் பேர் `சாப்பாடு ஏ1’ என்றுதான் சொன்னார்கள். மெனுவில் பெரிய வகைகளை எதிர்பார்க்காதீர்கள். காரணம், இருக்கும் நான்கைந்து வெரைட்டியை இருட்டின் பிடியில் பிரித்துமேய்வதே பெரும்பாடாக இருக்கும். இதில் தட்டுக்குள் சரியாக கை வைக்கணும், தண்ணீரையும் பிடிக்கணும் என கமலின், `பம்மல்’ பட வசனம்போல பிதற்றவேண்டிய நிலையில்தான் அப்போது நாம் இருப்போம்.

Irul Rusi

வெஜ் என்றால், சாஃப்டான இரு ரொட்டி, சூப்பரான ஒரு சைடிஷ். கூடவே வெஜ் ஃபிரைடு ரைஸ் மற்றும் கிரேவியும் வரும். நான்வெஜ் என்றால், சிக்கன் நிச்சயம். உணவு வகை எது என்றாலும் டேஸ்டுக்குக் குறை இருக்காது.

`நம்பிச் சாப்பிடுங்கள்’ எனச் சொல்கிறேன். ஆனால், `எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....’ என்பது திருவள்ளுவரின் குறள் மட்டுமல்ல, அன்று உங்களாலேயே உணரப்படும். அதாவது, `கண்களால் பார்த்து உணரப்படாத இந்த உணவு உங்கள் உடலுக்கு உகந்ததா, இல்லையா என இன்று உங்கள் மூளை தவிக்கத் தொடங்கிவிடும். வழக்கமாக அப்படித்தானே இதுவரை பழக்கியுள்ளோம். எனவே, அந்த நேர உணவைத் தேவைக்கு மேல், சுவைக்காகவோ, உற்சாகத்துக்காகவோ எக்ஸ்ட்ராவாக ஒரு துளி உணவைக்கூட உள்ளே அனுமதிக்காது’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனால் மிகக் குறைந்த அளவு உட்கொள்ளும்போதே பசி அடங்கிவிடும் நிலையை நான் மட்டுமல்ல, என்னுடன் இருந்த பலரும் தெரிவித்தனர். உங்கள் உண்மையான உணவுத் தேவை இவ்வளவுதானா என்பதையும் நீங்கள் முதல் சில உணவுகளை உண்ணும்போதே உணர்ந்துவிடுவீர்கள். `கொடுத்த காசுக்கு மிச்சம் வைக்காம சாப்பிட்டாகணுமே...’ என ஈட்டிக் கடைக்காரர்போல குத்தித் தள்ளினால்தான் உணவை முழுவதுமாக முடிக்க முடியும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.