அடுத்து..? `எப்படியோ சாப்பிட்டாகிவிட்டது. ஆனால் கை கழுவ என்ன செய்வது? கடவுளே...’ எனப் பதற்றம் வரும். வெட் டிஷ்யூவும் டிரை டிஷ்யூவும் கைக்குப் பரிமாறப்பட்டுவிடும். இதில் இன்னொரு ட்விஸ்ட் உங்கள் அருகில் உள்ளவருக்கான டிஷ்யூவை நீங்கள்தான் தரவேண்டும். `நல்லா கோத்துவிடுறீங்கம்மா’ எனச் சொன்னபடி உங்கள் கையைத் தேடி பின் அவர் கை தேடி, அதற்குப் பின்னர் உடன் வந்தவர் அல்லது அருகிலிருப்பவர் கை தேடி கொடுப்பதற்குள் இருட்டிலும் கண்ணைக்கட்டிக்கொண்டு வரும்.
இன்னமும் அதிகமாகச் சொல்லி முடித்துவிடலாம் ஆனால் இது உணர்வதற்கான தருணம் என்பதால், வார்த்தைகளாலும், கற்பனைவழியும் பார்த்துக்கொண்டிருந்த நாம், கொஞ்சம் உணர்ந்துகொள்ளவும் மிச்சம் வைப்போம்.
இயற்கை கொடுத்திருக்கும் ஐம்புலன்களில் ஒரு புலனை சட்டென நிறுத்திவைத்தால், மற்ற புலன்கள் எவ்வாறெல்லாம் உதவ முன்வரும் என்பதும், அதை எப்படி மூளைக்குப் பழக்கப்படுத்தப் போகிறோம் என்பதும் அத்தனை த்ரில்லான அனுபவம்.
` `Nyctophobia' எனும் இருட்டைக் கண்டு பயப்படும் போபியா சிலருக்கு இருந்தால், துணையுடன் செல்லுங்கள் அல்லது அது உங்கள் சாய்ஸ். பாதுகாப்பான ஓர் இடத்தில் உங்கள் சோல்மேட்டுடன் இந்தப் பயணம் இருட்டின் மீதான உங்கள் பயத்தை ஆராய்ச்சி செய்யவும் அல்லது அரிதாக விடுவிக்கவும் செய்யலாம். என்றாலும், உங்கள் மனதின் வலிமை பொறுத்து இதைக் கையாளலாம்’ என்கிறது அயல்நாட்டு ஆய்வு ஒன்று.
`டெலிகிராப்’ இதழின் ஆராய்ச்சியில், `கண்களைக் கட்டிக்கொண்டு இருட்டில் உண்பதால், தேவையற்ற உணவுகளையும் கலோரியையும் தவிர்க்க இயலும்’ என்கின்றனர். இதை இன்னமும் அதிகமாக அசைபோட்டால் தேவையில்லாமல் உண்ணும் உணவைக் குறைத்து, உணவை வீணாவாக்குவதை உணர்த்தும் இந்த அனுபவம், தனிமனிதச் சிந்தனையில் முற்போக்கு எண்ணங்களை விதைப்பதாக இதன் வாடிக்கையாளர்களால் பேசப்படுகிறது..
``படுத்தபடி டி.வி பார்க்காதே! கண்ணு போயிடும்’’ என உங்கள் குழந்தைக்கு இது வரை நீங்கள் சொன்ன அட்வைஸ் எல்லாம் மூளைக்குச் சென்றடையாமல் மிதந்துகொண்டிருக்கலாம், ஆனால், கண்களின் ஒளி எவ்வளவு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக நிச்சயம் இது அமையும்.
எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் கட்டாயமாக உடன் அழைத்துச் செல்லுங்கள். பார்வையற்றவர்களின் வாழ்க்கை எப்படியானது என்பதையும், சக மனிதர்களுக்கான உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் இது அவர்களுக்குப் பாடமாக அமையும்.
முடிப்பதற்குள் சொல்லியாகவேண்டிய இன்னொரு விஷயம், ஆரம்பத்திலிருந்து அனைவருக்கும் `குரல்காட்டி’யாக இருக்கும் அந்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர்... பெயர் ஜானகி! அவருக்கு பார்வை இல்லை என்பது உணவகத்தைவிட்டு வெளியே வரும்போதுதான் தெரியவரும். ஜானகியுடன் வழித்துணையாக இருக்கும் இன்னொரு உதவியாளர் செல்வகுமாருக்கும் பார்வை இல்லை என்பது, வழிகாட்டியாக இருக்க விழிப்புடன் இருந்தால் போதும் என்பதையும், அதற்கு அனைத்துப் புலன்களின் விழிப்புஉணர்வு எவ்வளவு அவசியம் என்பதையும் அசைபோடச் செய்யும்.
`திறமை மிக்கவர்கள்’ என்ற எண்ணமெல்லாம் மாற்றுத் திறனாளிகளின் விழிப்புஉணர்வின் முன் மறு விசாரணைக்குள்ளாகும் என்பது திண்ணம்.
ஹோட்டல் மேனேஜர் அனந்த நாராயணனைச் சந்தித்துப் பேசினோம்... ``இது என் அங்கிளோட ஹோட்டல். சென்னை கிளை என் பொறுப்புல இருக்கு. ஹைதராபாத், பெங்களூரூலயும் கிளைகள் இருக்கு. சென்னையில் கிளை தொடங்கி ஆறு மாசங்கள்தான் ஆச்சு. ஆனா, இங்கே எங்களுக்குக் கிடைச்சிருக்கும் ரெஸ்பான்ஸ் வேற லெவல். என் மாமா ஜெர்மனிக்குப் போயிருந்தப்போ, அங்கே இருந்த `டயலாக் இன் த டார்க்’ ரெஸ்டாரன்ட் பத்திக் கேள்விப்பட்டு போய் பார்த்திருக்காங்க. ஜெர்மனியில் இந்த ஹோட்டலின் உரிமையாளர் ஆண்ட்ரூஸின் நண்பர் ஒருவர் திடீரென ஒரு விபத்தில் தன்னுடைய கண்பார்வையை இழந்துவிட்டார். அதன் பிறகு அவரை எல்லோரும் அணுகுகிற முறை ஆண்ரூஸுக்குப் பிடிக்கவில்லை. பார்வையற்றவர்களின் மேல் இருக்கும் பொதுவான கருத்தையும், அவர்கள் மேல் காட்டும் பரிதாபத்தையும் மாத்தணும்னு அவர் யோசிச்சதோட விளைவுதான் `டயலாக் இன் த டார்க்.’
பார்வை இல்லாதவங்களோட கண்கள் எந்த அளவுக்கு இருட்டுக்குப் பழக்கப்பட்டிருக்கும், இப்படிப்பட்ட இருட்டில்கூட அவங்க தன்னம்பிக்கையோட தங்களோட வேலைகளை சக மனிதர்கள்போல எப்படிச் செய்யறாங்கனு நாம் புரிஞ்சிக்க இந்த ரெஸ்டாரன்ட்டில் சாப்பிடும் அனுபவம் சிறந்ததாக இருக்கும். மதியம் மற்றும் இரவு இயக்கப்படும் இந்த ரெஸ்டாரன்ட்டில் தினமும் மெனு மாற்றப்படும். இதிலிருந்து வரும் லாபம் `Ace Foundation’ எனப்படும் எங்களோட அறக்கட்டளைக்கு செல்கிறது. அதன் மூலம் பல பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கச் செய்வது, ஸ்கில் டெவலப்மென்ட், தொழில்நுட்பப் படிப்புகள் போன்றவையும் கற்றுத்தரப்படுகிறது’’ என்கிறார் அனந்த நாராயணன்.
சாப்பிட்டு முடித்து வழியனுப்பும் முன்னர், `ஃபேஸ்புக்கில் எங்கள் பக்கத்தை லைக் செய்யுங்கள்’ எனச் சொல்லி அனுப்புகிறார்கள். `வெளிச்சத்தில் அனுப்புவதென்றால் எதை வேண்டுமானாலும் செய்கிறோம், தயவுசெய்து வெளிச்சத்தைக் காட்டுங்கள்’ என மன்றாடாத குறையாகவே வெளிவரும் அந்த நொடி... பிறந்த குழந்தைபோல மீண்டும் ஒருமுறை உங்கள் கண்களை வெளிச்சத்துக்குப் பழக்கப்படுத்திக்கொண்டிருப்பீர்கள்.
இந்தப் பயணம் உண்மையில் உங்கள் புலன்கள் குறித்த விழிப்புஉணர்வை உங்களுக்குள் விதைத்துப் போகச்செய்யும் இலக்கு. இழந்த பின் அல்ல... இருக்கும்போதே புலன்களின் அருமையை அறிய அவசியம் பார்க்கவேண்டியதில் `டேஸ்ட் ஆஃப் டார்க்னெஸ்’-ஸும் ஒன்று!
தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர் வசுமதி
{kunena_discuss:1107}