ஒரு நாள் அதிகாலை நேரம் கபீர் ராமானந்தரின் இருப்பிடம் சென்றார்.கபீரை மறித்த ராமானந்தரின் சீடர்கள் இவன் முஸ்லீம்போல் தெரிகிறான் இவன் நம் குருவை சந்திக்க வரவில்லை மடத்தில் திருடவே வந்திருக்கிறான் என்று சொல்லி கபீரை நையப் புடைத்தனர்.வலி தாங்காமல் கபீர் கத்தி அழ சப்தம் கேட்டு வெளியில் வந்த ராமானந்தர் கபீரைப் பார்த்தார்.அவருக்கு கபீரைப்பார்த்ததும் மனதில் இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது. ஆனால் சீடர்களோ...குருவே..இவன் ஒரு முஸ்லீம் மதத்தினன்..எங்களிடம் அகப்பட்டுக் கொண்ட இவன் இங்கு திருடவே வந்துள்ளான்.ஆனால் தங்களைப் பார்க்க வந்ததாகப் பொய் சொல்கிறான்.இவனுக்குத் தாங்கள் இரக்கம் காட்டாதீர்கள் என்று ஏக குரலில் சொல்ல..ராமானந்தரும் இவனை வெளியே அனுப்பிவிடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
சீடர்கள் மேலும் கபீரை நன்றாக அடித்து அனுப்பி வைத்தனர்.ஆனால் கபீர் திரும்பத் திரும்ப ராமானந்தரின் இருப்பிடம் செல்வதும் அவரைச் சந்திக்க முடியாமல் அடி வாங்கி வருவதும் வாடிக்கையாயிற்று.
இப்படியே போனால் அவரிடம் உபதேசம் பெறுவது எப்படி என்ற எண்ணம் தோன்றியது கபீருக்கு.சிந்திக்க ஆரம்பித்தவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
குரு ராமானந்தர் தினமும் கங்கையில் நீராட விடிகாலை வருவது வழக்கம்.அப்படி வரும்போது இருள் பிரியாத நேரமாக இருக்கும்.அந்த நேரத்தில் கங்கைனதியின் படிக்கட்டில் படுத்துக்கொண்டுவிடுவது.குரு ராமானந்தர் படிகளில் இறங்கும்போது இருளில் படுத்திருக்கும் தம் மீது கவனக் குறைவால் கால் வைத்துவிடுவார்.அப்போது அவர் பாதம் நம் மீது இருக்கும் நிலையில் அவர் யாரையோ மிதித்து விட்டோமோ என நினைத்து இறைவனின் திரு நாமத்தைச் சொல்லுவார்.அவர் வாயிலிருந்து வரும் இறைவனின் திரு நாமத்தையே நமக்குச் செய்த உபதேசமாக ஏற்றுக் கொள்வது என் தீர்மானித்தார்.அவர் நினைத்தபடியே எல்லாம் நடந்தது.கபீரைக்காலால் மிதித்துவிட்ட ராமானந்தர் ராம் ராம் என்று சொல்லியபடி மேற்கொண்டு படிகளில் இறங்கி நீராடச் சென்றுவிட்டார்.
மகிழ்ச்சி தாங்க முடியவில்லை கபீருக்கு.தனக்கு உபதேசம் கிடைத்துவிட்டதாக மிக மகிழ்ந்துபோனார் கபீர்.
வீடு திரும்பியவர் நெற்றியில் திலகம் கழுத்தில் துளசி மாலை அணிந்து மீண்டும் ராமானந்தரின் மடத்திற்குச் சென்று சீடர்களோடு அமர்ந்து ராம நாம பஜனை செய்ய ஆரம்பித்தார்.சீடர்கள் ஒன்றும் சொல்லவில்லை.ஆனால் இவரைக்கண்ட ராமானந்தர் இவன் எதற்கு இங்கே வந்தான்?சூழ்ச்சியினால் அல்லவா உபதேசம் பெற்றான் என்று சொல்லி தன்னுடைய பாதுகை ஒன்றினை கபீரின் மீது வீச அது கபீரின் நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது.சிரித்தபடியே நின்ற கபீரைப் பார்த்த ராமானந்தர் நீ இங்கே வரத் தகுதி இல்லாதவன் ஆயினும் ராம நாமத்தை நீ தொடர்ந்து ஜெபித்து வா என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
கபீரின் ராம பக்தியைக் கண்ட இஸ்லாமியர்கள் அவரைக் கண்டபடி ஏசினர்.ராமனும் ரஹீமும் ஒன்றுதான் என்று சொல்லிவிட்டார் கபீர்.கபீருக்கு பக்தியும் கூடவே வாதத்திறமையும் பெருகலாயிற்று.
ஒரு சமயம் ராமானன்தரின் மடத்திற்கு கோரக்னாத் எனும் அஷ்ட சித்துக்களும் தெரிந்த வாதத் திறமை கொண்டவர் ஒருவர் வந்தார்.அவரை யாராலும் வெல்ல முடியாது என்பதால் அவர் மிகவும் கர்வத்தோடு இருந்தார்.அவரையே தன்னுடைய வாதத் திறமையால் வென்றார் கபீர்.கோரக்னாத்தின் கர்வம் அழிந்தது.
அவர் கபீரை வாழ்த்தினார்.ராமாநந்தரிடம் கபீரைப் பற்றி பலவாறு புகழ்ந்தார்.கபீரின் புகழ் எங்கும் பரவலாயிற்று.
கபீரின் பெற்றோருக்குக் கபீருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் அதுவும் சுந்தராவே அவருக்கு மனைவியாக வரவேண்டும் என்பது விருப்பமாகவே இருந்தது.ஆனால் கபீர் சுன்னத் செய்து கொள்ளாததால் சுந்தராவின் பெற்றோர் மறுத்துவிட்டார்களே என்ன செய்வது என்று வருந்தினர்.ஆனால் இறைவனே பக்கிரி உருவத்தில் சுந்தராவின் பெற்றோர் கனவில் சென்று இத் திருமணத்தைச் செய்யும்படி சொல்ல திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
கபீரும் சுந்தராவும் இனிதாகவே வாழ்ந்தார்கள்.கபீரும் நெசவுத்தொழிலை நன்கு கவனித்தார். அதே சமயம் அவர் வாயோ இறை நாமத்தை இடைவிடாமல் சொல்லிக்கொண்டே இருந்தது.வரும் வருவாயில் சாதுக்களை அழைத்து உணவளிக்கத் தவறுவதே இல்லை.நாளுக்கு நாள் கபீரின் வீட்டுக்கு சாதுக்கள் அதிகம் பேர் உணவுண்ண வரத்தொடங்கினர்.வரும் வருவாய் போதவில்லை.பல நாட்கள் வந்தவர்களுக்கு உணவளித்து விட்டு கபீரும் அவர் மனைவியும் பட்டினி கிடந்தனர்.அவரை மேலும் சோதிக்க எண்ணினார் பகவான். பக்கிரி உருவத்தில் நாலு பேரை அழைத்துக்கொண்டு கபீரைக் காண வந்தார்.மறு நாள் உங்கள் வீட்டில்தான் நாங்கள் உணவருந்தப் போகிறோம் என்று சொல்லிச் சென்றார். கபீருக்கும் அவர் மனைவிக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.வீட்டில் பிடியரிசி கூட இல்லை.பணமும் இல்லை.மளிகைப் பொருட்களும் இல்லை.எவரும் கடன் தர முன் வரவில்லை.
அவ்வூரில் பணக்கார வியாபாரி ஒருவன் இருந்தான்.அவன் பணத்தாசையோடு பெண்ணாசையும் கொண்டவன்.அவனிடம் சென்று கபீர் பொருளுதவி கேட்டார்.அவனுக்கு கபீரின் மனைவி சுந்தராவின் அழகில் ஒரு கண்.அவன் சற்றும் யோசிக்காது கபீரிடம் உன் மனைவியை ஒரு நாள் இரவுக்கு என்னிடம் அனுப்பு.உனக்கு நான் உதவுகிறேன் என்றான்.கபீர் மிகுந்த வருத்தத்தோடு வீடு திரும்பினார்.கணவரின் வருத்தத்திற்கு என்ன காரணம் என்று கேட்டார் சுந்தரா.அந்த வியாபாரி சொன்னதை மனைவியிடம் மிகுந்த வருத்தத்தோடு கபீர் கூற கொஞ்சமும் தயங்காது சுந்தரா கணவரிடம் அதனைக் கூறினாள்.மனைவி சுந்தரா கூறியதைக் கேட்டு அப்படியே அதிர்ந்து போனார் கபீர்.
அடுத்த வாரமும் தொடரும்