பெண்மை - கவிதை போட்டி - 04 - மது
நான்
இருப்பதொன்றாம் நூற்றாண்டில் மலர்ந்த
இந்தியத் தாயின் தவப் புதல்வி “பெண்மை”
இதோ என் பல வடிவ அவதார மகிமை!!
கொள்ளை அழகு என கொஞ்சும் சாக்கில்
கள்ளத்தனத்துடன் கன்னம் வருடிய கயவனை
கடித்து வலியில் துடிக்கச் செய்த குட்டிப் பாப்பா...
கூட்டம் அதிகம் என பேருந்து பயணத்தில்
காரணம் சொல்லி மேலே விழுந்து உரசும் நீசர்களை
காலணியால் பதம் பார்த்து தண்டித்த பள்ளிச் சிறுமி...
இரட்டை வசன கிண்டல்கள், பகிடிவதை என
இன்னல்கள் கொடுத்த மாணவ போக்கிரிகளுக்கு
(இ)ராக்கி கட்டி சகோதரனாய் அடக்கி வைத்த கல்லூரி யுவதி.
அலுவலகத்தின் நான்கு சுவற்றுக்குள்
அதிகாரப் போர்வையில் அத்துமீறும் அரக்கர்களை
அதிரடியாய் திறன்பேசியில் பதிவுசெய்து மிரட்டிய பணியாற்றும் மங்கை...
உறவு என்ற உன்னத பிணைப்பில் இருந்து கொண்டே
ஊறு விளைவிக்கும் நய வஞ்சக நச்சுப்பாம்புகளை
ஊடக, சட்டம் துணை நாடி நசுக்கிய குடும்பத் தலைவி...
அன்று திரௌபதி!! இன்று நிர்பயா!!
நித்தம் ஒரு ஆகிருதியில் வெந்து தணியும்
நிலை பெண்ணுக்கு எக்காலத்திலும் மாறவில்லை..
காந்தியடிகள் விரும்பிய (பெண்) சுதந்திர பாரதம்
கற்பனையில் கூட காண வழியில்லை....
இருப்பினும்,
நான்
இருப்பதொன்றாம் நூற்றாண்டில் மலர்ந்த
இந்தியத் தாயின் தவப் புதல்வி “பெண்மை”
தீங்கிழைப்போரைத் தகர்த்தழிக்கும்
விசையின் அம்பு!!
தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் (கொல்லும்)
விட்டில் பூச்சி அல்ல...