கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 52 - என்ன செய்திடுவேன் நான்….!!!! - மீரா ராம்
இரவின் மடியில் நித்திரையின் பிடியில்
நிலவின் வெளிச்சத்தில் வானில் பூத்திருந்த
நட்சத்திரத்தினை ரசித்துக்கொண்டிருந்தேன்…
சட்டென என் மன நட்சத்திரத்தின் உருவமாய்
என்னுள் மின்னினாய் நீ கண்சிமிட்டியபடி…
இங்கயும் விடமாட்டீங்களா?... அய்யோ….
என் உதடுகள் உதிர்த்த வார்த்தைகளை தொடர்ந்து
கீற்றுப்புன்னகை தன்னை மீறி உதித்திட,
அமைதியான அந்நேரப் பொழுதினில் மெய்மறந்தேன் நான்…
ஊரும் உலகமும் பறவையும் பூக்களும்
அனைத்துமே துயில் கொள்ளும் அவ்வேளை தனில்
ஏனோ இப்பாவையின் நெஞ்சம் மட்டும் உறங்க மறுத்து
பிடிவாதம் பிடித்துக்கொண்டே இருந்தது
உன்னைப் பார்த்தே தீர வேண்டுமென…
அதெப்படி முடியும்?... பைத்தியமா நீ?...
ஆழ்மனதினை திட்டி நான் வசைபாடிக்கொண்டிருக்க
அதுவோ என் பேச்சுக்கு செவி கொடுக்காது
தன் முடிவிலேயே தெளிவாய் இருந்தது…
இப்போ தூங்குவியாம்… நாளைக்கு உனக்கு நான் அவரை காட்டுவேனாம்…
கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் நானும் அதற்கு எடுத்துரைக்க
ஹ்ம்ம் ஹூம்… ஒரு பிரயோஜனமும் இல்லை…
நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது
என்ற திமிரில் அது தன் போக்கிலேயே அடம்பிடித்தது…
அதுசரி… இந்த திமிருக்கொன்னும் குறைச்சல் இல்லை…
இந்த ராத்திரி நேரத்துல நீ நினைக்குறது சாத்தியமா?...
கொஞ்சமாவது புரிந்து நடந்து கொள்…
அதனை நான் கண்டிக்க, அதுவோ விசும்ப ஆரம்பித்தது…
ஏய் அழாத… நான் சமாதானம் செய்ய,
என்னையும் அறியாது என் கைகள் உயர்ந்தது
கன்னத்தை தொட்ட கண்ணீரை தொட்டுப் பார்த்திட…
சட்டென எதிலிருந்தோ மீண்டது போல் ஓர் உணர்வு…
நானா இது?... மனதோடு உரையாடினேனா?..
என்னுள் இருக்கும் அது அழுகின்றதா?... இல்லை நானா?..
எனது கேள்விக்கே பதில் தெரியாது நான் திணறி நிற்கையில்
மனதில் ஓரத்தில் சிறியதாய் ஓர் வலி பட்டென உணர்ந்தேன்…
உன்னைக் காணாது நான் இவ்விதம் தவிக்கிறேன்றேனே…
இது இப்படியே தொடர்ந்தால், என் நிலை?....
யோசனை மூளையை எட்டிய தருணமே,
மனமோ நீ இன்னும் அவரை எனக்குக் காட்டலை என
உள்ளே குதித்து என்னை பாடாய் படுத்தியது…
உன்னை மாதிரி தானடி நானும் தவிக்கிறேன்…
கொஞ்ச நேரம் சும்மா இரு….
நீ வேற பார்க்கலை பார்க்கலைன்னு சொல்லி
அவரை மேலும் நினைக்க வைக்காதே…
முறைப்போடு மனதிடம் நான் கூற,
ஆமா என்னை மட்டும் திட்டுறியே…
நீ மட்டும் எப்படியாம்?... நான் உள்ளுக்குள் இருந்து தவிக்கிறேன்…
ஆனால் நீ… கண்ணாடியில் போய் உன் முகத்தை பார்…
அப்போது தெரியும் உன் தவிப்பு எத்தகையதென…
சட்டென உரைத்துவிட்டு அது சென்றிட,
கோபமாய் இருந்த நான், உண்மை உணர்ந்து தலைகுனிய,
அருகில் கேட்ட சத்தம் ஒன்று என்னை கீழே பார்க்க வைத்தது…
சாலையில் என் வீட்டைக் கடந்து வண்டியில் வந்து கொண்டிருந்தாய் நீ மெல்ல…
எங்கிருந்து தான் உற்சாகம் வந்ததோ?..
மனமோ ஆனந்த கூத்தாட, உதடுகளோ மலர்ந்து விகசித்தது
கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே…
ஹ்ம்ம்..கும்… என் சிரிப்பினை மனமானது கேலிசெய்திட,
நானோ கண்டுகொள்ளவில்லை…
பின்னே என்னவர் என்னைக் கடந்து செல்கையில்
அவரை ரசித்திடுவேனா?... அன்றி மனதோடு வாதிடுவேனா?...
நீங்களே சொல்லுங்கள்…
என்ன செய்திடுவேன் நான்?...
பூ மலரும்…
{kunena_discuss:1088}