எங்கே போகின்றதோ புரிதல்? - புவனேஸ்வரி
சின்ன சின்ன இரசனைகளில்
இணைந்து நின்றோம்
இதுவல்லவோ அன்பின் இலக்கணம்
என்று கர்வம் கொண்டோம்
சின்னதாய் சண்டை வந்ததும்
முகம் பார்க்க பிடிக்காமல் ஒதுங்கிவிட்டோம்
எங்கே போகின்றதோ புரிதல் ?
நீயின்றி நானில்லை என்கிறோம்
இரவையும் பகலையும் இலக்கியம் பேசி களிக்கிறோம்
மனம் நோகும் சுடுச்சொல் கேட்டுவிட்டால்
இவ்வளவு தானா நீ ? என்று உடைந்துபோகிறோம்
எங்கே போகின்றதோ புரிதல் ?
அழகழகாய் கவிதை வடிக்கிறோம்
கிறுக்கல்களுக்கும் பாராட்டு வாங்குகிறோம்
கோபம் என்ற பெயரில் வார்த்தைகள் சிதறிவிட்டால்
"ச்ச " என்ற சலிப்புடன் பின்வாங்குகிறோம்
எங்கே போகின்றதோ புரிதல் ?
உன்னை நான் அறிவேன் என்கிறோம்
என்னில் அனைத்தும் நீ என்கிறோம்
எவனோ எவளோ சொல்லும் கதைகேட்டு
அன்பில் நிறைந்தவரை அக்கினியில் நிற்க வைக்கிறோம்
எங்கே போகின்றதோ புரிதல் ?
மன்னிப்பு கேட்க நினைத்தாலும்
நமக்குள் எதற்கு மன்னிப்பென பெருந்தன்மையில் மிளிர்கிறோம்
உரிமையில் மன்னிப்பு கேட்காமல் போனாலோ
திமிர் தான் உனக்கு என உரைக்கிறோம்
எங்கே போகின்றதோ புரிதல் ?
கண் கலங்கினாலே காற்றை திட்டுவோம்
மாசற்ற காற்றை மனம் பிடித்தவருக்கு அனுப்பி வைப்போம்
மீண்டும் கண்ணீருக்கு காரணமாய் நாம் மாறிட
அதை ஏற்றுக்கொள்ளாமல் தட்டி கழிப்போம்
எங்கே போகின்றதோ புரிதல் ?
எந்த நேரமும் அருகில் இருப்பேன் என்போம்
கிடைக்கும் நொடிகளில் எல்லாம் அன்பை நிரப்புவோம்
முக்கியத்துவம் தன் தலைமைத்துவத்தை காட்டிட
தடம் தெரியாமல் விலகிவிடுவோம்
பிரிதலில் மெல்ல சாகின்றதோ இன்றைய புரிதல் ?
{kunena_discuss:779}