பேசித் தொ(ல்)லை! - விசயநரசிம்மன்
[பாரதியாரின் “தீராத விளையாட்டுப் பிள்ளை...” பாடலின் மெட்டு]
[பல்லவி]
சீரான விஞ்ஞான பிள்ளை - செல்போன்
தெருவிலே மக்களுக்(கு) ஓயாத தொல்லை...
[சரணங்கள்]
கண்களை அதன்மீதே வைப்பான் - தெருவில்
கவனமே வைக்காமல் கண்டபடி நடப்பான்
முன்னவும் பின்னவும் போகும் - மக்கள்
முகஞ்சு ளிப்பதனைத் தான் அறியாதே போவான்...
இல்லத்திற்(கு) ஓர்விருந்து வந்தால் - அவரை
இன்முகங் காட்டிவர வேற்றலும் இன்றி
செல்போனைக் கட்டிக்கொண்(டு) அழுவான் - அதனை
செல்லக் கடவுளென்(று) எண்ணியே தொழுவான்...
(சீரான...)
நல்லச் செவிகளிலே தோட்டைச் - சில
நங்கையர்க்(கு) அணிந்திடும் வழக்கமே போச்சே
செல்லக் கைப்பேசி அதுவே - அவர்
செவிகளில் தோடெனத் தங்கிடலும் ஆச்சே...
அந்தோ அதில்மணிக் கணக்காய் - நிதம்
அலுக்காமல் பேசிடும் அன்பரே கேளும்
வெந்தே அவிந்திடுமாம் மூளை - அது
வெளியேற்றும் நுண்ணலைக் கதிர்வீச்சினாலே...
(சீரான...)
பாய்ந்திடும் இரயில் தண்டவாளம் - அதனைப்
பார்த்துக் கடக்காமல் செல்பேசிக் கொண்டு
மாய்ந்திடும் மக்கள் பலர் இன்று - எமனின்
மாற்றென்று வந்ததோ கைப்பேசி? நன்று!
அன்றாடும் பயணிக்கும் சாலை - அதிலே
அடிக்கடி கைப்பேசி பலி வாங்கு(து) ஆளை
இன்னமும் பலநூறு தொல்லை - செல்லின்
இன்னலைச் சொல்லிடின் அதற்குண்டோ எல்லை?
(சீரான...)
அன்றோர் ஆதாமின் வீழ்ச்சி - அங்கு
அரவென வந்தவச் சாத்தானின் சதியாம்
இன்று பலகோடி ஆதாம் - தமக்(கு)
இந்தக் கைப்பேசியே வீழ்ச்சிக்குக் கதியாம்
மலரினும் மெலிதான காதல் - அதை
மலிவான பொருளாக்கி மாணவர்க்(கு) அளிக்கும்
விலைமிக்க கைப்பேசித் தூதன் - அதன்
விலையாக பருவத்தைத் தருகிறான் மூடன்...
(சீரான...)
அறிவியல் அழிவிற்காய் இல்லை - அந்த
அறிவியல் செடியிலே பூத்தநல் முல்லை
செறிவான செல்பேசி அதனைப் - பல
சிறப்புற பயன்கொளல் நமக்கெல்லாம் நன்று...
[முடிப்பு]
சீரான விஞ்ஞான பிள்ளை – செல்லைத்
திறமறிந்(து) ஆட்கொளின் தொல்லையே இல்லை!
{kunena_discuss:779}