கவிதை - எனது பேரங்காடி அனுபவம் - ரம்யா
வெகுநாள் கழித்து சந்திக்கும் நட்புகள்!
களிப்பில் திளைக்கும் புதுமணதம்பதிகள்!
காதல் கனவுகளுடன்
கைக்கோர்க்கும் பட்டாம்பூச்சிகள்!
பெண்களின் அழகை கண்களால் பருகும்
காளைகள்!
பொம்மை கடையை முற்றுகையிடும்
சிறார்கள்!
அந்த முற்றுகைக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் பெற்றோர்கள்!
கேலிகிண்டலாய் சத்தமிடும் உறவுகள்!
விதவிதமாய் அலங்காரங்கள்!
விண்மீன்களாய் மின்சார விளக்குகள்!
ரகமரகமாய் ஆடைஅணிகலன்கள்!
அனைத்தும் ஒரு சேர கண்ட களைப்பில்
ஓய்ந்து உட்காரும் பெருசுகள்.
எத்தனை மனிதர்கள் ,எத்தனை நிறங்கள்.
ஒரு நாளிலேயே உலகை வாங்க துடிக்கும்
நெஞ்சங்கள்.
இவர்கள் தேடல் என்ன? ஏன் பரபரப்பு?
கண்ணாடி பேழையில் அடைக்கப்பட்ட
பொருளுக்காகவா?
பகட்டு நாகரிகம் வளர்ந்த உலகில் ஒரு
அங்கமாகவா?
கேள்விக்கு மட்டுமே எட்டிய பொருள்
கைத்தீண்டலுக்கு சாத்தியமானதை
அனுபவிக்கவா?
பக்கத்து வீட்டைவிட விலை உயர்ந்த
பொருள் வாங்கவா?
இத்தனை ஆரவாரத்திற்கிடையில் ஒரு
மழலை குரல்,
"அம்மா அப்பா தினமும் இப்படி என் கோர்த்து போக வாங்க...ஜாலியா இருக்கு".
{kunena_discuss:779}