கவிதை - உன்னோடு - ரம்யா
உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்
புதிதாய் தான் பிறக்கிறேன் பழைய பாதை மறக்கிறேன்
கட்டியணைத்த சில தருணம்
முத்தமழையில் சில தருணம்
உன் அத்தனை தழுவளிலும்
கூச்சம் அறுந்த இன்ப தருணம்
உன்னோடு ஒவ்வொரு தருணம்
புதிதாய் தான் பிறக்கிறேன்
உனக்காக காத்திருந்த கண்ணீர் காலங்கள்
உன் சிறு கண்ணிமை சிமிட்டலில் கரைந்து போன தருணம்
ஏக்கங்கள் ஏற்றி நின்ற என் நெஞ்சுக்குழி பள்ளங்கள் எல்லாம்
உன் ஒற்றை தொடுதலில் மட்டும்முழுதாய் நிறைந்த தருணம்
உன்னோடு ஒவ்வொரு தருணம்
புதிதாய் தான் பிறக்கிறேன்
மூடி வைத்த என் தடமுலையும் உன் மூச்சுகாற்றில் மலர்ந்து
சிறுதுளியாய் என் உயிர்துளி உன் தொண்டை தாண்டிய அழகு தருணம்
கண்ணோடு கண் நோக்கி உன் இதழ் பூத்த புன்னகையோடு
அம்மா என்ற ஒற்றை வார்த்தை என் வாழ்வு நிறைத்த அமுத தருணம்
உன்னோடு ஒவ்வொரு தருணம்
புதிதாய் தான் பிறக்கிறேன்
பிஞ்சு கால்கள் கொஞ்ச கெஞ்ச ஒய்யார நடைபோட்டு வந்து
என் முந்தானை இழுத்து சிணுங்கிய ஒப்பில்லா ஒரு தருணம்
கோபம் கொட்டிய கொடுங்கனத்தில் இதழ் பிதுக்கி நின்று
கண்ணீர் தேக்கிய கண்ணில் ஏக்கம் காட்டிய கருணை தருணம்
உன்னோடு ஒவ்வொரு தருணம்
புதிதாய் தான் பிறக்கிறேன்
ஓயாமல் உன்னருகே நானிருந்து குதூகலிக்க
பள்ளி என்னும் பெயரில் உனை பிரிந்த ஏக்கத்தருணம்
ஊனும்உறவும் காலமும் நேரமும் மாற்றம் பல பெற்றிருக்க
அன்பு அன்றி எதுவும் நிலையில்லை என்றுணர்ந்த மெய் தருணம்
உன்னோடு ஒவ்வொரு தருணம்
புதிதாய் தான் பிறக்கிறேன்
விளையாட்டாய் உன் மடிசாய என் தலை கோதி
உச்சி பொட்டில் உன் இதழ் பதித்த ஈரத்தருணம்
உன் சின்ன கையால் சோறு ஊட்ட என்னோடு நீயும் வாய் பிளந்து
என் அப்பனாய் அன்னையாய் நீ மாறிய அந்த தருணம்
புதிதாய் தான் பிறந்துவிட்டேன்
பழமைகள் அறுத்துவிட்டேன்
பெண்ணாய் பிறக்க நான் செய்த தவப்பயனை
உன்னால் இன்று நிறைவாய்பெற்றுவிட்டேன்