கவிதை - நிலா தோழி... - ஜெப மலர்
வாடி போய் நின்ற நான்
வானில் நிலவை பார்த்தேன்!!!
தவித்து நின்ற எனக்கு
தனிமையில் துணையாய் சிரித்தது...
பிறை மதியாய் தேய்ந்தாலும்
பெளர்ணமி யாய் ஜொலித்தாலும்
நீல நிற வானம் என்னை
நினைக்க மறக்காது...
உன்னவன் வேலை பளுவினால்
உன்னை மறந்து விடுவானோ
என்று எண்ணி எண்ணி
ஏங்கி நிற்கும் உன்னை
பைத்தியம் என்று சொல்வதா??
பேதை என்று சொல்வது?
உயிரோடு கலந்து இருக்கும்
உன்னை எண்ணாமல் இருப்பானோ?
நினைவாக நிறைந்திருக்கும் உன்னை
நேசிக்க மறப்பானோ?
உன் கண்ணில் நீர் வருவதை
உன்னவன் அறியும் போது
உள்மனம் தவித்து போகுமே
அடியே பேதை பெண்ணே
அமைதியாய் இமை மூடு...
உன் மன அமைதியில்
உன்னவன் துயில் கொள்ளட்டும்...
உன் அளவில்லா நேசம்
உன்னவனுக்கு மகிழ்ச்சி அளிக்கட்டும்...
நினைவுகளை நெஞ்சில் புதைத்து விடு...
நேசித்தவனை நெருங்க முடியாத நேரத்தில்
புதையலை போல தேடி
பொக்கிஷமாய் அணைத்து கொள் நினைவுகளை...
தேய்ந்து போவது போல
தோன்றினாலும்
கரைந்து காரிருளாய் நின்றாலும்
கலக்கம் கொள்ளாதே...
முழு நிலவாய் பிரகாசித்து
முகம் காண ஓடி வருவான்...
உயிரோடு கலந்து இருக்கும் உன்னை
உள்மனதில் செதுக்கி இருக்கிறான்...
உணர்வாக கலந்து இருக்கும்
உங்கள் காதல்
அடிக்கரும்பினை போல
என்றென்றும் சுவை தரட்டும்..
தனிமையை நினைத்து
தவித்து போகாதே...
காதலனின் கரம் கோர்த்து
கனவுலகில் கவலை மறந்திடு...
ஓய்வெடுக்க நான் செல்கிறேன்
ஓய்ந்து போகாதே..
மீண்டும் சந்திப்போம்
மனதில் மகிழ்ச்சியோடிரு
என கூறி விடை பெற்றது நிலா!!
தனிமை மறைந்தது எனக்கு
துயில் கொள்ள செல்கிறேன்
என்னவனே உன் நினைவுகளளோடு!!