மாடியில் இருந்த ஊஞ்சலில் சக்திவேல் தாத்தாவும், குமரகுரு தாத்தாவும் அமர்ந்திருக்க கீழே வட்டமாய் நந்தகோபாலன், அகல்யா, குருப்ரசாத், அபிராமி, ஆதி, முத்தமிழ், கொளசி, யாழ், நந்தன் என்று அமர்ந்திருக்க தமிழினி குட்டியோ அவளது உலகில் தன் பொம்மைகளுடன் ஐக்கியமாகிவிட்டாள்.
வெகு நாட்கள் கழித்து குடும்பத்துடன் செலவளிக்கும் அந்த நிமிடம் நந்தனுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. மனதின் ஒரு ஓரத்தில் அவனது க்ரிஷ்ணாவின் நினைவுகளும்…. என்ன தான் ப்ரியா நந்தனை வேண்டாம் என மறுத்தாலும் அவன் மனம் கவர்ந்தவள் அவள் அல்லவா. “ம்மா ரொம்ப பசிக்குது சீக்கிரம் சாப்பாடு கொடுங்க… அது தான் இந்த மங்கூஷ் மண்டையன் வந்துட்டானே” என்று நந்தனை பார்த்தபடியே கேலியாய் யாழ் பேச “ஏன் டி அண்ணனை வம்பிழுக்கலைனா உனக்கு தூக்கமே வராதே” யாழை கடிந்தவாறே அகல்யா அனைவருக்கும் உணவை பிசைந்து கொடுக்க அந்த இரவின் குளுமையில் அவரின் கையினால் உண்ட உணவு அனைவருக்கும் தேவாமிர்தமாய் இருந்தது.
குடும்பத்தினரின் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க கடவுளிடம் மனு ஒன்றையும் சமர்ப்பித்திருந்தார் அகல்யா. நந்தனுக்குமே மனம் இலேசானது போன்ற உணர்வு. அனைவரும் உண்டு முடிக்க சுதா பாத்திரங்களை ஒழுங்கு படுத்தி வைத்தார். மணி பதினொன்றை கடந்திருக்க நந்தகோபாலனோ “என்ன முடிவு செய்து இருக்க நந்து?” என்று பேச்சை தொடங்கினார். “எதுக்கு பா?” என்ற கேள்வியை முன்வைத்தவன் “உன் திருமணத்தை பற்றி தான்” என்ற பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ஆதியும் முத்தமிழும் தமிழினி குட்டியை உறங்க வைக்க சென்றுவிட தாத்தாக்களும் உறங்க சென்றுவிட்டனர். அபிராமியும், அகல்யாவும் தோழிகளாய் பேசிக்கொண்டிருக்க யாழும் கொளசியும் இருவரையும் கலாய்த்துக்கொண்டிருந்தனர்.
“ப்ரியா கிட்ட பேசனும் பா” என்றதோடு முடித்துக்கொண்டான் நந்தன்.
“எதுவா இருந்தாலும் சீக்கிரம் பேசு அந்த பொண்ணும் எத்தனை நாளுக்கு தான் தனியாவே இருப்பா”
“சரி பா” என்றவன் மாடியில் ஒரு ஓரத்தில் கைகளை மார்பின் குறுக்கே கட்டியவாறு நின்றுவிட்டான்.
அவனருகில் சென்ற யாழோ, “டேய் எதுக்கு இப்போ சோகமா வயலின் வாசிச்சுட்டு இருக்க? மூஞ்சியை பாரு உராங்குட்டான் மாதிரி உர்ர்ர்ருனு” என முனகிக்கொண்டிருக்க அவளது முக பாவனையிலும் பேச்சிலும் சிரித்துவிட்டான்.