விஷயங்களில் தலையிட நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இருவரையும் பலமாகப் பிணைக்கும் கணவன்-மனைவி என்கிற பந்தத்தைத் தவிர வேறு என்ன உரிமையுடன் அவரைக் கேட்க முடியும்?' என்று ஒன்றும் புரியாமல் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே போட்டாள் சாவித்திரி. குமுறும் ஹிருதயத்தைக் கையில் அழுத்தியவாறு தேம்பித் தேம்பி அழுதாள் அவள். இந்த நிலையில் பிரமை பிடித்தது போல் அவள் வெகுநேரம் உட்கார்ந்து இருந்திருக்க வேண்டும்.
அறைக் கதவை யாரோ லேசாகத் தட்டினார்கள். சாவித்திரி எழுந்து கதவைத் திறந்ததும் மங்களம் வாயிற்படியில் நின்றிருந்தாள். "சாப்பிடாமல் மணி பன்னிரண்டு அடிக்கப் போகிறதே!" என்று அன்புடன் அவளை அழைத்தாள் மங்களம். அழுது ரத்த மெனச் சிவந்திருக்கும் மகளின் கண்களைப் பார்த்ததும் அந்தத் தாயுள்ளம் பாகாய்க் கரைந்தது. கையைப்பற்றி ஆசையுடன் அழைத்துப்போய் சமையலறையில் உட்கார்த்தி அன்புடன் உணவைப் பரிமாறினாள் மங்களம்.
-------------
தொடரும்