(Reading time: 8 - 15 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 20 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 20'தை பிறந்தால் வழி பிறக்காதா?

றக்குறைய ஆயிரம் பேர்களுக்குமேல் கூடியிருந்த அந்த மண்டபத்தில் சபைக் கூச்சம் எதுவும் ஏற்படாமல் தங்கம்: 'கணி' ரென்று பாடினாள். அவளுக்குத் துணையாக ஸரஸ்வதியும் மெதுவான குரலில் பாடவே அவளுக்கு அச்சம் எதுவும் ஏற்படவில்லை. தந்தப் பதுமைபோல் நின்று அவள் பாடிய அழகே அங்கு, வந்திருந்தவர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. ஸரஸ்வதி வருஷக்கணக்கில் சங்கீதம் பயின்றவள். அவள் முதல் கச்சேரியே மிகவும் தரமாக அமைந்துவிட்டது. அன்று அவள் பாடிய சங்கராபரணமும், தோடியும் வெகு நேரம் வரை எல்லோர் காதுகளிலும் ரீங்காரம் செய்துகொண்டிருந்தன. பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் எங்கும் நிறைந்த பரப்பிரும்மத்தை நாத ரூபமாக வணங்கினாள் ஸரஸ்வதி.

ரகுபதிக்கு அன்று, தான் விழாவில் கலந்து கொண்டிருக்கும் உணர்ச்சியே ஏற்படவில்லை. கானவெள்ளத்தில் : எல்லோரையும் இழுத்துச் செல்லும் ஸரஸ்வதியும், தன்னடக்கமாக அவன் வார்த்தைக்கு மதிப்பு வைத்து ஒரு நாளைக்குள் சிறிய பாட்டைப் பாடம் செய்து கச்சிதமாகப் பாடிய தங்கமும் மாறி மாறி அவன் அகக் கண்முன்பு தட்டாமாலை ஆடினர். குழந்தைப் பருவத்திலிருந்து பார்த்த ஸரஸ்வதியாக அன்று அவள் அவன் கண்களுக்குத் தோன்றவில்லை. ஒரே சமயத்தில் ஆயிரம் நாவுகளின் புகழுக்குப் பாத்திரமாகிவிட்டாள் அல்லவா? அவள் இனிமேல் சாதாரண விஷயங்களில் மனதைச் செலுத்தவும் மாட்டாள். தங்கம் அப்படியில்லை. வாழ்க்கையில் தனக்கு இனியனாக ஒருவன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கி நிற்பவள். பாட்டும், கதையும் தெரிந்து கொண்டிருந்தாலாவது கல்யாண 'மார்க்கெட்டில் விலை பெறுவோமா என்று காத்திருப்பவள். அவளை முன்பாகவே சாவித்திரியைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதற்கு முன்பாகவே பார்த்திருந்தால் தங்கத்தையே மணந்திருக்கலாம்.

"தங்கம்! என் துணிகளைத் துவைத்து வை" என்று உத்தரவு இடலாம். அதை அவள் சிரமேற்கொன்டு செய்து முடிப்பாள். "தங்கம்; ஏதோ உனக்குத் தெரிந்த பாட்டு இரண்டு பாடு மனசு என்னவோபோல் இருக்கிறது" என்றால் ஏதோ பாடியும் வைப்பாள். கலகலவென்று சிரிப்பாள். கோபம் வந்தாலும் உடனே தீர்ந்துவிடும். இப்பொழுது? அது தான் ஆங்கிலத்தில் சொல்லுகிறார்களே, ” அவசரமாக மணமுடித்து, சாவதானமாக யோசிப்பது" என்று. அந்த நிலைக்கு ஏறக்குறைய ரகுபதியின் நிலை வந்துவிட்டது.

விழாவில் நண்பர்கள் அவனைக் கேலி செய்தார்கள்.

"என்ன அப்பா! மனவியை இந்த மாதிரி சமயத்தில் ஊருக்கு அனுப்பிவிட்டாய். சகதர்மிணியோடு சேர்ந்து செய்கிற காரியத்துக்கே பலன் அதிகம் என்று சொல்லுவார்களே"

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.