Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 19 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 19. ' நந்தகோபாலனோடு நான்'
ஸரஸ்வதியின் இன்னிசைக் கச்சேரியின் அரங்கேற்றத்துடன் திறப்புவிழா இனிது முடிந்தது. சாவித்திரி வராமலேயே வைபவம் குறைவில்லாமல் நடந்துவிட்டது. அன்று காலைவரையில் தெருவில் போகிற வண்டியைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனாள் ஸ்வர்ணம்! ஊரில் தெரிந்தவர்கள் கேட்பதற்குப் பதில் சொல்லியே அவளுக்குச் சலித்துப்போய்விட்டது. முதல் நாள் அலமு, ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லிய செய்திகள் வேறு அவள் மனத்தை அரித்தன.
"நீதான் ஒருத்தருக்கும் ஒன்றும் தெரியாது என்று மூடி மூடி வைத்திருக்கிறாய். உன் நாட்டுப்பெண்ணின் பாட்டி இருக்கிறாளே, அவள், நாம் தான் அவள் பேத்தியைப் பாடாய்ப் படுத்தி வைக்கிறோம் என்று தம்பட்டம் அடித்து வருகிறாள். அதற்கு என்ன பண்ணப்போகிறாய் மன்னீ?" என்று அலமு ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டாள்.
ஸ்வர்ணத்துக்கு வியப்பும், கோபமும் ஒருங்கே ஏற்பட்டன. 'புருஷனுக்கும், மனைவிக்கும் ஏதோ சில்லறை மனஸ்தாபத்தால் பிறந்தகம் போயிருக்கும் பெண் கிளப்பிவிட்டிருக்கும் வதந்தி எவ்வளவு அபாண்டமாக இருக்கிறது? சாவித்திரியிடம் நான் எவ்வளவு அன்புடன் இருந்தேன்? இரண்டு வேளைகளிலும் தலை வாரிப் பின்னிப் பூச் சூட்டுகிறதும், பரிந்து பரிந்து சாதம் போடுகிறதுமாக இருந்தவளையே எப்படித் தூற்றிவிட்டாள் பார்த்தாயா?' என்று நினைத்து நினைத்து வருந்தினாள்
ஸ்வர்ணம்,
"என்ன அம்மா அப்படியே அசந்து நின்றுவிட்டாய்? சொல்லிவிட்டுப் போகட்டும் போ" என்று ரகுபதி தாய்க்கு ஆறுதல் கூறினான்.
தங்கமும், ஸரஸ்வதியும் விழாவில் குதூகலத்துடன் பங்கெடுத்துக்கொண்டார்கள். . எப்படிக் கூப்பிடுவது? என்ன உறவு என்று சொல்வது என்று கவனியாமல் தங்கம், ஸரஸ்வதி அழைப்பது போல், "அத்தான்!" என்று ஆசையுடன் ரகுபதியை அழைத்து ஓடி ஓடி வேலைகளைச் செய்தாள்.
" உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள். இதோ ஒரு நிமிஷத்தில் தயார்!" என்று சிரித்துக்கொண்டே பேசி அவன் மனத்தைக் கவர்ந்துவிட்டாள் தங்கம். ”உனக்குப் பாடத் தெரியுமா?" என்று ரகுபதி அவளை விளையாட்டாகக் கேட்டபோது. "ஓ!" என்று தலையை ஆட்டினாள் தங்கம். "பாடுவேன். ஆனால், ஸரஸு அக்கா மாதிரி தாளம் கீளம் போட்டுக்கொண்டு சுத்தமாகப் பாடத் தெரியாது. கிராமத்துக்கு வரும் சினிமாவிலிருந்து எவ்வளவு பாட்டுகள் கற்றுக்கொண்டிருக்கிறேன் தெரியுமா? மாட்டிற்குத் தீனி வைக்கும் போது பாடுவேன். கோலம் போடும் போது பாடுவேன்; ஸ்வாமிக்கு மலர் தொடுக்கும்போது பாடுவேன்;