"ஏனோடி அம்மா! ரொம்ப ' ஆகி'வந்த புடைவையோ இல்லையோ? அவசியம் எனக்கு வேண்டியதுதான். அதைக் கட்டிக்கொண்டு என் சுயம்வரத்துக்கு நான் நிற்க வேண்டியதுதான் பாக்கி!" என்றாள் சீதா.
சகோதரிகள் இருவரும் 'கலகல' வென்று சிரித்தார்கள்; சாவித்திரி இப்படிச் சிரித்து எத்தனை மாதங்கள் ஆயின? காகம் கத்தியது வீண்போகவில்லை. மனித உணர்ச்சிகளை அறியாத அடுப்பு ஊதியதும் பொய்க்கவில்லை. சந்துருவும், ரகுபதியும் வந்து சேர்ந்தார்கள். சாவித்திரி காமரா அறையிலிருந்து திருட்டுத்தனமாகக் கணவனைப் பார்த்தாள். துடிக்கும் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். 'வந்துவிட்டாரே' என்று மெல்ல வாய்க்குள் சொல்லிக்கொண்டாள். நிலைக் கண்ணாடி முன்பு நின்று விரலின் நுனியைமைச் சிமிழில் தோய்த்துக் கண்களுக்கு மை தீட்டிக்கொண்டாள். வாசனை வீசும் கதம்பத்தைத் தலையில் வைத்துக்கொண்டாள். புருவத்தின் இடையில் திலக மிட்டுக்கொண்டு, கோணல் சிரிப்புடன் கண்ணாடியில் தன் அழகைக் கவனித்தாள் சாவித்திரி. 'கட்டாயம் என் கருவிழிகளைக் கண்டு அவர் மயங்கவேண்டும். சிரிக்கும் உதடுகளைக் கண்டு பரவசமடைய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகத் என் அன்பினால் அவரை வெல்லவேண்டும்; அடிமைப்படுத்த வேண்டும். அது ஒன்றுதான் சிறந்த வழி!' என்று உவகை எய்திய சாவித்திரி ஆசை தீரக் கணவனை ஜன்னல் வழியாகவே பார்த்துக் களித்தாள்.
அன்று, வழக்கமாகக் கூடத்தில் காணப்படும் மங்களத்தின் படுக்கையைக்கூடக் காணோம். மறுபடியும் மாப்பிள்ளை வந்து 'டானிக்' கொடுத்து அவளைப் பிழைக்க வைத்துவிட்டான்!
தினசரி படிப்பதில் முனைந்திருந்த ராஜமையர் தம் மூக்குக் கண்ணாடியை நிதானமாகக் கழற்றி வைத்தார். பிறகு நிமிர்ந்து பார்த்து. "வா அப்பா ரகுபதி. அம்மா வரவில்லையா? ஸரஸ்வதி எங்கே?" என்று அழைத்தார். மாப்பிள்ளை மீது அவருக்கு ஏற்பட்டிருந்த கோபம் ஒரு நொடியில் மறைந்து போனது ஆச்சரியந்தான். வயதிலும், அனுபவத்திலும் பெரியவராகிய அவர் மாறியது ஒன்றும் வியப்பில்லை. யர் மாழு விட்டால் மங்களம் அவரை லேசில் விடமாட்டாள்.
"அத்திம்பேரே! நிஜமாகவே வந்து விட்டீர்களே! தீபாவளிக்கு வந்திருந்தால் ஒற்றை வரும்படி. அப்படி வராமற் போனதற்கு இப்பொழுது இரட்டிப்பாக வரும்படி தரப்போகிறீர்கள். தீபாவளிச் சீருடன், கார்த்திகைச் சீரும் சேர்ந்து கிடைக்கப் போகிறது" என்று கேலியாகச் சீதா கூறிச் சிரித்தாள்.
இவர்கள் பேச்செல்லாம் மங்களத்துக்கு ரசிக்கவில்லை. "ஒருவரை-ஒருவர் பிரிந்து மாதக் கணக்கில் இருந்திருக்கிறார்கள். எவ்வளவோ பேசவேண்டி இருக்கும். 'தொண தொண' வென்று