பார்வதிக்கு மட்டற்ற மகிழ்ச்சி யைத் தந்தது.
“தாங்கள் இனி எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. நாளைக் காலையில் நான் மீண்டும் வந்து பார்க்கிறேன்.... காமாட்சி! நீ பார்த்துக் கொள்கிறாயா? தூங்கிவிடப் போகிறாய்.... பாவம்! உனக்குத்தான் சிரமம்” என்று கூறி விட்டுப் புறப்பட்டார் சேதுபதி.
திரும்பிச் செல்லும்போது அவர் உள்மனம் அவரைக் கேட்டது.
'சேதுபதி! அவள் மீண்டும் மயக்கமுற்றுக் கீழே விழுவானேன்? உன்னுடன் ராஜா - பாரதி திருமணம் பற்றிப் பேசியபோது மகிழ்ச்சியோடு தானே காணப்பட்டாள்? அதிர்ச்சிக்கோ, கவலைக்கோ அதில் என்ன இருக்கிறது? உனக்கும் அவளுக்கும் ஏற்பட இருந்த உறவு முறை மாறி விட்டது என்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணமோ? அப்படி யானால், ’அமைதி நிம்மதி ' என்பதெல்லாம் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் பேச்சுத்தானா?’
ஒரு வாரம் கடந்தது. பார்வதியின் உடல் நிலையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. எழுந்து நடக்கவும் சக்தியற்ற வளாய்ப் படுத்த படுக்கையாகவே கிடந்தாள் அவள்.
டாக்டர்கள் மட்டும் வேளை தவறாமல் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஆனால் அவள் உடல் நிலையில் மட்டும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. இந்த நிலையில் திரு மணத்தை நடத்துவதற்கு வேண்டிய உற்சாகமோ ஊக்கமோ சேதுபதிக்கு எங்கிருந்து வரும்? ’திருமணத்தைத் தள்ளிப் போடுவதால் நிலைமை மாறலாம். இதற்குள் பார்வதியின் மனமும் மாறலாம்' என்ற சபலம் அவர் உள்ளத்தில் ஒரு பக்கம் ஒளிந்து கொண்டிருந்தது.
ஆனாலும் பார்வதிக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் அவர் சிறிதும் தயக்கம் காட்டவில்லை. திருமண ஏற்பாடுகள் ஜாம் ஜாம் என்று நடந்து கொண்டிருந்தன.
”காமாட்சி! அடுத்த வெள்ளிக் கிழமை முகூர்த்தம். நிச்சயம் செய்திருக்கிறேன். இன்னும் ஏழே நாட்கள் தான்.... கலியாணத்தை இந்த வீட்டிலேயே நடத்திவிட வேண்டியதுதான். இப்போதுள்ள நிலையில் பார்வதியால் ஓர் அடியும் அப்பால் நகர முடியாது...” என்றார் சேதுபதி.
"ஆயிரம் காலத்துப் பயிர்; ஆறஅமர யோசித்துக் கொஞ்சம் நிதானமாகச் செய்யலாமே..” என்றாள் காமாட்சி.
"முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் பார்வதியோ அவசரப் படுகிறாள். இந்த விஷயத்தில் அவள் விருப்பத்திற்கு மாறாக நடந்துகொள்ள எனக்குச் சம்மதமில்லை. எப்படியும் பாரதியும் ராஜாவும் ஒரு நாளைக்குக் கணவன் மனைவியாக வாழ வேண்டியவர்கள் தானே?... சுப காரியங்களைச் சீக்கிரமே முடிப்பது நல்லது தான்'' என்றார் சேதுபதி.
"அதுவும் சரிதான்; நீயே மாடிக்குப் போய் சேதியைச் சொல்லிவிடு...'' என்றாள் காமாட்சி.
சேதுபதி மாடிக்கு ஏறிச் சென்றபோது பார்வதி மிக்க மகிழ்ச்சியுடன் “அடுத்த வெள்ளிக் கிழமையா முகூர்த்தம்? ரொம்ப சந்தோஷம்! முகூர்த்தப் புடவைகளெல்லாம் நானேதான் 'ஸெலக்ட்’ செய்யப்