தலையா... மரியாதி போயிடும், சும்மா இருய்யா” என்றான் இன்னொரு பையன். அவனுக்கு மல்லிகா தன்னைக் காதலிப்பதாக ஒரு பிரமை. அப்படியே காதலிக்கவில்லை என்றாலும், இப்படிச் சொன்னதால், இனிமேலாவது காதலிப்பாள் என்கிற தன்னம்பிக்கை. காதல் பாதி நிறைவேறிவிட்டதில், அவனுக்கு ஒரு திருப்தி. அதாவது அவன் ரெடி.
பல மாணவர்கள் கவர்ச்சியாகவும், கழுத்தையறுத்தும் பேசிய பிறகு, சரவணன் பேசினான். பொருளாதார உரிமை வந்தால் தான் பெண்ணுரிமை வருமென்றும், ‘பொருளா? தாரம்’ என்ற நிலை இருக்கும் வரை பெண்ணுரிமை வெறும் மேடைப் பேச்சே என்றும், ‘பண்’ செய்து அவன் பேசிய போது, பலத்த கைத்தட்டல். “தாய்மார்களே” என்று விழிக்கும் ஒவ்வொருவனும், பதினெட்டு வயதுப் பெண்ணைப் பார்க்கையில், “இந்த வயதில் என் அம்மாவும் இப்படித்தான் இருந்திருப்பாள்” என்றும், எண்பது வயதுக் கிழவியைப் பார்க்கையில், “என் அம்மாவும் இந்த வயதில் இப்படித்தான் இருப்பாள்” என்றும் நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் காலந்தான் பெண்ணின் விடிவுக்காலம், உரிமையைப் பற்றிப் பேசத் தேவையில்லாத அளவிற்கு ஏற்படும் ‘பொற்காலம்’ என்று அவன் சாதாரணமாகப் பேசியபோது, கைதட்டிப் பாராட்டினார்கள்.
இந்தத் தடவையும் முதற்பரிசு சரவணனுக்கே. வழக்கமாக இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசு பெறும் மல்லிகாவுக்குப் பதிலாக இன்னொருத்தி வாங்கினாள்.
மல்லிகா, சக தோழிகள் “ஏன் பேசவில்லை” என்று கேட்டால் எப்படிப் பதிலளிப்பது என்று புரியாமல், அந்த தர்மசங்கடத்தைத் தவிர்ப்பதற்காக, தமிழ் உதவிப் பேராசிரியர், ‘நன்றி’ சொல்லிக் கொண்டிருந்த போது, அவள் கல்லூரி வாசலுக்கு வந்துவிட்டாள். ஆட்டோ ரிக்ஷாக்காரரை பன்னிரெண்டு மணிக்கு வரச் சொல்ல வேண்டும் என்று முந்திய இரவு நினைத்தவள், தான் ராமனுக்கு மனைவியாகலாம் என்ற அவலத்தில் அதை மறந்துவிட்டாள்.
மெள்ள நடந்து கொண்டிருந்தாள்.
“நீங்கள் ஏன்... இன்றைக்குப் பேசவில்லை...” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
சரவணன்!
சைக்கிளை மெதுவாக விட்டுக் கொண்டு, பெடலை லேசாக அழுத்திக் கொண்டு, அவளுக்கு இணையாக வந்தான். பிறகு, அவளுக்கு மதிப்புக் கொடுப்பவன் போல், சைக்கிளை விட்டு இறங்கினான்.
“சொல்லுங்க... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”
மல்லிகா, அவனை நிமிர்ந்து பார்த்தாள். மானசீகமாக அவனருகிலேயே அந்த ராமனை நிறுத்திப் பார்த்தாள். வேறு பக்கமாகத் திரும்பி, கண்ணீரை உதிர்த்துக் கொண்டாள். அவளுக்கு