சரவணன் மீது எப்போதுமே ஒரு மரியாதை உண்டு. அழகில் சாதாரணமானவன் தான். ஆனால் பேச்சாற்றலும், எல்லோரையும் தன்னைப் போல் நினைத்து மனம் விட்டுப் பழகும் சுயமரியாதையும், அவனுக்கு ஊன அழகு கொடுக்காத, ஒரு ஞான அழகைக் கொடுத்திருத்தது. குறைந்தபட்சம், அப்படி இருப்பதாக பல பெண்கள் நினைத்தார்கள். மிதவாதியான மல்லிகா, இந்த நினைப்பைப் பொறுத்த அளவில் ஒரு தீவிரவாதி. தன்னை மீறிய, தன்னையே அறியாத ஒரு தீவிரவாதி.
“சொல்லுங்க... ப்ளீஸ்... எதற்காகப் பேசவில்லை? பையன்களின் கலாட்டாவுக்குப் பயந்துட்டீங்களா?”
மல்லிகா பேசப் போனாள். அப்படிப் பேசப் போனால், அழுகை வந்திடும் போல் தோன்றியது. அடக்கிக் கொண்டாள். பிறகு, தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். அவனிடம் ஓராண்டு காலமாக சாதாரணமாகப் பேசிப் பழகுபவள். அந்த உரிமையில் தான், அவனும் கேட்டான். ஆகையால் இப்போதும் சாதாரணமாக ஆனால் உள்ளர்த்தத்துடன் பேசினாள்.
“பெண்கள்... பொருளாதார விடுதலை இல்லாததாலே... கணவன்மார் செய்யும் கொடுமையை... சகிச்சிக்கிறதாச் சொன்னீங்க... உண்மைதான். அதே சமயம்... கல்யாணம் ஆகாத பொண்ணுங்களும், பொருளாதாரப் பாதுகாப்புக்காக ஒரு... ஏதோஒரு இனம் புரியாத பாசத்தாலும், வேண்டப்படாத இடத்தைப் பிடிச்சுக் கிட்டே இருக்கலாம் இல்லையா?”
“நீங்கள் என்ன சொல்றீங்கள்?”
“நான் கேட்கிறது... பொருளாதார, சமூக நிர்ப்பந்தத்தால் கல்யாணம் ஆகாமல் இருக்கிற பெண்களுக்கும் ஏதாவது செயல் திட்டம் இருக்கா?”
“நீங்கள் பேசுவதைப் பார்த்தால்... சொந்த அனுபவம் மாதிரி...”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் கொடுத்து வச்சவள். எல்லாப் பெண்களுக்கும் ஒரு அப்பா அம்மா. எனக்கு ரெண்டு அப்பா அம்மா. என் பிரச்சினை கிடக்கட்டும், அது... வேண்டாம், விட்டுடுங்க. குறிப்பிட்ட ஒரு பழக்க வழக்கத்தில் ஆட்பட்ட பெண், அந்தப் பழக்க வழக்கமான சமூகத் தட்டுலே இருந்து தாழ்ந்து போகாமல் இருக்க, அவளோட உரிமையை மட்டும் கேட்டால் போதாது. ஒரு பணக்கார இளைஞன் அவளைக் கல்யாணம் பண்றதினாலும் முடிந்து விடாது. இதுக்கு வேறே வழி இருக்கா?”
”கொஞ்சம் யோசிக்கிறேன். ஒரு நிமிடம்... கொடுங்க வந்து... ஒரு பெண் சமுதாயத் தட்டில் இருந்து கீழே இறங்கிடுவோமோன்னு பயப்படாமல் இருக்கணுமுன்னா, கீழ் தட்டுன்னு ஒண்ணு இருக்கப்படாது. அதாவது, எல்லாம் பொருளாதார சமத்துவம் பெறணும். பெண்கள் பிரச்சினை தனிப்பிரச்சினை அல்ல. அரிஜனப் பிரச்சினையைப் போல அது ஒரு சமூகப் பிரச்சினை. சரி, ஓட்டலில் ஒரு காபி குடித்துக் கொண்டே பேசலாமே?”