Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 01 - சரோஜா ராமமூர்த்தி
1.1. விடி வெள்ளி
பசுமலைக் கிராமம் பனிப் போர்வை போர்த்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது கார்த்திகை மாதத்தின் கடைசி. எந்த நம்பிக்கையும் ஆசையும் அவளைத் தூண்டுகோல் போட்டு அந்தக் கிராமத்துக்கு இழுத்து வந்ததோ, அந்த நம்பிக்கை வறண்டு விட்டது. பவானி பெருமூச்சு விட்டபடி படுக்கையில் புரண்டு படுத்தாள். விடிய இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்தது. விடிந்து தான் அவள் என்ன புதுமையை அடையப் போகிறாள்? அண்மையில் படுத்திருந்த அவள் மகன் பாலு. நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அந்தப் பச்சிளம் முகத்தில் வருங்காலத்தைந் பற்றிய சிந்தனைகளையோ, கவலைகளையோ காண முடியாது தெளிந்த நீரைப் போலவும் நிர்மலமான ஆகாயத்தைப் போலவும் அம் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.
பவானி நன்றாக விழித்துக் கொண்டாள். அறையின் ஜன்னல் வழியாக வெளியே தெரியும் ஆகாயத்தைக் கவனித்தாள். சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து ஓய்ந்த வான வெளியில் திட்டுத் திட்டாக மேகங்கள் சிதறிக் கிடந்தன. அவை வான வெளியில் மெதுவாக தளர்ந்து செல்வதைக் கவனித்த பவானிக்கு மனிதனின் ஆசைகளும், எண்ணங்களும் முடிவு தெரியாத ஒரு நோக்கதுடன் ஓடுவதைப்போல இருந்தன. மேகக் கூட்டங்கள் எங்கேதான் போகின்றன? கடுங்கோடை...க்கு அப்புறம் வறண்டுபோன வயல்களுக்கும், நீர் நிலைகளுக்கும் மரையைப் பொழிந்துவிட்டு அவை மீண்டும் பிரயாணத்தைத் தொடங்குகின்றன. ஆனால், தன்னுடைய வறண்டு போன வாழ்க்கை வளம்பெற வழி இருக்கிறதா?
பவானி, அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கபடமில்லாத முகத்தைக் கவனித்தாள். களங்க மற்ற அந்த முகம் ஒன்று தான் அவளுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. அவனுடைய சிறு கரங்களைச் சேர்த்து தன் கைக்குள் பற்றிக் கொண்டாள். 'இன்று இவை சிறு கரங்கள் தான். ஆனால், நாளடைவில் வளர்ந்து வலிமை பெற்று விடும். பிறகு வாழ்க்கையில் ஆதரவற்றுப்-போன தனக்கு ஆதரவு தரும் அன்புக் கரங்களாக அவை மாறும்' என்றெல்லாம் பவானியின் எண்ணங்கள் ஊர்ந்தன.
படுக்கையின் தலைமாட்டில் கோட் ஸ்டாண்டில் மாட்டியிருந்த கம்பளிச் சட்டை, ஷர்ட், வேஷ்டி, கைக் குட்டை முதலியவை அவளைப் பார்த்துச் சிரித்தன.
கயிற்றுக் கட்டிலின் மீது விரிக்கப் பட்டிருத்த மெத்தை வெறிச் சென்று கிடந்தது. சில மாதங்களுக்கு முன்பு நோயாளியாக அந்தக் கட்டிலின் மீது வாசு படுத்திருந்தான். நோயாளி என்று சொல்லித்தான், பலரும் அவனை ஒரு நோயாளியாகக் கருதினார்கள் - துல்லியமான வேஷ்டியும், அதன் மீது வெண்ணிற ஷர்ட்டும் அணிந்து, மேலே கம்பளிச் சட்டையை