தெருவில் மாட்டு வண்டி வந்து நின்றது. பவானி கல்யாணராமனையும், பார்வதியையும் வணங்கினாள். கல்யாணம் உணர்ச்சிப் பெருக்கால் கண்களைச் சிறிது நேரம் மூடியபடியே இருந்தார்.
”உனக்கு எந்தவிதமான ஆசியை நான் வழங்குவது அம்மா? இந்த ஊருக்கு வரும் போது மஞ்சள் குங்குமத்துடன் வந்தாய். நோயாளிக் கணவனுக்காக உயிருக்கு மன்றாடினாய். மலர வேண்டிய உன் வாழ்வு கருகி விட்டதே என்று நான் மனதுக்குள் மாய்ந்து போனேன். இருண்டு போன உன் வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்ட உன் மகன் பாலு இருக்கிறான். அவனை ஜாக்கிரதை யாகப் பார்த்துக் கொள். நீ எப்பொழுது இந்த ஊரை நாடி வந்தாலும் என் வீட்டிற்கு வரலாம்" என்றார் அவர்.
பவானி பேச முடியாமல் திணறினாள். பார்வதியை நீர் பெருகும் விழிகளால் பார்த்தாள். 'மாமி' என்று அழைக்கிறவள். 'அம்மா' என்று கூப்பிட்டாள். அவளை அப்படியே அணைத்துக் கொண்டு குலுங்கக் குலுங்க அழுதாள்.
”பவானி பைத்தியம், பைத்தியம். ஏன் இப்படி அழுகிறாய்?" என்று பார்வதி அவளைத் தேற்றினாள்.
”இந்த மாதிரி மாசில்லாத அன்பை நான் சென்னையில் எங்கே பார்க்கப் போகிறேன்?" பவானி அழுது கொண்டே பார்வதியை இவ்விதம் கேட்டாள்.
"நீ பைத்தியம் தான் போ! உன் மனசிலே அன்பு நிறைந்திருக்கும் போது பிறத்தியார் உள்ளத்திலும் அன்பு தான் நிறைந்திருக்கும். உன்னை வெறுப்பவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்" என்றாள் பார்வதி. பிறகு இருவரும் அழுகையையும் பேச்சையும் நிறுத்தி விட்டு மூட்டை முடிச்சுக்களை வண்டியில் ஏற்றுவதற்கு முனைந்தனர்.
"ரயிலடிக்கு நானும் வருகிறேனே" என்று கல்யாணம் அவளைக் கேட்டார்.
”வேண்டாம். மாமா! ஊருக்குப் போய்விட்டு வந்ததிலிருந்து உங்களுக்கு உடம்பு சரியில்லை.