ஆனால் நீங்கள் சிரமப்பட வேண்டாம். எனக்கு ஒரு சின்ன உதவிதான் தேவை. மிஸ்டர் கல்யாண சுந்தரத்தைப் பார்க்க வந்தேன். அவர் இங்கே இல்லை என்று தெரிகிறது. அவர் வந்தால் ஒரு செய்தி சொல்லி விட்டால் போதும்" என்றாள்.
அவன் வந்தால் சொல்வது என்ன. அவனே வந்தாச்சு! வாடாப்பா கல்யாணம்! உன்னைத் தேடிக் கொண்டு அதிர்ஷ்ட தேவதையே வந்திருக்கிறது!" என்று சுரம் இறங்கிய குரல் ஒன்று ஒலித்தது.
பவானி திரும்பிப் பார்த்தாள். "என் பாக்கியம்! என்னைத் தேடி வந்தீர்களா?" என்று கல்யாணம் கேட்டபடியே அவளை நெருங்கினான்.
"உங்களைப் போன்ற ஒரு பரோபகாரி நண்பராகக் கிடைத்தது என் பாக்கியம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றாள் பவானி.
"மிஸ்டர் கல்யாணம்! இப்போது கூட ஓர் உதவி கோரித்தான் வந்தேன். எனக்காக அல்ல. இந்த ஊருக்குப் புதிதாக ஒரு குடும்பம் வந்திருக்கிறது. ஊர் எல்லையில் மதகடியில் அவர்கள் திண்டாடிக் கொண்டிருந்தார்கள். 'கல்யாண சுந்தரம் என்று இந்த ஊரில் இருக்கிறார். ரொம்ப நல்லவர். உங்களுக்கு நிச்சயம் உதவுவார். நான் போய் அவரை அனுப்புகிறேன்' என்று சொல்லி விட்டு வந்தேன். மாலை நேரத்தில் இங்கே தான் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை. வாசலில் மாஜிஸ்திரேட்டைப் பார்த்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்ததில் வந்த காரியம் மறந்து தாமதமாகி விட்டது. நன்றாக இருட்டியும் விட்டதே! அவர்கள் அங்கே தவித்துக் கொண்டிருப்பார்கள்!"
"தவிப்பதா? நான் இருக்கும் போதா? அதுவும் நீங்கள் பிரியப்பட்டுச் சொன்ன பிறகா? நோ, நோ! அவர்களுக்கு ஜாகை பார்த்துக் கொடுத்து விட்டுத்தான் வருகிறேன்!"
"நிஜமாகவா? ஆல்ரெடி?"