Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 09 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 9 -- நெருப்பாக ஒரு நெடுமூச்சு
மாசிலாமணி முதலியார் தம் மனைவியிடம், "இந்த வீட்டுக்காரர் என்ன, நாம் ஒரு நாள் தங்கினாலும் ஒரு மாதத்து வாடகை கொடுத்தாக வேண்டும் என்று சொல்லி விட்டுப் போகிறாரே, இது என்ன அநியாயம்?" என்று அலுத்துக் கொண்டார்.
"அந்தப் பிள்ளை அவரைத் தூக்கி அடிப்பது போல் பேசுகிறான். 'ஒரு மாதமென்ன மூணு மாத வாடகை வேணுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்' என்கிறான். இந்த மாதிரி ஊதாரியை நான் பார்த்ததே இல்லை" என்றாள் காமாட்சி.
"அவர் விளையாட்டுக்காக அப்படிச் சொன்னார் அம்மா!" என்றாள் கமலா.
இதற்குள் முன் பக்கம் சற்று நசுங்கிப் போன கோலத்தில் வாசலில் கார் வந்து நின்றது. கல்யாணமும் பவானியும் இறங்கி உள்ளே வந்தார்கள்.
"ஆமாம்; விளையாட்டாகத்தான் சொன்னேன்" என்றான் கமலா கூறியதைக் கேட்டுக் கொண்டே வந்த கல்யாணம். "ரங்கநாத முதலியார் கடுமையாகப் பேசுகிறாரே ஒழிய ரொம்ப நல்லவர். நீங்கள் இருக்கிற நாளைக்கு வாடகை கொடுங்கள் வாங்கிக் கொள்வார்."
பவானி, "உங்களுக்கு இங்கே எல்லாம் வசதியாக இருக்கிறதா?" என்று கேட்டாள். கல்யாணத்தைத் தேடிப் பிடித்து உங்களிடம் அனுப்புவதாகக் கூறிவிட்டு வந்தேன். ஆனால் இவரை நான் காண்பதற்கு முன் இவரே உங்களைப் பார்த்து விட்டார்."
"அப்படியொன்றும் வசதியான வீடு என்று சொல்வதற்கில்லை" என்றாள் காமாட்சி.
"இந்தப் பழைய வீட்டுக்கு எழுபத்தைந்து ரூபாய் வாடகையாமே?"
"அப்படித்தான் சொல்வார். கொடுத்ததை வாங்கிக்கொள்வார்" என்றான் கல்யாணம்.
"ஏன் மாமா! சுவரிலே ஆணியே அடிக்கப் படாதோ? அக்காவின் கண்ணாடியை