Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 10 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 10 -- தலைகீழ் உலகம்!
ராமப்பட்டணம் அட்வொகேட், 'ஹோம் ரூல்' கோபாலகிருஷ்ணன் வீடு ஜே ஜே என்று இருந்தது. சென்னையிலிருந்து வந்த உற்றார் உறவினரும் தெரிந்த மனிதர்களும் மட்டுமின்றி முன் பின் தெரியாதவர்கள் கூட ஒருசிலர் அந்தப் பெரிய வீட்டில் முகாமிட்டிருந்தனர். முற்றத்தின் இரு புறமும் இருந்த நாலு பெரிய அறைகள் இவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன.
பின்பக்கம் கிணற்றில் வாளியில் நீர் இழுத்துக் கொட்டிக் கொண்டு குளித்தபிறகு தலையைத் துவட்டியபடியே அப்போது மிகப் பிரபலமா யிருந்த தியாகராஜ பாகவதர் பாடல் ஒன்றைப் பாடியவாறு முற்றத்துக்கு வந்தான் கல்யாணசுந்தரம். முற்றத்தின் இரு பக்கமும் இருந்த நாலு அறைகளையும் நோட்டம் விட்டான். அவற்றின் வாசலில் ஜப்பான் அறை, ஜெர்மன் அறை, அமெரிக்கா அறை, பிரிட்டிஷ் அறை என்று பெயர்கள் வர்ண சாக்பீஸால் எழுதப் பட்டிருந்தன. இவர்களுள் யாரை அழைத்துக் குசலம் விசாரிக்கலாம் என்று சற்று நேரம் யோசித்தவனாக நின்ற கல்யாணம், கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக, "ஜப்பான் மாமா! பொழுது விடிந்து எழுந்தாச்சா? ராத்திரி நன்றாகத் தூங்கினீர்களா?" என்று குரல் கொடுத்தான். முற்றத்தின் இடது பக்க அறை ஒன்றிலிருந்து குள்ளமாக ஒருவர் வெளிப்பட் டார். "ஆகா! ஆனந்தமாகத் தூங்கினேன். லோகோபகாரிகளாக நீயும் உன் அப்பாவும் இருக்கிறபோது எனக்கு என்ன கவலை? கவலையே இல்லாததாலே தூக்கத்துக்கும் குறைவில்லை. ஆனா... ஒரு விஷயம் மட்டும் உன் காதிலே போட்டு வைக்கணும். கல்யாணம்! பக்கத்து அறையிலே இருக்கே ஒரு கடுவன் பூனை. அவன் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு!"
"ஏன்? என்ன நடந்தது?"
"நேற்று இரண்டணா கொடுத்து ஒரு வாரப் பத்திரிகை வாங்கிக் கொண்டு வந்து வைத்தேன். இன்று காலையில் காணோம். அவன்தான் எடுத்திருக்கணும். ஏன்னா அதிலிருந்த ஒரு விகடத் துணுக்கை இவன் பெண்டாட்டி கிட்டச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தான். விடுவேனா பிடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேன்."
"ஏன் ஜப்பான் மாமா, ஜெர்மன் மாமாவே அதைக் காசு கொடுத்து வாங்கி யிருக்கக் கூடாதா?"