"கேட்கிறதை உடனே கேளுங்களேன். அதுக்குக் கூட வேளை லக்னம் எல்லாம் பார்க்கணுமா என்ன?" என்று மேஜை மீது இருந்த போன் ரிஸீவரை எடுத்துக் கொடுத்தாள் செல்லம்.
கல்யாணம் குபீரென்று சிரித்தான்.ஆனால் அவன் தந்தைக்கு தம் மனைவியின் அறியாமையையும் வெகுளித்தனத்தையும் எண்ணியபோது நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது.
'ஹோம் ரூல்' என்று சொல்கிறோம். இயக்கம் கூட நடத்துகிறோம்.ஆனால் சராசரி இந்திய மக்கள் இப்படி அறியாமையில் மூழ்கி இருக்கும்போது வெள்ளைக்காரன் பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்து விட்டு எப்படி வெளியேறுவான்? அப்படியே அவன் வெளியேறினாலும் கிடைக்கும் சுதந்திரத்தை மக்கள் எப்படிப் போற்றிக் காப்பாற்றப் போகிறார்கள்?' என்று சிந்தனையில் ஆழ்ந்தார்.
"அப்பா! அம்மாவுக்கு எல்லாம் விவரமாக விளக்கிச் சொல்லுங்கள். சாயந்திரம்வரை பொழுது போய் விடும். அதற்குள் நான் கிளப்புக்குப் போய் வந்து விடுகிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் கல்யாண சுந்தரம்.
"காலை வேளையில் என்னடா கிளப்?" என்றாள் செல்லம்.
"ஞாயிற்றுக் கிழமைதானே அம்மா? நாள் முழுவதும் நாடக ஒத்திகை நடக்கிறது. வரட்டுமா?"
அவள் பதிலுக்குக் காத்திராமல் அவன் புறப்பட்டு விட்டான்.
சமூக சேவா சங்கம் இயங்கிய கட்டடத்தின் வாசலில் காரை நிறுத்திவிட்டுக் கல்யாணம் கீழே இறங்கியதும் இறங்காததுமாக ஒரு பையன் ஓடோடி வந்தான். "ஸார்! மாஜிஸ்டிரேட்டுக்கு உங்களை ஒரு நிமிஷம் பார்க்க வேண்டுமாம்" என்றான்.
"அப்படியா? இதோ!" என்று கல்யாணம் கூறிவிட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தடி நாற்காலியில் அமர்ந்திருந்த கோவர்த்தனனை நோக்கி நடந்தான். "குட் மார்னிங்" என்றதும், அவர், "உட்காருங்கள் மிஸ்டர் கல்யாணம். நாடகமெல்லாம் எந்த மட்டில் இருக்கிறது?" என்று