விசாரித்தார்.
"ஐந்தாறு நாட்கள்தானே ஒத்திகை நடந்திருக்கிறது? இன்னும் ஒரு மாதமாவது ஆகும் அரங்கேற."
"கல்யாணம்! ஐ லைக் யூ. உங்க பரோபகார குணமும் ஊரு முழுக்கப் பிரசித்தி. அதை நான் வரவேற்கிறேன். சந்தோஷப் படறேன். இப்பக்கூடப் பர்மா அகதிகளுக்காக நிதி திரட்ட நாடகம் போடுகிறீர்கள். ரொம்ப 'நோபிள் மைண்ட்' இருந்தாத்தான் அப்படி யெல்லாம் உதவத் தோன்றும். அதை நான் பாராட்டறேன். நானே உங்க நாடகத்துக்குத் தலைமை தாங்கி நடத்தித் தரதாக்கூட முடிவு செய்திருக்கேன். என்னால் எவ்வளவு முடியுமோ ஹெல்ப் பண்ணறேன்."
"தாங்க்யூ ஸார்! தாங்க்யூ!" என்று கல்யாணம் குதூகலத்துடன் சொன்னான். "உங்க ஒத்துழைப்பு இருந்தால் எங்களுக்குப் பெரிய பலம்."
"ஆனா ஒண்ணு, மிஸ்டர் கல்யாணம்! கொஞ்சம் யோசித்துப் பாருங்க. இருபது ஆண்பிள்ளைத் தடியன்களுக்கு மத்தியிலே ஒரு பெண்ணை இழுத்து நிற்க வைச்சு, நடிக்கச் சொல்றது நல்லா இருக்கா? இட் இஸ் நாட் கரெக்ட். அது மட்டும் எனக்குப் பிடிக்கலை!"
"அழகுதான் போங்கள்!" என்று சிரித்தான் கல்யாணம். எங்க நாடகக் குழுவிலே இருபதே பேர் தான். ஆனா இந்தக் கிளப்பிலே இருநூறு பேர் அங்கத்தினர்கள். இருநூறு தடியன்களுக்கு மத்தியில் அவளை இந்தக் கிளப்பில் சேர அழைப்பு விடுத்த நீங்களே இருபது தடியன்களுக்கு மத்தியில் அவள் நடிக்கக் கூடாது என்று சொல்வது என்ன நியாயம்? நீங்கள் தினம் அவளுடன் டென்னிஸ் ஆடலாம். நான் தினம் அவளுடன் சேர்ந்து நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கக் கூடாதா?"
"கல்யாணம்! புரியாதது மாதிரி நடிக்காதீர்கள். நடிப்பெல்லாம் நாடகத்தோடு நிற்கட்டும். என்னுடன் அவள் டென்னிஸ் ஆடுவது வேறு; உங்கள் காதலியாக அவள் மேடை ஏறி நடிப்பது வேறு!"
"எப்படி வேறாக முடியும்? இரண்டும் இருவித விளையாட்டுத்தான். பொழுது போக்குத்தான்."