"அந்தக் கஞ்ச மகாபிரபுவா வாங்குவான்? நேற்று சாயந்திரம் ஹோட்டலுக்குள் நுழையறான்; எதிரேயே நான் நிக்கறேன். உபசாரத்துக்குக்கூட 'வா'ன்னு சொல்லலையே!"
"இதோ பாருங்க, நீங்க சண்டை போடறது பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் ஜப்பான் மாமாவாகிய நீங்கள் பக்கத்து அறைவாசியான ஜெர்மன் மாமாவோடு சண்டை பிடிக்கக் கூடாது. இரண்டு பேருமா சேர்ந்து கொண்டு எதிரே இருக்கும் பிரிட்டிஷ் அமெரிக்க அறைகளில் உள்ளவர்களோடு யுத்தம் பண்ணுங்கள்; வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் சரித்திரத்தையே மாற்றி விடாதீர்கள்! என்ன, புரிந்ததா?"
ஜப்பான் அறை விருந்தினரைத் திரு திருவென்று விழிக்க வைத்து விட்டுக் கல்யாணசுந்தரம் ரேழிக்குப் பக்கத்தில் தன் தகப்பனாரின் காரியாலய அறையை அடைந்தான்.
அலமாரியைத் திறந்து சட்டையை மாட்டிக்கொண்டே, "அப்பா! உலகமே தலைகீழாக மாறிப் போச்சு" என்றான்.
காலைப் பத்திரிகையைச் சாவகாசமாக ராகம் போட்டுப் படித்துக் கொண்டிருந்த "ஹோம்ரூல்' கோபாலகிருஷ்ணன் சாய்வு நாற்காலியில் சற்று நிமிர்ந்து, "கவனித்தேன், காதில் விழுந்தது" என்றார்.
"அதைச் சொல்லவில்லை அப்பா. அலமாரிக்கு மேலே பாருங்கள்" என்றான் கல்யாணம்.
மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டு பத்திரிகையை ஒரு உதறு உதறிவிட்டு, அண்ணாந்து நோக்கினார், கோபாலகிருஷ்ணன். அங்கே மெய்யாலுமே உலகம் தலைகீழாக இருந்தது."சே! அந்தக் 'குளோ'பைச் சரியாக நிமிர்த்தி வைடா. யார் செய்த விஷமம் இது?" என்றார் தந்தை.
"ஒருவரும் விஷமம் பண்ணவில்லை. அம்மா நேற்று ஒட்டடை அடித்தாள்.அப்போ அந்த ஒட்டடைக் காம்பு பட்டுக் கீழே விழுந்திருக்கும்.திருப்பி வைக்கிறப்போ உலக்கத்தையே கவிழ்த்து விட்டாள்! இதனால் என்ன விபரீதம் எல்லாம் நேரப் போகிறதோ?"