"இதோ இப்போதே விபரீதம் வந்து கொண்டே இருக்கிறது" என்றார் தம் மனைவி அறைக்குள் நுழைவதைக் கடைக் கண்ணால் நோக்கி விட்ட கோபாலகிருஷ்ணன்.
"விபரீதம் என்ன, பிரளயமே வந்தாலும் நீங்கள் மாற மாட்டேள், உங்கள் பிள்ளையும் மாற மாட்டான். நானும்தான் கேட்கிறேன்.இது என்ன வீடா,ஸவலை ராமசாஅமி முதலியார் சத்திரமா? வீட்டில் கால் வைக்க இடமில்லையே?இப்படி உங்கள் பிள்ளை அக்கிரமம் பண்ணுகிறான். நீங்களும் தட்டிக் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்."
"ஏன் உன் பிள்ளை இல்லையா? நீதான் கேளேன்!"
"நீங்கள்தான் அவனுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்து விட்டீர்கள்."
" நான் செல்லம் கொடுத்தேனா? உன் பேரே செல்லம். என் பேரில் பழியைப் போடுகிறாயே!"
"ஆமாம், எல்லாம் நான் சொல்கிறபடிதான் நடக்கிறதாக்கும்?"
"பின்னே, அப்பாவுக்கு 'ஹோம் ரூல் கோபாலகிருஷ்ணன்'னு பேர் வந்ததே அதனால்தானே அம்மா?"
"நீ சும்மா இருடா. எனக்கு இன்றைக்கு இரண்டிலொன்று தெரிந்தாக வேண்டும். இங்கே டேராப் போட்டிருக்கிறார்களே இவர்களெல்லாம் இன்னும் எத்தனை நாட்கள் இங்கே இருக்கப் போகிறார்கள்?"
"யுத்தம் முடிகிற மட்டும்."
"யுத்தம் எப்போ முடியும்?"
"ஹிட்லருக்குப் போன் போட்டுக் கேட்டுச் சொல்கிறேன்" என்றார் கோபாலகிருஷ்ணன்.தந்தை மகன் இருவர் முகங்களிலும் புன்னகை அரும்பியது.