நமக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்கக்கூடாதோ?" என்றாள் காமாட்சி.
"கிடைப்பான், கிடைப்பான். இவன் அப்பா இந்த ஊரிலேயே பெரிய வக்கீலாம்" என்றார் மாசிலாமணி.
இந்தச் சமயத்தில் கமலா மெல்ல நழுவிக் காமிரா உள்ளில் இருந்தபடி ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தாள். கல்யாணமும் பவானியும் சிரித்துப் பேசியபடி காரின் முன்புறம் அருகருகே அமர்வதைக் கண்டாள். கார் கிளம்பி விரைந்தது. நெடுமூச்சு ஒன்று அவள் நெஞ்சிலிருந்து அவளையும் அறியாமல் எழுந்தது. நெருப்பாக அவளைத் தகித்தது அது.
"இவன் தகப்பனார் பெரிய வக்கீலா யிருந்தால் என்ன? என் அப்பா கூடத்தான் தாசில்தார்" என்று காமாட்சி சொல்லிக் கொண்டிருந்தாள்.
"போதும்; போதும்! உன் பிறந்த வீட்டுப் பெருமையை ஆரம்பித்து விடாதே! அவ்வளவு லஞ்சம் வாங்கிச் சேர்த்தாரே காலணா மிச்சம் வைத்து விட்டுப் போனாரா? அத்தனையையும் அழிச்சு ஒழிச்சார்."
"ஐயய்யோ, அந்த உத்தமரைப் பற்றி அப்படிச் சொல்லாதீர்கள். பணம் காசைக் கையாலும் தொட மாட்டாரே!"
"லஞ்சம் வாங்குகிற எந்தப் பேர்வழி ஒத்துக் கொள்வான். தான் பணம் காசுக்கு ஆசைப்படுவதாக? அகப்பட்டுக் கொண்டால் வழக்காடக்கூட உண்டியல்தான் குலுக்குவான்."
"போதுமே அம்மா உன் பேச்சு! பேசாமல் படுத்துக் கொள்ளேன்" என்றாள் கமலா.
"இன்னும் சாப்பாட்டுக் கடையே முடியலையேடி?"
"அப்படியாவது அவா வாங்கி அனுப்பிச் சாப்பிடணுமா? அவரிடம் காசையாவது கொடுத்திருக்கக் கூடாதா? எனக்கு வேண்டாம் சாப்பாடு. எனக்குப் பிடிக்கவுமில்லை. பசிக்கவுமில்லை. போய்ப் படுத்துக்கறேன்" என்றாள் கமலா.