Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 08 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 8 -- காதலை வளர்த்த கார்!
பவானியைத் தெரியாதவர்கள் ராமப்பட்டணத்தில் யாரும் கிடையாது. அவளிடம் பேசிப் பழகாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவளை, அவள் அங்கு வந்த நாளிலிருந்தே அனைவரும் அறிவார்கள்.
எனவே அந்த வாலிபர்களுக்கு வாயடைத்துப் போயிற்றென்றால் அது, 'யார் இந்தப் பெண்? என்று புரியாததால் அல்ல. 'பவானி இங்கே எப்படி வந்தாள்? எதற்காக? என்று புரியாதது ஒரு காரணம். 'எவ்வளவு நேரமாக இங்கு நிற்கிறாள். தாங்கள் தர்க்கம் புரிந்ததையும் நாடக ஒத்திகை நடத்தியதையும் எவ்வளவு தூரம் பார்த்திருப்பாள்? அப்படி பார்த்திருந்தால் தங்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருப்பாள்?' என்றெல்லாம் சிந்தனைகள் அடுக்கடுக்காக எழுந்ததால் வியப்பும் வெட்கமும் ஒருங்கே அடைந்தது மற்றொரு காரணம்.
சில வினாடிகள் பொறுத்துப் பிரமிப்பிலிருந்து விடுபட்ட ஒருவன், "வாருங்கள், உட்காருங்கள்" என்று ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அதனைக் கைக்குட்டையால் துடைத்தான். அவ்வளவுதான். அத்தனை இளைஞர்களும் திக்பிரமையிலிருந்து விடுபட்டவர்களாக அவளை உபசரிக்கத் தொடங்கினார்கள்.
"டேய் பையா! காண்டீனில் பாதம் அல்வா பாக்கியிருக்கா? இல்லை எல்லாவற்றையும் விழுங்கித் தொலைத்து விட்டார்களா? போய்ப்பாரு!" என்று அதட்டல் போட்டான் ஒருவன். இன்னொருவன், "இழவு இந்த அறையில் ஃபானே இல்லை. வெந்து புழுங்குகிறது. அந்தக் கிழம் கட்டைகள் சீட்டாடுவதற்கு எதற்கு டேபிள் ஃபான்? சீட்டுப் பறக்கும். அதைப் போய் எடுத்து வருகிறேன்" என்று கூறிவிட்டு விரைந்தான். மூன்றாவதாக ஒருவன் ஆரஞ்சு கலர் ஒன்றை உடைத்துக் கண்ணாடி டம்ளரில் ஊற்றினான்.
நாற்காலியில் அமர்ந்த பவானி, "உங்கள் உபசரிப்புக்கெல்லாம் ரொம்ப தாங்ஸ்.