Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 07 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 7 - பிரமிக்க வைத்த பவானி
சமூக சேவா சங்கத்தின் கட்டிடத்துக்குள் இரண்டு மூன்று அறைகள் இருந்தன. பெரிய கூடம் ஒன்றில் சீட்டாடுவதற்காகப் பல மேஜைகள் போடப்பட்டிருந்தன. ஓர் அறையில் புத்தக அலமாரிகள், சில மேஜை நாற்காலிகள், வேறு ஒரு அறையில் பிலியர்ட்ஸ் டேபிளைச் சுற்றிச் சிலர் ஜோக் அடித்துச் சிரித்தபடியே பந்துகளைக் குச்சியால் தட்டிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவதாகப் பின்புறம் இருந்த ஓர் அறைதான் மிக முக்கியமானது. அதுதான் அங்கத்தினர்களுக்கு டிபன், காப்பி தயாராகும் சமையலறை. ராமப்பட்டணம் சோஷியல் சர்வீஸ் கிளப்பின் ரவா கேசரியும் உருளைக்கிழங்கு போண்டாவும் சுற்று வட்டாரத்தில் ஏழெட்டு மைல்களுக்கு ரொம்பப் பிரசித்தி. சோஷியல் சர்வீஸ் கிளப் என்பதில் 'சர்வீஸ்' என்ற பதத்தை மறந்து விட்டு சோஷியல் கிளப்பாக அது பிரமாதமாக நடந்து வந்தது.
கல்யாணசுந்தரம் அதில் சேர்ந்த பிறகு சமீப காலமாகப் புரட்சி கரமான சில மாறுதல்களைப் புகுத்தி யிருந்தான். அவனுக்கு இளம் அங்கத்தினர்களிடையே ஆதரவும் இருந்ததால் நூலகத்தில் ஆங்கில நாவல்களுடன் பல தமிழ்ப் புத்தகங்களும் வந்து சேர்ந்தன. அவற்றில் சில துப்பறியும் அல்லது சமூக நாவல்கள். வேறு பல 'இந்தப் புரட்சி', 'ஏழை அழுத கண்ணீர்', 'உலகம் உருப்படுவது எப்படி?', 'எரிமலை', 'அக்னி ஆறு' முதலிய பல பயங்கரப் பெயர்களைக் கொண்டிருந்தன.
இவற்றுள் ஒன்றைப் பாதி படித்துக் கொண்டிருந்த வாலிபன் ஒருவன் பட்டென்று அதை மூடிவிட்டு, "இந்த உலகம் ஒருநாளும் உருப்படப் போவதில்லை" என்ற மகத்தான உண்மையைப் பளிச்சென்று சொன்னான்.
"உலகத்தின் பேரிலே உனக்கு என்னப்பா அவ்வளவு கோபம்?" என்றான் இன்னொருவன்.