மூளையிலேதான் முதன் முதலில் இந்த அபூர்வமான யோசனை உதித்திருக்கிறது என்று நினைக்காதே! இரணிய கசிபு காலத்திலிருந்து எத்தனையோ பேர் கடவுளை ஒழித்துக் கட்டியாகி விட்டது."
"நிறுத்துங்க அப்பா, உங்கள் வெறும் பேச்சை! பேசிப் பேசி என்ன பிரயோஜனம்? பேச்சைக் குறையுங்கள்; காரியத்தில் செய்து காட்டுங்கள்!"
"நாங்களா வேண்டாம் என்கிறோம்? காரியத்தில் ஏதாவது செய்து காட்டத்தான் இங்கே கூடியிருக்கிறோம். அந்தக் கல்யாண சுந்தரம் இன்னும் வந்து தொலையலையே?"
"கல்யாணம் வரும் வரை நாம் காத்திருப்பானேன்! நாம் ஆரம்பித்தால் அவன் வருகிற போது வந்து சேர்ந்து கொள்கிறான்."
"சரி, ஆரம்பித்து விடுவோம்."
சிலர் தபலா, ஆர்மோனியம் முதலிய வாத்தியக் கருவிகளைக் கொணர்ந்தார்கள். சுருதி கூட்டிக் கொண்டு கடவுள் வணக்கப் பாட்டைப் பாட ஆரம்பித்தார்கள்.
திடீரென்று ஒருவன் பெஞ்சு மீது ஏறி நின்று கொண்டு, "ஆ! ஏழைகள்! ஏழைகள்! ஏழைகள் படும் பாட்டை நினைத்து என் ரத்தம் கொதிக்கிறது! இதயம் வெடிக்கிறது! என் தொண்டை காய்கிறது! அடே, பையா! ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வா!" என்றான்.
"அடசீ! கேட்டதுதான் கேட்டாய். சோடாவாகக் கேட்கக்கூடாதோ? நாடக ஒத்திகைக்கென்று வாங்கி வைத்திருக்கிற சோடாக் கலரை யார் குடிச்சுத் தீர்ப்பது?"
இந்தச் சந்தர்ப்பத்தில் அறை வாசலில் வந்து நின்ற பவானி, "நாடக ஒத்திகை ரொம்பத் தீவிரமாக நடக்கிறது போலிருக்கிறதே" என்றாள்.