"ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் எல்லோருக்கும் பெருமை தரக் கூடிய விஷயம் சொல்லப் போகிறேன். உமாகாந்த் கல்லுரிக்கு ஒழுங்காகப் போய் வந்தாலும் படிப்பில் சூரன் என்றாலும் புரட்சி உள்ளம் கொண்டவன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவன் குடும்பத்தினராகிய எங்களுக்கே தெரிவிக்காமல் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகச் சில ரகசிய வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறான். ஸி.ஐ.டி.க்கள் அதை அறிந்து கொண்டு விட்டனர். அவனை அரெஸ்ட் செய்து இரண்டே நாட்களில் மாஜிஸ்திரேட் முன்னால் சாட்சியங்கள் சமர்ப்பித்து உள்ளே தள்ளிவிட்டனர். ஆறு வருஷ தண்டனை. மேல் கோர்ட்டில் அப்பீலுக்குப் போகக் கூடாதென்று உமாகாந்த் என்னைத் தடுத்துவிட்டான்!" கருணாகரன் கண்களைக் கைக் குட்டையால் துடைத்துக் கொண்டார்.
"அழாதீர்கள், ஸார்! இப்படிப்பட்ட புதல்வனைப் பெற்றதற்காக ரொம்பப் பெருமைப்படலாம் நீங்கள்" என்றாள் பவானி. அவன் எழுதிய சரித்திர வியாசம் பற்றிச் சொன்னாள். அதைக் கேட்டு இலேசாகச் சிரித்தார் உமாகாந்தின் தகப்பனார் கருணாகரன்.
"செய்யக் கூடியவன்தான்" என்றார் பெருமிதத் தொனியில். "எனக்குச் சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை!"
"எங்கள் நிலையும் அதுதான் ஸார். மாணவர்களுக்கு என்றுமே உமாகாந்திடம் ரொம்ப மதிப்புண்டு. அவர்கள் அவர் சிறை புகுந்ததற்காக வருந்துகிறார்கள். அதே சமயம் அவரது துணிச்சல், வீரம், லட்சியப் போக்கு எல்லாம் எங்களை மேனி சிலிர்க்க வைக்கிறது." பவானி பொங்கிக் கொண்டு வந்த அழுகையைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.
மாமா குணசேகரனிடம் தற்போது தனக்குத் திருமணத்தில் நாட்டமில்லை என்று உறுதியாகவும் இறுதியாகவும் கூறிவிட்டு மாடியில் தன் தனி அறைக்கு வந்து சேர்ந்த பவானி, உமாகாந்தனைக் குறித்த இந்தப் பழைய சம்பவங்களையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டாள்.
கூடவே சமீபத்திய மர்மமான நிகழ்ச்சிகளின் மீதும் அவள் சிந்தனை திரும்பியது. உமாகாந்தனுக்கும் மாஜிஸ்திரேட் கோவர்த்தனனுக்கும் இடையே உள்ள விசித்திரமான உருவ ஒற்றுமையை அவள் எண்ணிப் பார்த்தாள். கோவர்த்தனன் கண்ணாடி போட்டிருக்கிறார். மீசை