கிடையாது. உடை, விஷயங்களில் வேற்றுமை உண்டு. எல்லாம் சரிதான் ஆனாலும் முகத்தில் உமாகாந்தனின் ஜாடை நிறைய இருக்கத்தான் செய்கிறது. கோவர்த்தனன்பால் தான் ஈர்க்கப்பட்டிருப்பதற்கும் நெருங்கிப் பழகி நட்பை வளர்த்துக் கொள்வதற்கும் அது ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
"இந்த மலைச் சாரல்களில் ஸி.ஐ.டி.கள் தப்பி ஓடிய கைதி ஒருவனைத் தேடுகிறார்கள். அவர்கள் கரத்தில் இருந்த புகைப் படத்தைப் பார்த்தேன். கோவர்த்தனன் போலவே இருந்தது. மாஜிஸ்திரேட் ஒரு வேஷதாரி. மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டு மீசையையும் எடுத்துவிட்டார் என்றாலும் அந்தப் படத்தில் இருந்தது கோவர்த்தனனே தான்' என்று அழுத்தம் திருத்தமாக அன்று கல்யாணம் கூறியதை அவள் எண்ணிப் பார்த்தாள்.
அன்று அவள் எப்படிப் பதறிப் போனாள்? கோவர்த்தனனிடம் அவள் ஏற்கனவே உமாகாந்தனின் சாயலைக் கண்டிருந்தாள். ஆகவேதான் அப்படிக் கலவரம் அடைந்திருந்தாள். சிறையிலிருந்து தப்பி ஓடி வந்திருக்கும் அந்தக் கைதி உமாகாந்தனாகவே இருப்பானோ என்ற வலுவான சந்தேகம் ஏற்பட்டது. 'அவர் ஒருவேளை நான் இங்கிருப்பதை அறிந்து கொண்டு இந்த வட்டாரத்தில் ஒளிந்து வாழ்கிறாரோ? என்னை ரகசியமாக ஓரிடத்தில் சந்திக்கச் சமயம் பார்த்திருக்கிறாரோ' என்றெல்லாம் கற்பனை செய்தாள். அதனால்தான் கல்யாணத்திடம் ஸி.ஐ.டி.க்களைச் சந்தித்து, புகைப்படத்தைப் பார்த்தது முதலான விவரங்களை யாரிடமும் கூறக் கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டு கையடித்துச் சத்தியமும் பெற்றுக் கொண்டாள் பவானி.
இப்போது எண்ணிப் பார்த்தபோது எல்லாமே அசட்டுத்தனமான முடிவுகளாக அவளுக்குத் தோன்றியது. 'ஆறு ஆண்டு தண்டனை முடிய இன்னும் இரு ஆண்டுகள் இருக்கின்றன. இந்தச் சயமயத்தில் போய் உமாகாந்தன் சிறையிலிருந்து தப்பி ஓடி வருவாரா? அவரைப் போன்றவர்கள் சிறை செல்வதைத் தியாகம் என்றும் கௌரவம் என்றும் கருதுபவர்கள் ஆயிற்றே? திருட்டுக் குற்றம் புரிந்தவன் தப்பி வர முயலலாம். தியாக வேள்வி நடத்துபவன் சிறையின் துயரங்களுக்கு அஞ்சுவானா? கல்யாணம் பார்த்த புகைப்படம் உமாகாந்தனாய் இருக்கவே முடியாது. வேறு யாராவதுதான் இருக்க வேண்டும்.
'அப்படி ஒரு வேளை உமாகாந்தான் தப்பி வந்தது உண்மையானால் தேசபக்தர்களின் நோக்கில் அது தகாத காரியமாகிவிடுமே? அத்தகைய காரியத்தில் அவரை இறங்கத் தூண்டியது எது?