"சரியாப் போச்சு. நீ இப்போ அந்தக் கவலையிலே இறங்கிட்டியா? முடிச்சுப் போடறதைப் பற்றி முதலில் யோசித்து முடிவு செய்!"
"யோசனை என்ன வந்தது, யோசனை? சரின்னு சொல்ல வேண்டியதுதான். ஆனால் பல்லைக் காட்டிக்கிட்டு ஓடாமல் கொஞ்சம் கிராக்கி செய்து கொள்ளலாம். ரொம்பவும் அலட்சியம் பண்ணினாலும் ஆபத்து. சந்தர்ப்பம் கைநழுவிப் போய்விடும்."
"கமலாவைக் கேட்க வேண்டாமா, ஒரு வார்த்தை?"
"அவளை என்ன கேட்கிறது? பதின்மூன்று வருஷங்களாக அவளைக் கேட்டுக் கொண்டா எல்லாம் செய்தோம்? அப்படிக் கேட்க வேண்டும் என்றால் நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்க பேசாமல் இருங்க."
இந்தச் சம்பாஷனையை வெளித் திண்ணையில் இருந்தபடி கேட்டுக் கொண்டிருந்த கமலாவுக்குத் தரையிலிருந்து பூமி நழுவிச் செல்வது போல் இருந்தது. துயரக் கடலின் ஆழம் காண முடியாத அடிவாரத்தை நோக்கி அவள் மூழ்கிச் சென்று கொண்டிருந்தாள்.
நன்றாகப் படித்துப் பெயர் பெற்ற விஞ்ஞானியாகவோ டாக்டராகவோ விளங்க வேண்டும் என்ற அவள் லட்சியக் கோட்டை அவள் எதிரேயே இடிந்து தகர்ந்து மண் மேடாகியது.
'படிப்பும் வேண்டாம். பதவியும் வேண்டாம். பணம், புகழ் எதுவும் வேண்டாம். கல்யாணத்தின் காலடியில் இருந்து அவனுக்குப் பணிவிடைகள் செய்யும் பாக்கியம் கிட்டினால் போதும்' என்ற அவளுடைய அளப்பரிய ஆசையில் கூடை கூடையாய் மண் விழுந்தது!
அம்மா தன்னிடம் சற்றுக் கடுமையாக நடந்து கொள்வதற்கு அவள் சுபாவம்தான் காரணம் என்று தான் இதுவரையில் நம்பி வந்தது அசட்டுத்தனம் என்பது புரிந்து போயிற்று. அவள் தன் அம்மாவே அல்ல; மாசிலாமணி தன் அப்பாவே அல்ல! தான் ஒரு அனாதை; கல்யாணம் ஏதோ நாடகம் நடத்துகிறாரே. பர்மா அகதிகளுக்கு நிதி திரட்ட என்று. அந்த அகதிகளைவிடக் கேவலமான ஜன்மா தன்னுடையது! 'நான் யாருக்குப் பிறந்தவளோ, எப்படிப் பிறந்தவளோ?