குழந்தைப் பிராயத்தில் காணாமல் போனவளோ, அல்லது அவமானச் சின்னமேதானோ? இப்படிப்பட்ட நான், கல்யாணத்தின் கரம் பற்றுவது பற்றி நினைத்துக்கூடப் பார்த்திருக்கலாமா?
'என்னை வளர்க்கும் பணியில் கடந்த பதின் மூன்று வருஷங்களாக அடைந்து வந்த கஷ்ட நஷ்டங்களுக்குப் பிரதியாக இன்று என்னை அப்பாவும் அம்மாவும் விற்கத் தீர்மானித்து விட்டார்கள். ஆட்டைக் கொழுக்க வைத்துக் கசாப்புக் கடைக்காரனிடம் தள்ளுவதுபோல் என்னையும் ஒப்படைக்கத் தீர்மானித்துவிட்டார்கள். அவர்களை நொந்து கொண்டு என்ன பயன்? என் திருமணத்தை ஒரு வியாபாரமாகக் கருதாமல் இருக்க அம்மா என்ன, என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்றவளா? இல்லையே?"
மாலை மாலையாகக் கண்ணீர் பெருக்கிப் பிரமை பிடித்தாற் போல் நின்று கொண்டிருந்த கமலாவை விசுவின் குரல் உலுக்கி எழுப்பியது.
"அக்கா, அக்கா! உனக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன். கல்யாணம் மாமா கொடுத்து அனுப்பினார்!"
"என்னடா பரிசு?" கேவலுக்கிடையே வெளிப்பட்டன வார்த்தைகள்.
"முதல் நாள் அன்றே நாடகம் பார்க்க நாலு டிக்கெட்! இதோ பார்த்தியா? கணையாழியின் கனவு - அட்மிட் ஒன்! இது டிராமா நோட்டீஸ்!"
கமலா பார்த்தாள். விளம்பரத் தாளில் கல்யாணத்தின் படம். புன்னகை தவழும் சுந்தரமான முகம். அதன் அருகேயே கதாநாயகியாக நடிக்கும் பவானியின் சிரிப்புக் குமிழியிடும் அழகிய வதனம்!
அவள் மனக் கண்ணுக்கு மற்றொரு படம் தென்பட்டது. அது ஒரு திருமணத்தின் போது எடுத்த புகைப்படம்.
மணமகள் கமலா. மணமகன் அறுபத் திரண்டே வயதான திருவாளர் ரங்கநாதன்!