"அண்ணா ! இவர் தான் மூர்த்தி என்கிறவர்" என்று கூறி, அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தைப் பற்றியும் தெரிவித்தாள். டாக்டர் ஸ்ரீதரன் மூர்த்தியை ஒரு கணம் நிதானித்து நிமிர்ந்து பார்த்தார்.
'உட்காருங்கள். நீங்கள் இருப்பது சென்னையிலா? பெற்றோர் எங்கே இருக்கிறார்கள்?" என்றும் விசாரித்தார்.
இதற்குள் சுவாமிநாதன் ஆவலே உருவாக அவசரத்துடன் ஹாலுக்கு வந்தார். ஆசையுடனும், ஆர்வத்துட னும் தான் வளர்த்த ராதாவின் கரம்பிடிக்கப் போகும் புருஷனைப் பார்த்தார். டாக்டர் ஸ்ரீதரனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்த மூர்த்தி, சுவாமிநாதனைப் பார்த்த தும் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.
"ஆமாம், உங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் இருக்கிறார்களா? கல்யாண விஷயமாக யாரைக் கலந்து பேச வேண்டும்? விலாசம் கொடுங்கள். எழுதுகிறேன்" என்று கேட்டார் ஸ்ரீதரன்.
மூர்த்தி ஒரு மாதிரியாகச் சிரித்தான்.
"எனக்குத் தாய் தந்தை இல்லை. மாமாவும் மாமியும் பசுமலையில் இருக்கிறார்கள். அவர்கள் தான் நெருங்கிய உறவினர்கள்."
"சரி, அவருக்கே எழுதுகிறேன்."
"அதுவும் அவசியமில்லை. மாமா அநேகமாக என் விவகாரங்களில் தலையிட மாட்டார். உனக்குப் பிடித்த பெண்ணாக வந்தால் சொல். கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று தான் சொல்லுவார்."
"அப்போ உங்கள் மனசுக்கு எங்கள் ராதாவைப் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள்" என்றார் டாக்டர் ஸ்ரீதரன். சிரித்துக் கொண்டு எதிரில் உட்கார்ந்திருந்த ராதாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது. மேஜை மீது சிற்றுண்டி வைக்கப்பட்டிருந்தது.