"எனக்கு ஏன் அவன் கடிதம் போடப் போகிறான்? அவனைப்பற்றி இன்று வரையில் எனக்கு ஏதாவது தெரிந்திருந்தால் தானே? நீதான் எல்லாவற்றையும் மறைத்து விட்டாயே, அவன் சிறைக்குப் போவதைக் கூடப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டாய், அவ்வளவு தன் மானம் உடையவள் நீ. உடன் பிறந்தவனிடம் கூட விஷயமெல்லாவற்றையும் ஒளித்து விட்டாயே?" மூர்த்தி யால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சகிக்க முடியாமல் வெறுப்புடன் தன் சகோதரியைச் சுட்டுப் பொசுக்குவது போல் பார்த்தார் ஸ்ரீதரன்.
”அண்ணா! என்னை ஒன்றும் சொல்லாதீர்கள். தாய் தந்தையின் முகம் தெரியாமல் இருந்த பாவியை தாயும், தந்தையுமாக இருந்து வளர்த்த உங்களிடம் நான் நடந்து கொண்ட முறையை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அண்ணா! அவர் எத்தனையோ தவறுகள் செய்திருக்கிறார். அவருக்கு எத்தனையோ பெண்களிடம் நட்பு. அதற்காக பணம் தேவைப்பட்டது. என் நகைகளைக் கூட விற்று எடுத்துக் கொண்டிருக்கிறார். என் நகைப் பெட்டியை என் அனுமதி இல்லாமல் திறந்து எடுத்துப் போயிருக்கிறார். இதைத் திருட்டு என்றுகூடச் சொல்லலாம்?" ராதா ஸ்ரீதரின் கரங்களைத் தன் கண்களில் புதைத்துக் கொண்டு கோவென்று கதறினாள்.
அந்தப் பிரபல டாக்டர் தம் கடமையே கண்ணாகக் கருதுபவர். சமூகத்தில் மிக உயர்ந்தவராக எல்லோராலும் மதிக்கப் பெற்றவர். எப்பொழுதும் மனதில் உயர்வான எண்ணங்களையே வைத்திருப்பவர், யாரோ ஒருவன் புரிந்த குற்றத்திற்கு அவர் தலை குனிய வேண்டி இருந்தது. உண்மையிலேயே டாக்டர் ஸ்ரீதரன் தம் தலையைக் குனிந்து கொண்டார். நீதிபதியின் முன்பு மூர்த்தி தலை குனிந்தானோ இல்லையோ. ஸ்ரீதரன் இப்போது தம் வீட்டில் தலை குனிந்து உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கி இருந்தார்.
ஆத்திரம் அடங்கியவுடன் ஸ்ரீதரன், 'இனிமேல் நான் என்ன அம்மா செய்ய முடியும்? விசாரணைக்கு முன்பாவது ஏதாவது செய்திருக்கலாம். விசாரணை யெல்லாம் முடிந்து விட்டதாம். குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டானாம் உன் புருஷன். தண்டனையும் சற்றுக் கடுமையாகத்தான் இயக்கும் என்று அவன் மாமா கல்யாணராமன் தகவல் விசாரித்து எனக்கு எழுதியிருக்கிறார். ' விஷயத்தை இவ்வளவு தூரத்துக்குக் கொண்டு வந்து விட்டீர்களே! உங்கள் செல்வாக்கைப் பயன் படுத்தி இருக்கலாமே. ஒரு வேளை உங்களுக்கே தெரியாதோ?' என்று கேட்டிருக்கிறார். என் செல்வாக்கை நான் உபயோகிப்பதா? பணக்காரர்கள் எல்லாம்